IPL 3 ஆரம்பம்.. அணிகள் ஒரு பார்வை.

ARV Loshan
19


மீண்டும் உலக கிரிக்கெட் திருவிழா ஆரம்பிக்கிறது.
இன்று முதல் ஏப்ரல் 25 ஆம் திகதி வரை இனி ஒவ்வொரு நாளும் IPL தான் ஒவ்வொருவர் பேச்சாகவும்,பலரின் மூச்சாகவும் இருக்கப் போகிறது.

கடந்த வருடம் தென் ஆபிரிக்கா சென்று மீண்டும் IPL தாயகம் திரும்புவது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், முன்னைய இரு தொடர்களைப் போலப் பெரிதாக பரபரப்பைக் காணோம்.
ரசிகர்களுக்குக் கொஞ்சம் போரடித்து விட்டதோ?
ஆனால் வீரர்களுக்கு மட்டும் பணம் கொழிக்கும் இந்த சுரங்கம் எப்போதுமே தேவை.

அடுத்த முறையிலிருந்து பத்து அணிகளாக மாறவுள்ள இத்தொடரில் இமமுறையும் எட்டு அணிகளே.
தமது வளத்தையும் பலத்தையும் காட்டிக் களத்தில் இன்று முதல் குதிக்கின்றன.

இம்முறை IPL தொடரின் முதல் சில வாரங்களுக்கு ஆஸ்திரேலியா, நியூ சீலாந்து,இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளின் நட்சத்திர வீரர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள்.

இம்முறை அணிகளைப் பார்த்தால் டெல்லி அணியும்,பெங்களுர், டெக்கான் அணிகளும் பலம் போருந்தியனவாகத் தெரிகின்றன.

ஐந்து அணிகளுக்கு இந்திய வீரர்களும், ராஜஸ்தானுக்கு ஆஸ்திரேலியாவின் ஷேன் வோர்னும், பஞ்சாபிற்கு இலங்கையின் தலைவர் குமார் சங்கக்காரவும், நடப்பு சம்பியன்கள் டெக்கான் அணிக்கு கடந்த அவருடம் போலவே அடம் கில்க்ரிஸ்ட்டும் தலைமை தாங்குகிறார்கள்.

கடந்த முறை தென் ஆபிரிக்காவில் முதல் சுற்றில் அசத்தி, அரையிறுதிக்கு முன்கூட்டியே தெரிவான சென்னையும்,டெல்லியும் மண் கவ்வ இறுதியில் பெங்களுர் அணியும் டெக்கான அணியும் மோதி இருந்தன.

இம்முறை மோதுகின்ற எட்டு அணிகளின் பலம்,பலவீனங்களை இந்தப் பதிவில் அலசுவோம்.
இன்றிரவு எட்டு மணிக்கு முதலாவது போட்டி ஆரம்பிக்கு முன் எப்படியாவது உங்களை இந்தப் பதிவு அடையவேண்டும் என்ற அவசரம் எனக்கு.

IPL 2 இல் அணிகள் பெற்ற நிலைகளின் அடிப்படையில் அணிகளை வரிசைப்படுத்துகிறேன்.


2009 IPL சம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ்

நடப்பு சம்பியன்.
அதிரடி துடுப்பாட்ட வீரர்களும், கில்க்ரிஸ்ட்டின் தலைமைத்துவ அணுகுமுறையும் பழங்கள்.அதேவேளையில் டரன் லீமனின் பயிற்றுவிப்பின் பின்புலமும் கடந்த முறை வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தன.

சர்வதேச நட்ச்சத்திரங்கள் அன்றூ சைமண்ட்ஸ்,ஹெர்ஷல் கிப்ஸ்,சமிந்த வாஸ்(இவருக்கு இம்முறையும் அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை),ட்வெய்ன் ஸ்மித் ஆகியோர் அணியில் இருப்பது ஒரு பலமே.

எனினும் கடந்த முறை வேகத்தால் அச்சுறுத்திய பிடேல் எட்வேர்ட்ஸ் இம்முறை இல்லை. காயமுற்ற அவருக்குப் பதிலாக இன்னொரு அதிவேகப் புயலை மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து அழைத்துள்ளார்கள்.அவர் கெமர் ரோச்.
ஆஸ்திரேலிய இளைய அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் இம்முறை உன்னிப்பாக அவதானிக்கக்கூடிய இன்னொரு வீரர்.

எனினும் கில்லிக்குப் பின்னர், இந்திய இளம் வீரர்கள் சிலரே இந்த அணியின் முதுகெலும்புகள்.
கடந்த முறை கூடிய விக்கெட்டுக்களை வீழ்த்திய ஆர்.பீ.சிங், அதிரடி துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மா, சகலதுறை நட்சத்திரம் வேணுகோபால் ராவ், சுழல் பந்து வீச்சாளர் ஓஜா ஆகியோருடன் கில்லி பிரமாதமாக பரிந்துரை செய்யும் இளைய விக்கெட் காப்பாளர் மோனிஸ் மிஸ்ராவும் பிரகாசித்தவர்கள்;கலக்குவார்கள்.

லக்ஸ்மன் பாவம்.அணியில் விளையாடினாலே பெரிய விஷயம்.

கில்லி,சைமண்ட்ஸ் ஆகியோரின் அதிரடி எதையும் மாற்றக்கூடியது.
இந்திய ஆடுகளங்களில் ஜெயிக்கும் சுழல் பந்து வீச்சுப் பலம் இல்லையென்பது குறையே.

தெலுங்கானா பிரச்சினையால் இம்முறை சொந்தமைதானத்தில் போட்டிகளை விளையாட முடியாமல் போவது டெக்கான் அணிக்கு இன்னும் ஒரு குறையே.

கடுமையாக முயன்றால் அரையிறுதி வரலாம்.



2009 இல் இரண்டாமிடம் பெங்களுர் ரோயல் சலேஞ்சர்ஸ்

பணக்காரப் பின்னணி கொண்ட பலம் வாய்ந்த அணி.
அனுபவமும் அதிரடியும் இணைந்த அணி இது.
கடந்த முறை கும்ப்ளே அணிக்குத் தலைவராகக் கொடுத்த உறுதியும் நம்பிக்கையும் இம்முறையும் தொடர்வது ஆரோக்கியமானது.

கும்ப்ளேயின் கூலான தலைமையில்,டிராவிடின் அனுபவம்&நிதானம், ஜாக்ஸ் கலிஸின் உலகத்தரம்,பீட்டர்சனின் அதிரடி,பவுச்சர்,ரோஸ் டெய்லரின் கலக்கல்,உத்வேகம்,டேல் ஸ்டெய்னின் அதி வேகம், இவற்றுடன் இப்போது உச்ச Form இல் இருக்கும் கமேரோன் வைட்டும் இணைந்துகொள்ளும் போது இந்த அணியால் எந்த அணியைத் தான் வீழ்த்த முடியாது?

போதாக்குறைக்கு இம்முறை இங்கிலாந்தின் புதிய அதிரடி மன்னர் ஒயின் மோர்கனும் பெங்களுர் அணியில் இணைந்துள்ளார்.

உள்ளூர் நட்சத்திர வரிசையும் பெங்களுர் அணியின் மிகப்பெரும் பலம்...
விராட் கொளி, பிரவீன் குமார், மனிஷ் பாண்டே, ராபின் உத்தப்பா,வினய் குமார் என்று பெயர்களைக் கேட்டாலே பலம் தெரியும் அணி இது.

எனினும் அணியை சமச்சீராக,சமபலத்துடன் பேணுவதிலேயே பெங்களூரின் வெற்றி நடை தங்கியுள்ளது.

இத்தனை நட்சத்திரங்களில் நான்கு வெளிநாட்டு வீரர்களுடன் பலமான அணியை சரியாகத் தெரிவு செய்வதில் கும்ப்ளேயும்,பயிற்றுவிப்பாளர் ரே ஜென்னிங்க்சும் வெற்றி பெற்றால் அதுவே பாதி வெற்றியாகும்.

இம்முறை கிண்ணம் வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அணி இது.


டெல்லி டெயார்டெவில்ஸ்

கம்பீரின் தலைமையில் டெல்லி அணி இம்முறை மிகப்பலமான அணிகளில் ஒன்றாகக் களம் காண்கிறது.
அதிரடித் துடுப்பாட்ட வீரர்கள் நிறைந்த அணியாகவும்,கடந்த இரு முறையும் கடைசி நேரத்தில் அரையிறுதியில் சறுக்கி வெற்றிக் கிண்ணத்தைக் கோட்டைவிட்ட துரதிர்ஷ்ட அணியாகவும் டெல்லியை நோக்குகிறோம்.

சேவாக்,டில்ஷான்,டேவிட் வோர்னர், டீ வில்லியர்ஸ்,தினேஷ் கார்த்திக் என்று சர்வதேச அதிரடி வீரர்களையும், மிதுன் மன்ஹாஸ்,ரஜத் பாட்டியா போன்ற டெல்லி துடுப்பாட்ட வீரர்களையும் கொண்ட பலமான அணி.

மக்கரா இம்முறை இல்லாத குறையை நீக்க டேர்க் நன்னாஸ், ஆசிஷ் நெஹ்ரா, பிரதீப் சங்கவான்,அவிஷ்கார் சால்வி ஆகியோருடன் இம்முறை ஆச்சரியம் தரும் விதத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இளம் தென் ஆபிரிக்கக் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பார்னலும் எதிரணிகளை அச்சுறுத்துகிறார்கள்.
இவர்களோடு மூன்று முக்கிய சகலதுறை வீரர்களாக மகரூப்,மக்டோனால்ட் மற்றும் மொயசாஸ் ஹென்றிக்கேஸ்..
சுழல் பந்துவீச அமித் மிஷ்ரா இருக்கிறார்.


இரு முறை விட்ட குறையை இம்முறை நீக்கக வேண்டும் என்பதில் குறியாக வெறியோடு இருக்கும் இளைய,உத்வேகமான அணி இது.
களத்தடுப்பிலும் கலக்கும் அணி இது.

அணியின் சமபலத்தைப் பேணுவதே இந்த அணிக்கும் சவாலான விடயம்.
முக்கியமான சர்வதேச வீரர்கள் சிலர் (வெட்டோரி,கோல்லிங்க்வூத்,ஷா) இம்முறை இல்லாதது சிறு குறையே.எனினும் இன்னும் சில வீரர்கள் விளையாடாமல் இருக்கவேண்டும்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களுக்கான தெரிவுகள் பல இருப்பதும்,வேகப்பந்து வீச்சுத் தெரிவுகளும் பல இருப்பதும் குழப்பத்தைத் தரலாம்.

பிரச்சினையான ஆடுகளம் டெல்லி அணிக்கு அடுத்த சவால்.

சம்பியனாகக்கூடிய அணி.


சென்னை சூப்பர் கிங்க்ஸ்


இரு தடவை கிட்டே வந்து சறுக்கிய இன்னொரு அணி.ஆனால் கடந்த முறைகளை விட இம்முறை கொஞ்சம் பலவீனமாகவே இருக்கிறது.
டோனி,ஹெய்டன்,முரளி என்ற மூன்று பெரும் தலைகள் தவிர வேறு யாரும் பெரிய நட்சத்திரங்களாக இம்முறை இல்லை.

மைக் ஹசி சிலவாரங்களின் பின்னே வந்து இணைந்து கொள்ளவுள்ளார்.
ந்டினி வயதேறி தென் ஆபிரிக்க அணியிலும் இல்லை.
அல்பி மோர்க்கலும் அண்மைக்காலமாக அதிரடியாடுவதாக இல்லை.
திலான் துஷாரா இப்போது தான் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார்.

நட்சத்திர சகலதுறை வீரர்கள் ப்ளிண்டோபும்,ஜகொப் ஒராமும் இம்முறை காயத்தால் விளையாட முடியாதுள்ளனர்.
ICL இல் இருந்து மீண்டுள்ள தென் ஆபிரிக்காவின் ஜஸ்டின் கேம்ப் இவர்கள் இடத்தை நிரப்புவாரா?
இல்லை இலங்கையின் புதிய அதிரடி வரவு திசர பெரேரா கலக்குவாரா?

பத்ரிநாத்,ரெய்னா, முரளி விஜய்,பாலாஜி,அஷ்வின்,ஹெமாங் பதானி(ICL இல் இருந்து திரும்பியுள்ளார்), மொன்ப்ரீத் கோனி,சுதீப் தியாகி போன்ற உள்ளூர் நட்சத்திரங்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்.
பெரிய நட்சத்திரங்கள் சறுக்கிய நேரம் இவர்கள் பிரகாசித்து வெற்றிகளைப் பெற்றது மறக்கவில்லை,.


சுருக்கமாக சொன்னால் அணியாக செய்ரபட்டாலே அடுத்தகட்டத்தைத் தாண்டக்கூடிய அணி.தோனியின் அதிர்ஷ்ட லக்ஷ்மி(ராய் இல்லை) ஹெய்டனின் அதிரடி,முரளியின் மாயாஜலத்துடன் இணைந்து ஏதாவது செய்தாலே சென்னை ஜெயிக்கும்.

பயிற்றுவிப்பாளர் பிளெமிங் புதிய யுக்திகளை வகுப்பாரா என்பதும் ஒரு கேள்வி.

முரளி,அஷ்வின்,ஷதாப் ஜகதி ஆகியோரின் சுழல் பந்துவீச்சு இணைப்பு கொடுக்கும் தாக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அரை இறுதிக்கான வாய்ப்பு சிரமமே.


===========
ஏனைய நான்கு அணிகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்..

எட்டு மணிக்கு நடப்பு சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ், கடந்த முறை கடைசி இடம் பிடித்த கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது.

கங்குலியா கில்க்ரிஸ்ட்டா?
கிங் கான் ஆடுவாரா? ;)
விறுவிறுப்பை ரசிப்போம்..


இவற்றையும் பார்த்து ரசியுங்கள்...




கடந்த வருடத்தின் IPL பற்றிய முன்னோட்டம்

Post a Comment

19Comments

Please Select Embedded Mode To show the Comment System.*