
உலகில் மிக பயங்கரமான. அச்சுறுத்தல் நிறைந்த தொழில் எது என்று கேட்டால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் சொல்லக்கூடியது ஊடகவியல் தான்.
இலத்திரன் ஊடகங்கள் ,பத்திரிகை என்ற இரண்டுமே இந்தக் காலகட்டத்தில் அநேகமான நாடுகளில் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் எல்லோரும் அறிந்ததே.
வருடாந்தம் எத்தனை ஊடகவியாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள்..
எத்தனை பேர் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்..
எத்தனைபேர் சித்திரவதை,மனித உரிமை மீறல்களுக்கு உட்பட்டுள்ளார்கள்..
எத்தனை அப்பாவி ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்..
சர்வதேசரீதியாக என்னதான் மனித உரிமை,மனிதாபிமானம் என்னும் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் பேனாக்கள்,கமெராக்கள்,ஒலிவாங்கிகளின் கழுத்துகள் நெரிக்கப்பட்டு,திருகப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
தகவல்களை வெளியிடும் அறியும் உரிமைகள் பல்வேறு காரணங்கள் சொல்லி ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இலங்கையில் மட்டும் அண்மைக்காலத்தில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எத்தனை பேர்? மனதில் பல நல்லவர்கள்,தூய மனம் படைத்த தியாகிகள் வந்து போகின்றனர்..
பல பேர் அங்கவீனர்களாயுள்ளனர்..
எழுதும் கைகள் முறித்துப் போடப்பட்டுள்ளன..
பல பேர் மிரட்டலிலேயே அடங்கி தம் எழுத்துக்கள்,கருத்துக்களை முடமாக்கியுள்ளனர்.
இன்னும் பலர் புலம்பெயர்ந்து விட்டார்கள்..

இப்படியான ஊடகங்களின் மீது,ஊடகவியலாளரின் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள்,உரிமை மீறல்கள் தொடர்பாக தொடர்ந்து குரல் எழுப்பிவரும் ஒரு அமைப்பு தான் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு.Reporters Without Borders (Reporters Sans Frontiers)
இந்த RSF எனப்படும் அமைப்பு எனக்கும் மறக்கமுடியாத அமைப்பு ஒன்று.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நான் கைது செய்யப்பட்ட வேளையில் எனக்காகக் குரல் எழுப்பியதோடு, பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தது.
நான் விடுவிக்கப்பட்ட பின்னரும் பல உதவிகளை செய்ய முன்வந்திருந்தது.பிரான்ஸ் வருமாறும் அழைத்திருந்தது. எனினும் அவற்றை நன்றிகளோடு நான் மறுத்திருந்தேன்.
பிரான்சில் இருந்து இயங்கி வரும் இந்த அமைப்பு ஒவ்வொரு வருடமும் உலகில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதிலும் உள்ள ஊடகவியலாளர்களிடமும் ஊடகத்துறைப் பிரதிநிதிகளிடமும் எடுக்கும் தரவுகளின் அடிப்படையில் ஊடக சுதந்திரம் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது.
இதில் புள்ளிகள்,புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஊடக சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகளும், ஊடக சுதந்திரம் நசுக்கப்படும் நாடுகளும் பட்டியலிடப்படுகின்றன.

இந்த ஆண்டில் வெளியிடப்பட்ட பட்டியலில் ஊடக சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஒரே புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ள ஐந்து நாடுகளுமே ஐரோப்பிய நாடுகள்.. இவற்றுள் நான்கு பால்கன் நாடுகள்.
டென்மார்க்,பின்லாந்து,அயர்லாந்து, நோர்வே, ஸ்வீடன்.
கடந்த ஆண்டில் முதலாவது இடத்தில் இருந்த ஐஸ்லாந்து இம்முறை ஒன்பதாம் இடத்தில்.
இம்முறை எடுக்கப்பட்ட கணிப்புக்கள் அனைத்தும் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை.
மிக மோசமாக ஊடகங்கள்,ஊடகவியலாளர்கள் மிதிக்கப்படும்,நசுக்கப்படும் நாடாக ஆபிரிக்க நாடான எரித்ரியா(175ஆம் இடம் ) காணப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக வட கொரியா, துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.
அண்மையில் பதவிக்கு மீண்டும் வந்த ஈரான் ஜனாதிபதியான மகுமூது அகமதிநிஜாடின் பிடியில் ஈரான் ஊடகவியாலளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஈரானுக்கு அடுத்த இடத்தை (172)வழங்கியிருக்கின்றன.
தொடர்ந்து மியான்மார், கியூபா, லாவோஸ்,சீனா, யேமென் என்று செல்லும் இந்த வரிசையில் இலங்கைக்கு 162ஆம் இடம் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டுகளை விட இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. கடந்தமுறை 165ஆம் இடத்திலிருந்தது.

எனினும் தற்போதைய கணிப்பு எடுக்கப்பட்ட காலப் பகுதியில் தான் லசந்த விக்ரமதுங்க கொலை, திஸ்ஸநாயகத்துக்கான தண்டனை, போத்தல ஜயந்த மீதான தாக்குதல், மற்றும் பல ஊடகவியலாளரின் கைதுகள் பல்வேறு செய்தி இணையத் தளங்கள் மூடப்பட்டதும், இடம்பெற்றுள்ளன.பல முக்கிய ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு பிறதேசம் போயிருக்கிறார்கள்.
அப்படியிருந்தும் மூன்று ஸ்தானங்கள் உயர்ந்துள்ளது என்றால் மற்றைய நாடுகளில் இடம்பெறும் ஊடகங்களின் மீதான அடக்குமுறைகள் பற்றி நினைக்கவே பயமாக இருக்கிறது.

இன்னும் சில அவதானிப்புக்கள்..
ஒபாமா(அதான் நோபெல் பரிசை இம்முறை பெற்றாரே அவரே தான்) ஜனாதிபதியான பின்னர் நீண்ட காலத்தின் பின் அமேரிக்கா முன்னேற்றம் கண்டு இருபதாம் இடத்துக்குள் வந்துள்ளது. ஐக்கிய ராஜ்ஜியமும் அதே இடத்தில்..
அதுசரி இரண்டு நாடுகளும் கொள்கை பொதுவாகவே ஒன்று தானே..
இந்தியா 105ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 159ஆம் இடத்திலும், ஈராக் 145ஆம் இடத்திலும் இருக்கின்றன.
என்ன தான் பேனாக்கள் வாள்முனையை விடக் கூர்மையானவை என்று கூறப்பட்டாலும், துப்பாக்கிகள் சூடாகவே பேனாக்களையும்,ஒலிவாங்கிகளையும், கமெராக்களையும் மட்டுமல்ல இணையங்களையும் குறிவைத்தவண்ணமே உள்ளன.
RSF போன்றவற்றின் குரல்கள் கொஞ்சமாவது உலகுக்கு இவற்றை வெளிப்படுத்தி வருகின்றன என்பது ஒரே ஆறுதல்..
இந்தப்பட்டியலை முழுமையாகப் பார்ப்பதற்கு
20 comments:
அண்ணன்...
வேணாம்....
நல்லா தானே போயிற்று இருக்கு....
//என்ன தான் பேனாக்கள் வாள்முனையை விடக் கூர்மையானவை என்று கூறப்பட்டாலும், துப்பாக்கிகள் சூடாகவே பேனாக்களையும்,ஒலிவாங்கிகளையும், கமெராக்களையும் மட்டுமல்ல இணையங்களையும் குறிவைத்தவண்ணமே உள்ளன.//
யதார்த்தமான வரிகள்.
அடக்குமுறைகளை வெளிக்கொண்டுவரவேண்டிய பணி அடக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது
//உலகில் மிக பயங்கரமான. அச்சுறுத்தல் நிறைந்த தொழில் எது என்று கேட்டால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் சொல்லக்கூடியது ஊடகவியல் தான்.//
சம்பளமும் கூடுதலா இருக்குமோ..
புலம்பெயர்தல் இலங்கையில் ஒரு fashion. Doctor, engineer ஆவது போல் புலம்பெயர்வதும். அது துக்கமான விஷயமாக இருந்தால் matrimonial களில் வெளிநாட்டில் வதியும் துணை தேடமாட்டார்கள்.
என்ன இருந்தாலும் புலம் பெயராமைக்காக உங்களுக்கு hats off.
நல்லதொரு பதிவு
லோஷன்……..
ஜனநாயகத்தின் முதுகெலுப்பாக மதிக்கப்படுகின்ற கருத்து சுதந்திரத்தை மதிக்கின்ற சமூகத்தில் நாம் வாழவில்லை. அதனால், எமக்கு ஊடக சுதந்திரம் எட்டாக்கனியாகவே பல தசாப்த காலமாக உள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் ஊடக அடக்குமுறைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால், இலங்கையில் ஒவ்வொரு அரசாங்கத்தின் ஆட்சிக்காலங்களிலும் ஊடக அடக்குமுறைகள் முன்னேடுக்கப்படுவதும், எதிர்க்கட்சிகள் அதற்கு எதிராக கோசமிடுவதும்… பின்னர் அதே எதிர்க்கட்சிகள் அரசாங்கம் அமைத்த பின் ஊடகங்களை நசுக்குவதும் வழமையே. இதுவே, தெற்காசிய, கிழக்காசிய, ஆபிரிக்க, அமெரிக்க நாடுகளில் வழக்கத்தில் உள்ள நடைமுறைகள்.
ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதனின் கருத்தை மதிக்கின்ற சமூகத்திலேயே ஊடக சுதந்திரம் சாத்தியம். இந்த நிலைமை எங்கு சாத்தியம்?. இதற்கான விடையே தேடிக்கொண்டே இருக்கிறேன். ஆனாலும், எனக்கு விடை இதுவரை கிடைக்கவேயில்லை.
:-)
:-(
மிக மிக தைரியமான பதிவு.
பார்த்து சூதானமா இருங்க சார்..
http://www.freedomhouse.org/uploads/fop/2009/FreedomofthePress2009_tables.pdf
mathi
நீண்ட நாட்களின் பின்னர் நான் அறிந்த லோஷனை இந்தப்பதிவில் பார்க்கின்றேன்.
பாராட்டுக்கள் லோஷன்.
ஒருவிடயத்தை நான் இங்கு சொல்லியே ஆகவேண்டும், எனது பல்கலைக்கழக காலங்களில் (இள நிலை)தாங்கள் அப்போது சக்தியின் சக்திமிக்க ஒலிபரப்பாளராக கடமையாற்றியபோது, தாங்கள் தொகுத்துவழங்கும் கடந்தவார உலகம் நிகழ்ச்சிகளை ஆசையுடன் தவறாமல் கேட்பேன். நான் சமர்ப்பித்த பல assignmentsக்கு அவை பெரும் உதவியாக இருந்தன.
இப்போதும் அவ்வாறன உலகவிடயங்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளையும், இலக்கியம் சார்ந்த பதிவுகளையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.
தங்களால் இவை நேர்தியாக பதிவிட முடியும் எனவும் எனக்கு தெரியும்.
காத்திருக்கின்றேன்..
பார்த்தேன்; வாசித்தேன்; பின்னூட்டுவதற்கு தட்டச்சி ஈற்றில் அழித்து விட்டுப் போகின்றேன். வரவைப் பதிந்து கொள்ளுங்கள்.
லோசன் அண்ணா!
எல்லா இடங்களிலும் இந்த பிரச்சனை இருக்கதான் செய்கிறது.. இதற்கு தீர்வு என்னவென்றால்..
சுதந்திரமான நீதி துறையை நிறுவுவது..தலைமை நீதிபதியை நிறுவது முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்தையும் அரசியல் குறுக்கீடு இல்லாமல் அந்த துறையை சார்ந்தவர்களே பணி அனுப்வம் ஆகியவற்றின் மூலம் அவர்களே தேர்ந்தெடுத்து கொள்ளவது..
ஊடக துறையில் குற்றம் சாட்டபட்டோர்/குற்றம் சொல்வோர் என இரு தரப்பிடமும் சமமான் வாக்குமூலங்களை பெற்று வெளியிடுவது ஆகியவை கட்டாயமாக்க பட வேண்டும்.. இங்கு தமிழ் நாட்டில் ஆளுக்கோரு சேனல்.. பத்திரிக்கை .. எல்லாம் அவரவர் தரப்பு வாதங்களை எடுத்து பீலா விடுகின்றனர்.. இதில் எது உண்மை எது தவறு என்று அவனவன் மண்டையை பிய்த்து கொள்கிறான்.. கட்சி சார்ந்த செய்திகளை அதிகம் வெளியிடுவோர் மீது வழக்கு தொடர படவேண்டும்..
அண்ணனை ரொம்பத்தான் சீண்டிட்டாங்கள் போல...
தமிழ் மக்கள் மீது நீங்கள் வைச்சிருக்கிற பாசம் காட்டித்தான் தெரியோனும் எண்டு இல்லை.. அதே நேரம் சகோதர இனத்தவரோடு காட்டும் நாகரீகம் தான் வியக்க வைக்கிறது...
ஆறு பின்னூட்டங்களை தான் நிராகரித்துள்ளேன் எண்டு சொல்லி இருந்தீங்கள்.. (ஒரு சுட்டியில்)
அதில ஒன்று என்னுடையது என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது...
ஓவர் உற்சாகம் போல.. ஒவ்வொரு நாளும் ஒண்டு இறக்குறீங்க...
ஆனால் கொஞ்ச நேரம் பின்னூட்டகாரர்களுக்கு பதிலலிப்பதற்க்கும் ஒதுக்கலாமே..
ஓவர் உற்சாகம் போல.. ஒவ்வொரு நாளும் ஒண்டு இறக்குறீங்க... ஆனால்
கொஞ்ச நேரம் பின்னூட்டகாரர்களுக்கு பதிலலிப்பதற்க்கும் ஒதுக்கலாமே.. அப்பொழுது தானே.. பின்னூட்டகாரர்கள் தங்கள் கருத்தையும் பகிர்ந்த திருப்த்தி முழுமையாக கிடைக்கும்
//RSF போன்றவற்றின் குரல்கள் கொஞ்சமாவது உலகுக்கு இவற்றை வெளிப்படுத்தி வருகின்றன என்பது ஒரே ஆறுதல்..//
இப்போதைக்கு அடக்கியே வாசிங்கள் லோசன்.....
உங்கள் இந்த இடுகை மெச்சத்தகுந்தது.
முதிர்ச்சியான ஜனநாயகத்தின் அடித்தளமே ஊடக சுதந்திரம் ,பேச்சு சுதந்திரம் ,கருத்து சுதந்திரம் மற்றும் சுதந்திரமான நீதித்துறைதான்.
பெரும்பாலான ஆசிய ஆபிரிக்க நாடுகளில் இவை மதிக்கப்படுவதில்லை,அதிலும் சில ஆசிய நாடுகளில் அடக்குமுறை மிகவும் கொடூரமாக உள்ளன.
மேற்கு நாடுகள் இந்த விஷயத்தில் முன்னேற்றம் கொண்டவை என்பதில் சந்தேகம் இல்லை. மேற்கு நாடுகள் perfect இல்லைத்தான். ஆனாலும் அவர்களது ஊடகம் நீதித்துறை என்பன பெரும்பாலும் சுதந்திரமாக இயங்குகின்றன என்பதும் அரசியல்வாதிகளின் தலையீடு மிகவும் குறைவாகவே உள்ளன என்பதும் மறுக்கமுடியாது.
முதல் ஐந்து நாடுகளில் நான்கு scandinavian(not Balkan) நாடுகள் என்று நினைக்கிறேன் ,இந்த நாடுகள் மனித உரிமை ,ஊடக சுதந்திரம் என்பதில் எப்போதுமே முன்னணி வகிக்கும் பெருமை உள்ளன .
--வானதி
இலங்கையில் சுதந்திரம் பற்றிப் பேசவே சுதந்திரம் இல்லை அண்ணா...
அண்ணா நம்ம வலைபூக்களுக்கும் சிக்கலே பயமுறுத்துரானுகள் ஏன்டா படத்த வேற போட்டிருக்கிறாய்? எண்டு ..........நம்மள மாதிரி கொசுறுகளை யாரு கணக்கில எடுக்க போறாங்கள் என்ன ......இல்லையா அண்ணா ....
நீங்கள் கவனம் .......உந்த பதிவு மறந்து போயிருக்கிரவங்களை திருப்பி உசுபபேத்தியதாய் போயிடும் .........
என்னடா இது இலங்கையில் போடக் கூடாத தலைப்பைப் போட்டு எழுதியிருக்கிறியள் எண்டு பயந்து போனன்....
வெறும் தரப்படுத்தல தான் போட்டிருக்கிறியள் எண்டா பிறகு தான் 'அப்பாடா...' எண்டன்...
இன்றைய காலத்திற்கு தேவையான பதிவு 5*
Post a Comment