நீர்ப்பறவை + அம்மாவின் கை பேசி - லேட்டா & ஷோர்ட்டா

ARV Loshan
1

கொஞ்சம் (என்ன கொஞ்சம் முழுமையாகவே என்பது தான் பொருத்தம் என்று நீங்கள் சொன்னா சரிதானுங்கோ) ஓய்வாக இருப்பதால் சில தெரிவு செய்யப்பட புதிய படங்களை - திரையரங்குக்கு வராதவற்றை - வீட்டிலே பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்த பின்பு மீண்டும் திரையரங்கில் பார்த்த படங்கள் கும்கி & பிட்சா.

இவை வெளிவந்து சில பல நாட்கள் ஆனதால் விமர்சனம் என்று நீட்டி முழக்குவதை விட, கொஞ்சமாக ஒவ்வொன்று பற்றியும் சொல்லலாம் என...


நீர்ப்பறவை 


தென்மேற்குப் பருவக்காற்று தந்த சீனு ராமசாமியின் படம்...
கரையோர மீனவர் வாழ்வின் ஒரு பகுதியைக் காதலோடும், காத்திருப்போடும் சேர்த்துப் படமாக்கியிருக்கிறார்.

'அழகி' நந்திதா தாஸ் முதல் காட்சியில் மர்மத்தோடு வருவதால் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தை எதிர்பார்த்தேன்.

விஷ்ணு, சுனைனா இரண்டுபெரினதும் இயல்பான நடிப்பு படத்தின் ஓட்டத்தை ரசிக்கச் செய்திருந்தது. நந்திதா தாஸ் சுனைனாவின் முதிர்ந்த பாத்திரம் என்று இருந்தாலும் அவருடன் ஒப்பிடும் அளவுக்கு சிறப்பாகவே செய்துள்ளார்.

சீனு ராமசாமியின் தென் மேற்குப் பருவக்காற்றை நிறைவாக்கிய சரண்யாவை மறக்காமல் இங்கேயும் பாசக்கார அம்மாவாக்கியுள்ளார்கள். சரண்யா எப்போது அம்மாவாக நடித்தாலும் அப்படியே ஒரு பாசம் எங்களுக்குள்ளும் பொங்கி வழிவதை என்னைப் போல நீங்களும் உணர்ந்துள்ளீர்களா?

மீனவர் வாழ்க்கை, குடிகார மகன், தேவாலயத்தை முன்னிறுத்திய கரையோரக் கிராம வாழ்க்கை இவற்றை இயல்பாகப் படமாக்கியிருப்பதொடு, இந்திய மீனவர்கள் கடலில் வைத்து இலங்கைப் படையினரால் சுடப்படுவதையும் மனதைத் தொடுகிறமாதிரிக் காட்சிப்படுத்தியுள்ளார்.

பாடல்களும் பின்னணி இசையும் மனதில் படத்தை ஓட்டவைத்ததில் மிக முக்கியமானவை.

வைரமுத்துவின்  ஒவ்வொரு வார்த்தையுமே கடலோர வாழ்க்கை, மீனவர் வாழ்க்கை பற்றி அழகாக சொல்கின்றன.
கடலைப் பின்னணியாகக் கொண்ட காட்சிகள் கண்ணுக்குக் குளிர்மையும் இதமும்.

தாய்மையின் தியாகத்தை முந்தைய படத்தில் சொல்லியிருந்த இயக்குனர், ஒரு பெண்ணின் ஆழமான காதல், தாய்மையின் பாசத்தை விட ஒருவனைத் திருத்தி ஆளாக்க உறுதியானது என்ற கருப்பொருளைத் தந்திருக்கிறார் நீர்ப்பறவை மூலமாக.

நீர்ப்பறவை - நேர்த்தி


அம்மாவின் கைப்பேசி


தங்கர் பச்சானின் கைவண்ணம்.
சாந்தனுவுக்கு இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக நடிக்க வாய்ப்பு.
ஆனால் கதாநாயகனாக இப்போது பெரிய வாய்ப்பில்லாத சாந்தனுவை பெயருக்குப் போட்டுவிட்டு தங்கர் தான் படம் முழுக்க வரும் பாத்திரத்தை எடுத்திருக்கிறார்.

அம்மா சென்டிமென்டை படத்தின் ஊற்றினாலும் அதில் புதுசாக எதையும் காணோம்.என்னாச்சு தங்கர்?

ஆனாலும் பொறுப்பற்ற மகனாக இருந்தும் அம்மா மீது பாசத்தையும் மாமன் மகள் மீது காதலையும் வைத்துள்ள இளைஞன்.
தொழில் செய்யும் இடத்தில் வளரும் பகையினால் நடக்கும் கொலையும், தாய்க்காக சேர்த்த பணமும் அவனது கைப்பேசியும் அப்பாவி அடியாளான தங்கரிடம் அகப்பட அதன் தொடர்ச்சி தான் கதை.

குடும்பச் சிக்கலால் வேற்றூருக்குப் போய் வேலை பார்க்கும் மகனுக்கும் தாய்க்கும் இடையிலான தொடர்பூடகமாக மாறும் செல்பேசி படத்தின் இன்னொரு பாத்திரம்.

ஆரம்பத்தில் பிழைக்கத் தெரியாத தங்கரும் அவரின் மனைவியினதும் வாழ்க்கையில் ஆரம்பிக்கும் கதையும், அவரிடம் உள்ள பெருமளவு பணம் பற்றிய மனைவியின் சந்தேகத்தோடு விரிகிற கதை, இன்னொரு பக்கம் சாந்தனுவின் கதையுடன் இணையும் திருப்பம் அழகு.
ஆனால் அதன் பின் கதையின் மெதுவான நகர்வும், இழுவையும் அயரவைக்கிறது.

அழகம்பெருமாளும், தாயாக நடித்துள்ளவரும், வில்லன் சிட்டிபாபுவாக வரும் நடிகரும், இனியாவும் (அடக்கமாகவும் அழகாகவும் இருக்கிறார்) அசத்தல்; மனதில் நிற்கிறார்கள்.

பின்னணி இசையும் பாடல்களும் படு அறுவை.

மனித மனங்களின் உணர்வுகளை இயல்பாகத் தரும் படங்களைத் தங்கர் பச்சான் தருவது அவர் படங்களை எப்போதும் மனதிற்கு நெருக்கமாக்குவது.
இதிலும் மனித மனங்களின் இயல்பான சலனங்களும், பாசம் உண்டாக்கும் பாரங்களும், அன்பும் பிரிவும் உண்டாக்கும் தாக்கங்களும் சொல்லப்பட்டிருந்தாலும் ஏனோ மனதில் ஆழப்பதியவில்லை.
எழுபதுகள், எண்பதுகளில் வந்த கொஞ்சம் அழுகை, சென்டிமென்ட் திரைப்படங்கள் போல இழுவை தான் காரணம் போலும்.

அம்மாவின் கைப்பேசி - அழுகையும் இழுவையும் கூடிப்போச்சு 

கும்கி , பிட்சா படங்கள் பார்த்த படங்களில் அதிகம் ஈர்த்தவை... அடுத்த இடுகையில் அவை பற்றி...


Post a Comment

1Comments

Please Select Embedded Mode To show the Comment System.*