August 25, 2010

அவுட்டும் டவுட்டும் - எதிர்வுகூறல்களும் எனது பார்வையும்

சேவாக் - ரண்டீவ்- நோ போல் சர்ச்சை கொஞ்சம் ஓய்ந்து போகும் நேரம் இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான மற்றொரு போட்டியில் இன்னுமொரு சர்ச்சை..

இலங்கை அணி இந்திய அணியை உருட்டி எடுத்த போட்டியில்(ஞாயிறு) ஐந்து விக்கெட்டுக்களை எடுத்த திசர பெரேராவை விட அதிகமாகப் பேசப்பட்ட ஒருவராக மாறிப்போனார் இப்போது விளையாடாத,ஓய்வு பெற்ற குமார் தர்மசேன.

(இந்தியாவுக்கு எப்போதும் இலங்கை OFF SPINNERS தான் தொல்லையா? முரளி,மென்டிஸ்,ரண்டீவ்.. இப்போது ஓய்வு பெற்ற ஒரு OFF SPINNER தர்மசேன)
தர்மசேன - இந்தியாவில் இருக்கு தர்ம அடி 

ஒரு ஆட்டமிழப்பு அல்ல.. சுளையாக ஐந்து தீர்ப்புக்கள் தவறாக அமைந்து போயின.(மூன்று - தர்மசேன,இரண்டு - அசத் ரௌப்)
இதெல்லாம் கிரிக்கெட்டில் சகஜமே என்றாலும் இந்தியாவுக்கெதிராக இவற்றுள் நான்கு அமைந்துபோனது தான் சிக்கலே.

(சேவாகுக்கு ஆட்டமிழப்பு கொடுத்ததில் தப்பில்லை என்று தளமே சொன்னதாக கிரிக்கெட் அனலிஸ்ட் கண்கோன் ஆதாரம் காட்டி இருந்தார். ஆனாலும் எனக்கென்னவோ அது தவறான தீர்ப்பு என்றே தோன்றியது.)

போட்டியின் முடிவை மாற்றியதிலும் இந்த தீர்ப்புக்கள் முக்கிய பங்கு வகித்திருக்கலாம்.
அண்மைக்காலம் வரை சராசரி நல்ல நடுவராக இருந்துவந்த தர்மசேன இவ்வளவு மோசமாக தீர்ப்புக்கள் வழங்கியதை நான் கண்டதே இல்லை.

எவ்வளவு தான் ஒரு அணியின் ஆதரவாளராக இருந்தபோதும் தவறான தீர்ப்புக்களால் தனது அணி வெற்றிபெறுவதை எந்தவொரு உண்மையான கிரிக்கெட் ரசிகனும் விரும்பமாட்டான்.
நானும் அவ்வாறே...

அன்றைய போட்டியில் இலங்கையின் அபாரமான வெற்றி, திசர பெரேராவின் மிக சிறப்பான பந்துவீச்சு, மஹேல மீண்டும் ஆரம்ப வீரராக மாறி ஆடிய அதிரடியும், இந்தியாவின் படுமோசமான துடுப்பாட்டமும் குமார் தர்மசேனவின் கோல்மால் தீர்ப்புக்களால் மறைக்கப்பட்டதை நினைத்து அடுத்த நாள் வரை கொதிப்புடன் இருந்தேன்.
ஆனாலும் பதிவு போடக் கொஞ்ச நேரம் கூடக் கிடைக்கவில்லை.

இன்று கொட்டித் தீர்த்தாச்சு.

வீரர்கள் தவறிழைத்தால் போட்டி மத்தியஸ்தர் தலையிடாவிட்டாலும் பாய்ந்து விழுந்து தண்டனை கொடுக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் குமார் தர்மசேனவுக்கு இன்னும் எந்தத் தண்டனையும் கொடுக்காதது ஆச்சரியமாக உள்ளது.

இரண்டு,மூன்று போட்டித் தடைகளோ அல்லது இனிமேலும் கையையே மேலே தூக்கக் கூடாது என்ற தண்டனைகளோ கொடுத்ததாக அறியிலேன்..
கன்னி ஐந்து விக்கட் பெறுதி - திசர பெரேரா 

இன்று இந்தியாவுக்கும் நியூ சீலாந்துக்கும் இடையிலான போட்டி அரை இறுதி போல அமைகிறது.
மழை பெய்தாலும் நியூ சீலாந்து உள்ளே.. தர்மசேன இன்று நடுவராக வந்தாலும் நியூ சீலாந்து உள்ளே என்று இந்தியா நடுங்கிக் கொண்டிருக்கிறது.
(ஆனாலும் கொஞ்சம் ஆறுதல்.. தர்மசேன இன்று துணை வில்லனாகத் தான் வரமுடியும் - இன்று மூன்றாவது நடுவர்)

தோனி,ரோகித், கார்த்திக் என்று தடுமாறும் துடுப்பாட்ட வரிசையுடன் எகிறிக் குதிக்கும் பந்துகளுக்கு துணைபோகும் தம்புள்ளை ஆடுகளமும் இன்று பலவீனமான அணி என்று கருதப்பட்ட நியூ சீலாந்து அணிக்கு சாதகமான நாளாக இருக்கும் என நம்புகிறேன்.
இன்னும் கிரவுண்டில் உள்ள காண்டு போகலையா மிஸ்டர்.தோனி?
மைதான ஊழியர்களுடன் இந்தியத் தலைவர் 


Spongy Bounce என்று இந்தியாவினால் வெறுக்கப்படும் ஆடுகளத்தில் நியூ சீலாந்தின் சாதுரியமான,ஸ்விங்கைப் பக்குவமாகக் கையாளும் வித்தை தெரிந்த நியூ சீலாந்தர்கள் இன்று செவாக்கைக் கைப்பற்றுவதிலும் யுவராஜ்,ரெய்னாவை அடக்குவதிலும் அவர்கள் இறுதிப் போட்டி வாய்ப்புக்கள் இருக்கின்றன.
என்னைய்யா இது? இப்பவே கன்னத்தில் கை வச்சா எப்பிடி?
பயிற்றுவிப்பாளர் கிரேட்பட்ச்சுடன், தலைவர் ரோஸ் டெய்லர்&குப்டில் 

(சேவாக்கும்,பிரவீன் குமாரும் கூடக் கை விட்டால்.. விராட் கோஹ்லி இன்று அணிக்குள் வந்தால் ஏதாவது மாற்றம் நிகழலாம்)

இலங்கை அணியில் சில மாற்றங்கள் தெம்பையும் மகிழ்ச்சியையும் தருகின்றன.

இளையவர்களுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்பு+நம்பிக்கை.

திசர பெரேராவை இந்தியாவுக்கெதிராக (மட்டுமே) பயன்படுத்தி நட்சத்திரமாக மாற்றும் உத்தி..
சங்கக்கார அண்மையில் ஜீவன் மென்டிஸ்,தினேஷ் சந்திமால் ஆகியோர் உலகக் கிண்ண அணியில் வேண்டும் என்று வழங்கிய பேட்டி.

சந்திமால் அண்மையில் தென் ஆபிரிக்க A அணிக்கெதிராக அபார இரட்டை சதமடித்தது முக்கியமானது.

இதே போல மஹெலவை இப்போதாவது ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அனுப்ப முடிவெடுத்ததும்,சாமர சில்வாவின் ஓட்டங்களுடனான மீள் வருகையும் இலங்கை அணியை மேலும் ஸ்திரப்படுத்துகின்றன.
முரளிதரனும் மீண்டும் ஒருநாள் அணிக்குள் வருமிடத்து(வருவார் தானே?) உபகண்ட ஆடுகளங்களில் இடம்பெறும் உலகக் கிண்ணப் போட்டிகளில் (பவுன்சி ஆடுகளம் தம்புள்ளையில் போட்டிகள் இல்லை :)) இலங்கை அசைக்க முடியாத பலத்துடன் திகழும்.

அதற்கு முதலில் 28 ஆம் திகதி இறுதிப் போட்டியிலும் இலங்கை வெல்லுமா பார்க்கலாம்.
முக்கியமான விடயம் - இதுவரை தோனியின் தலைமையில் இந்தியா இலங்கையில் வைத்து எந்தவொரு கிண்ணத்தையும் தோற்கவில்லை.
இறுதியாக ஆசியக் கிண்ணத்தையும் எடுத்து சென்றது ஞாபகமிருக்குத் தானே?
இம்முறை பார்க்கலாம்..

தர்மம்(தர்மசேன அல்ல) தலை காக்கும் என்று பெரியவங்க சும்மாவா சொன்னாங்க..

22 comments:

கன்கொன் || Kangon said...

ஒரு சர்வதேச நடுவராக, தொழில்ரீதியான நடுவராக அன்று நடுவர்கள் இருவரும் மோசமாகச் செயற்பட்டனர்.

ஆனால் எனக்கு நடுவர்களை விட ஐசிசி மீதும், போட்டி ஏற்பாட்டாளர்கள் மீதும் பயங்கரக் கோபம்.
முதற்போட்டி சர்ச்சையில் முடிந்திருக்கிறது, அதுவும் ஊடகங்களால் பெருப்பிக்கப்பட்டு ஏதோ ஒருவர் கொலைசெய்யப்பட்டது போன்று காட்டப்பட்ட பின்னர் இரு அணிகளும் சந்திக்கும்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நடுவர் ஒருவர் தவறாக தீர்ப்பு வழங்கினால் அது வேண்டுமென்றே வழங்கப்பட்டதாக சித்தரிக்கப்படும் என்று இவர்களுக்குத் தெரியாதா?
நான் முதலிலேயே பயந்தேன், பயந்தமாதிரியே நடந்துவிட்டது.

செவாக்கினுடைய தீர்ப்பு பிழையற்றது என்பதில் நான் இப்போது தீர்மானமாக இருக்கிறேன்.
கார்த்திக் - ஒரு நடுவராக அந்தத் தீர்ப்பை என்னால் ஏன் பிழை விட்டேன் என்று விளக்க முடியும்.
ஆனால் விளக்கமளிப்பதை விட சரியான தீர்ப்புகளே முக்கியம். :(
தவறு தர்மசேன பக்கம்.

ரெய்னாவின் - அசத் ரெளவ் - எனக்கு சந்தேகம் எழுந்தது இங்கு தான்.
பந்து துடுப்பில் பட்டது எனக்கு முதல் தடவை பார்க்கும்போது (நேரலையில்) தெளிவாகக் கேட்டது, ஆனால் snicko இல் அது பெரியதாகக் காட்டவில்லை, ஒரு சிறிய மாற்றம் தான் தென்பட்டது.
விக்கற்றுகளில் உள்ள ஒலிவாங்கிகள் சர்வதேச விதிகளுக்கு அமைவாகச் செயற்பட்டனவா என்று எனக்குச் சந்தேகம். :(

ரெய்னா - குமார் - எனக்குத் தெரிந்தவரை குமார் தர்மசேன கொடுத்த ஆட்டமிழப்புகளில் ஆகப் பிழையானது இதுதான்.

யுவ்ராஜ் இன் பார்க்கவில்லை.

இந்திய அணிக்கு எதிராக மாறிய தீர்ப்புகள் 2 தான்.
1. கார்த்திக்
2. யுவ்ராஜ்.

கார்த்திக்கின் ஆட்டமிழப்பால் போட்டி திசை மாறியது என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது.
யுவ்ராஜ் இன் ஆட்டமிழப்பு இடம்பெறும்போது போட்டி இலங்கை வசம்.

காரணத்தைக் கண்டுபிடிக்காமல் போட்டியை வெல்லும் வழிமுறையைக் கண்டுபிடித்தால் நல்லம்.

ஆனால் டோணியின் அறிக்கையொன்றைப் படித்தேன்.

// "It's a tricky situation for him," Dhoni said. "There's pressure when you are always in and out of the side. Especially on these wickets. Unfortunate to get out once when he didn't get the umpire's decision in his favour. He is working hard and his fitness has improved a lot." //

உண்மையாக டோணி என்ன எதிர்பார்க்கிறார்?
றோகித் சர்மாவின் இரண்டுமுறை ஆட்டமிழப்புகளும் கண்ணை மூடி வழங்கக்கூடிய வகையிலான ஆட்டமிழப்புகள்.
இவர்களின் நடத்தைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. :(

தர்ஷன் said...

அருமையான பதிவு
உண்மை தவறான தீர்ப்புகளின் போது அணியின் வெற்றியை முழுமையாக கொண்டாட முடியாத அசௌகரியத்திற்கு ஆளாகிறோம்.

யோ வொய்ஸ் (யோகா) said...

கங்கொனின் கருத்தை ஆமோதிக்கிறேன், சேவாக்கின் ஆட்டமிளப்பு சரியானதே. சுரேஸ் ரெய்னா ஏற்கனவே ஆட்டமிளந்து நடுவரினால் காப்பாற்றப்பட்டு பின்னர் நடுவரினாலேயே தவறிழைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். கிரிக்கட்டை இந்தியா நேர்மையாக விளையாடுவதாக உங்களது கடந்த பதிவில் கூறிய இந்திய ரசிகர்களே இப்போது என்ன சொல்வீர்கள்?

யுவராஜின் ஆட்டமிழப்பு மிகவும் தவறான ஓர் தீர்ப்பாகும், ஆனாலும் இவற்றுக்கு தார்மீக ரீதியில் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் காரணம் UDRS முறையை எதிர்க்கும் இந்திய அணி பிழையான தீர்ப்புகளால் தோற்க வேண்டும் என தொடரின் ஆரம்பத்திலேயே பதிவிட்டிருந்தேன், டெஸ்ட் தொடரில் நடக்காதது ஒரு தின போட்டிகளில் நடந்தது.


http://yovoicee.blogspot.com/2010/07/blog-post_17.html

கிரிக்கட் - பிழையான தீர்ப்புகளினால் இந்தியா தோற்க வேண்டும்

Irshath said...

நானும் அவ்வாறே...
நானும் அவ்வாறே...

//எவ்வளவு தான் ஒரு அணியின் ஆதரவாளராக இருந்தபோதும் தவறான தீர்ப்புக்களால் தனது அணி வெற்றிபெறுவதை எந்தவொரு உண்மையான கிரிக்கெட் ரசிகனும் விரும்பமாட்டான்.
நானும் அவ்வாறே...//

KUMS said...

//தர்மம்(தர்மசேன அல்ல) தலை காக்கும் என்று பெரியவங்க சும்மாவா//

இந்த மாதிரி சந்தர்பத்துக்கு ஏற்ற மாதிரி ஜோக் சொல்ல உங்களால் மட்டும்தான் முடியும் தலைவா..

@ கன்கொன்
//கார்த்திக்கின் ஆட்டமிழப்பால் போட்டி திசை மாறியது என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது.
யுவ்ராஜ் இன் ஆட்டமிழப்பு இடம்பெறும்போது போட்டி இலங்கை வசம்.//

முற்றிலும் உண்மை. ஆனால் யுவராஜ் இருந்திருந்தால் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கும். எனினும் இலங்கையின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது.

Anonymous said...

naduvargalai ethai vaithu thervu seikirarkal loshan anna?

இவன் சிவன் said...

லோஷன் பாஸ் அன்றைய போட்டியை பார்த்தேன். இந்தியா Surrender ஆனதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சர்ச்சைகள் எல்லாம் சப்பை கட்டுகளே.. தர்மசேனா அடுத்த அசோகா டி சில்வா வா ஆகிறாரோ??

JZ said...

இவங்களால இலங்கை கிரிக்கட் சபைக்கு வேற கெட்ட பேரு...
ஹ்ம்.. இந்தியர்களும் எவ்வளவு நாளுக்குத்தான் பொறுத்துக்கொண்டிருப்பார்களோ தெரியவில்லை...

கன்கொன் || Kangon said...

@KUMS

//
முற்றிலும் உண்மை. ஆனால் யுவராஜ் இருந்திருந்தால் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கும். எனினும் இலங்கையின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. //

ஆம். சிறிது அதிகமான ஓட்டங்களைப் பெற்றிருக்கலாம்.
ஆனால் போட்டியின் முடிவு மாறியிருக்க வாய்ப்புகள் மிக மிகக்குறைவு. அதனால்தான்
{{ யுவ்ராஜ் இன் ஆட்டமிழப்பு இடம்பெறும்போது போட்டி இலங்கை வசம். }} என்றேன்.

ஆனால் பிழையான தீர்ப்புகள் சச்சினுக்கு வழங்கப்பட்டாலும், கிறிஸ் மார்ட்டினுக்கு வழங்கப்பட்டாலும் தவறுதான்.

அடுத்த முறை UDRS இற்கு இந்தியா விரும்பி ஒப்புக் கொள்ளும் என்று நம்புகிறேன். ;-)

sinmajan said...

//தர்மம்(தர்மசேன அல்ல) தலை காக்கும்

தரம்.. :)

அஜுவத் said...

naan poaitiyai athikam paarkavillai; raina vin aattamilappai mattum paarthen.........

sinmajan said...

பேசாமல் கன்கொனை இலங்கை அணி தமது ஊடகத் தொடர்பாளராக நியமித்து விடலாமே..!! மனிதன் எப்போதும் புள்ளி விபரங்களோடு ஆஜராகி வெளுத்து வாங்குகின்றார்.. :)

Unknown said...

அன்பிற்கினிய நண்பரே(கன்கொன்)..,

/ /...இந்திய அணிக்கு எதிராக மாறிய தீர்ப்புகள் 2 தான்.
1. கார்த்திக்
2. யுவ்ராஜ்.../ /

ரெய்னா - குமார் - எனக்குத் தெரிந்தவரை குமார் தர்மசேன கொடுத்த ஆட்டமிழப்புகளில் ஆகப் பிழையானது இதுதான்.

- இதுவும் நீங்கள் சொன்னதுதான்..ஆக மொத்தம் மூன்று.

/ /...கார்த்திக்கின் ஆட்டமிழப்பால் போட்டி திசை மாறியது என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது..../ /

இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது...கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பது நுனிப்புல் மேயும் எனக்கே தெரியும் போது உங்களுக்கு தெரியாதா?...

/ /..யுவ்ராஜ் இன் ஆட்டமிழப்பு இடம்பெறும்போது போட்டி இலங்கை வசம்.../ /

யுவராஜ் அதிரடியை ஆரம்பித்துவிட்டால் தடுப்பது மிகவும் கஷ்டம். இந்த போட்டியில் மிகவும் கவனமாக விளையாடி அடுத்தடுத்து
4,6.. என்று டாப் கியரை மாற்றும்போதே அநியாயமாக அவுட்டாக்கிவிட்டார்கள். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் உட்பட நான்கு பேருக்கு தவறான(சர்ச்சைக்குரிய) தீர்ப்பு தரும்போது கண்டிப்பாக வெற்றி இலங்கை வசமாகத்தான் இருக்க முடியும். (நல்லவேளையாக சச்சின் தப்பி விட்டார் - இல்லைஎன்றால் தர்மசேனா எக்ஸ்ட்ரா போனசாக ஒரு LBW கொடுத்திருப்பார்.)

/ /...காரணத்தைக் கண்டுபிடிக்காமல் போட்டியை வெல்லும் வழிமுறையைக் கண்டுபிடித்தால் நல்லம்.../ /

பவுண்சி ஆடுகளங்கள்.., பார்ம் இன்றி தவிக்கும் முன்னணி வீரர்கள், தொடர்ச்சியான போட்டிகள்.., ஸ்டீவ் பக்னர்,அசோகா டி சில்வா,தர்மசேனா.... இந்த வரிசை தொடராமல் இருத்தல்...

.. இந்த பிழையான ஆட்டமிழப்புகள் இல்லாவிட்டால் தோல்வியின் அளவு
(200 பந்துகள் மீதம் இருக்கையில்) குறைந்து போட்டியை ரசித்திருக்கலாம்...

நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன்..ச.ரமேஷ்.

Rajasurian said...

// இந்தியா Surrender ஆனதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சர்ச்சைகள் எல்லாம் சப்பை கட்டுகளே.//

good one

Mohamed Faaique said...

கடைசி வரிகள் சூப்பர் அண்ணா.....

Unknown said...

அன்பிற்கினிய நண்பரே..,(லோஷன்)

/ /....1 . போட்டியின் முடிவை மாற்றியதிலும் இந்த தீர்ப்புக்கள் முக்கிய பங்கு வகித்திருக்கலாம்
2 . எவ்வளவு தான் ஒரு அணியின் ஆதரவாளராக இருந்தபோதும் தவறான தீர்ப்புக்களால் தனது அணி வெற்றிபெறுவதை எந்தவொரு உண்மையான கிரிக்கெட் ரசிகனும் விரும்பமாட்டான்.
3. அன்றைய போட்டியில் இலங்கையின் அபாரமான வெற்றி, திசர பெரேராவின் மிக சிறப்பான பந்துவீச்சு, மஹேல மீண்டும் ஆரம்ப வீரராக மாறி ஆடிய அதிரடியும், இந்தியாவின் படுமோசமான துடுப்பாட்டமும் குமார் தர்மசேனவின் கோல்மால் தீர்ப்புக்களால் மறைக்கப்பட்டது..../ /

உண்மை...
இது போன்ற பக்குவபட்ட கருத்துகளுக்கு என் போன்றவர்களின் ஆதரவு எப்போதும் உண்டு. நல்ல பதிவு.

நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..,
அன்புடன்...ச.ரமேஷ்.

Unknown said...

அன்பிற்கினிய நண்பரே..,(யோ வொய்ஸ் (யோகா) )

/ /.....UDRS முறையை எதிர்க்கும் இந்திய அணி பிழையான தீர்ப்புகளால் தோற்க வேண்டும்.../ /

இல்லை....விதிகளின்படி மூன்று முறை தானே அப்பீல் செய்யாலாம். இதனால் நடுவரின் முடிவை எதிர்த்து வெற்றி பெற்று அதன்பிறகு அந்த நடுவருக்கும் - அணிக்கும் நடக்கும் பனிப்போர் - தேவையா?

என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் மனசாட்சியின் படி நடப்பதே அனைவருக்கும் நல்லது.

நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..,
அன்புடன்...ச.ரமேஷ்

கன்கொன் || Kangon said...

அவ்வ்வ்வ்...
என் பின்னூட்டத்திற்கா பதில்....
பதிவிற்குப் போடுங்கள் ஐயா, கோவிக்கப் போகிறார் லோஷன் அண்ணா... ;-)

@றமேஸ்:

// இதுவும் நீங்கள் சொன்னதுதான்..ஆக மொத்தம் மூன்று. //

கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது என்று சொன்னேன்.
ஏற்கனவே ரெய்னாவின் ஆட்டமிழப்பு வழங்கப்படவில்லை, அதனால்தான் கூட்டிக்கழித்து பார்க்கும்போது என்றேன்.
ஆகவே குமார் தர்மசேனவின் இந்தத் தீர்ப்பு முடிவில் இந்தியாவிற்கு எதிராக அமைந்தது என்று சொல்ல முடியாது என்றேன்.


// இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது...கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பது நுனிப்புல் மேயும் எனக்கே தெரியும் போது உங்களுக்கு தெரியாதா?... //

யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?
எதுவும் நடக்கலாம் என்பது உண்மை, ஆனால் கார்த்திக் இந்தத்தொடரில் ஆடியவிதத்தையும், அந்தப் போட்டியில் தடுமாறியதையும் வைத்துத்தான் சொன்னேன்.
கார்த்திக் அந்தப் போட்டியில் சதம் அடித்திருந்தால் அது அதிசயமாக இருந்திருக்குமே தவிர, கார்த்திக் வேளைக்கு ஆட்டமிழந்தது பெரிய தாக்கமாக இராது இன்றேன்.
(நானும் நுனிப்புல் மேய்வான் தான். ஒரே இனம்தான். :) )

யுவ்ராஜ் - யுவ்ராஜ் ஆட்டமிழக்கும்போது இந்திய அணி 99 ஓட்டங்களையே பெற்றிருந்தது.
அதன்பின்னர் போட்டி மாறியிருக்கும் என்று நம்பவில்லை.


// பவுண்சி ஆடுகளங்கள்.., பார்ம் இன்றி தவிக்கும் முன்னணி வீரர்கள், தொடர்ச்சியான போட்டிகள்.., ஸ்டீவ் பக்னர்,அசோகா டி சில்வா,தர்மசேனா //

பவுண்சி ஆடுகளங்கள் போட்டிக்குத் தேவையானவை.
போர்ம் வீரர்கள் கையில்.
தொடர்ச்சியான போட்டிகள் - BCCI கையில்.
ஸ்டீவ் பக்னர் - :))
(அந்தப் போட்டியில் அவுஸ்ரேலியாவுக்கு எதிராகவும் சில தீர்ப்புகள் போனது. அந்தாளை எதிரியாகப் பார்க்காதீர்கள். )
தர்மசேன - :))
அசோக டீசில்வா - இப்போது அற்புதமான நடுவர்.
இங்கிலாந்தில் பார்த்தேன், சிறப்பான நடுவராகச் செயற்படுகிறார்.
அனுபவம் கைகொடுக்கிறது என்று நம்புகிறேன்.

ம.தி.சுதா said...

அண்ணா நல்ல கட்டுரை... யார் தப்புச் செய்தாலும் தப்பு தப்பு தானே... இலங்கை வீரரின் உண்மையான வெற்றியை இந்த விசயம் பாதித்து தான் விட்டது. இறுதிப் போட்டியில் தான் முடிவு தெரியும். எல்லாம் சங்காவின் சிறந்த முடிவில் தான் இருக்கிறது. (அன்பு அண்ணனே ஒரு சந்தேகம் சங்கா அடுத்த உலகக்கிண்ணத்திற்குத் தானே இந்த இளம் வீரர்களைக் கேட்கிறார் இலங்கைத் தேரிவுக்குழுவை வைத்து காமடி கீமடி ஒண்ணும் பண்ணலியே)

Unknown said...

UDRS இன்னும் முழுமையான system அல்ல. எனக்கென்னவோ அந்த முறையை படிப்படியாக முதல்தர போட்டிகளில் பரிசோதித்துப் பார்த்து உள்ளே கொண்டுவரலாம். இப்போது இருப்பது அரைகுறை என்பதற்கு என்னிடம் வாதங்கள் உள்ளன. யாராவது விரும்பினால் கதைக்கலாம்.

கன்கொன் || Kangon said...

@ கிருத்திகன்:

உள்ளேன். ;-)
UDRS என்பது முழுமையான ஒன்றல்ல, ஆனால் UDRS மூலம் இப்போது இருப்பதைவிட சிறந்த முடிவுகளைப் பெறலாம் என்பது என் கருத்து.
சர்வதேச நடுவர்களின் முடிவுகளில் சராசரியாக 94.8 சதவீதமான முடிவுகள் மட்டுமே (92 என்று கிறிக்கின்போ talk show ஒன்றில் கேட்ட ஞாபகம். ஆனால் ஐசிசி 94.8 என்றதாக படித்த ஞாபகம்.) சரியாக அமைகின்றன.
அதாவது 5.2 வீதம் முடிவுகள் பிழையானவை.
UDRS ஐப் பயன்படுத்துவதன் மூலம் 98 அல்லது 99 வீதமான முடிவுகளை சரியாகப் பெறலாம் என்பது என் கருத்து.

அதில் இருக்கும் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, முடிவுகள் மெருகேறும் என்றால் பயன்படுத்துவதில் தவறில்லை என்பது என் கருத்து.

ஒன்றுமே இல்லாமல் இல்லாமல் இருப்பதை விட ஏதாவது இருத்தல் நல்லது தானே?

புவனேஸ்வரி ராமநாதன் said...

நடுநிலையான பார்வை.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner