July 19, 2010

முத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்



நேற்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்கம் நடத்திய முத்தமிழ் விழாவுக்கு அழைத்திருந்தார்கள்.


மூன்று மணிக்கு என்று சொல்லியிருந்தார்கள்.. (அழைப்பிதழில் 2.50 என போடப்பட்டிருந்தது)
வாசலிலேயே வரவேற்ற மாணவன் ஒருவரிடம் ஆரம்பிச்சாச்சா? என்று கேட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரம் அண்ணா.. தெரியும் தானே என்றார்.
சிரித்துக்கொண்டே கொழும்பு நேரமா இல்லை கம்பஸ் நேரமா என்றதற்கு இரண்டும் ஒன்று தான் என்றார்.


அரை மணிநேரம் தாமதித்தே ஆரம்பித்தது. 
கவிக்கோ அப்துல் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார்.


பல்கலைக்கழக கலை விழாக்களில் நம்பிக் கலந்துகொள்ளலாம். ஏனைய கூத்துக்கள்,களியாட்டம் போல இல்லாமல் சமூகத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதாவது நல்ல தகவல் சொல்லும் அம்சங்கள் ஒன்றாவது அரங்கேறும்.




நேற்றைய முத்தமிழ் விழாவில் ரசித்த & மனதைத் தொட்ட சில விஷயங்கள்..


தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிய அறிவிப்பின்போது காணொளியாக வரவுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து இது. இதற்கும் மரியாதை செலுத்துவோம் என்று அறிவித்தார். ஆகா.. இங்கேயும் செம்மொழியான அலறப்போகிறதா என்று பார்த்தால்.. 
வாழ்க நிரந்தரம் - மிக அழகாக திரையில் விரிந்தது.. 
கலைஞர்,ரஹ்மான்,கௌதம் மேனன் மூவருமே இந்தப் பாடலைக் கேட்டுப் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும்.
மகாகவி பாரதியின் வரிகளைக் காயப்படுத்தாத இசை.. 
பாடக,பாடகிகளை முன்னிலைப்படுத்தாத காணொளி..
இயற்கையான தமிழரின் வாழ்க்கை..


பின்னர் இணையத்தில் கூகிள் இட்டு தேடிப் பார்த்த வேளை இந்தியாவின் மக்கள் தொலைக்காட்சியின் படைப்பு இது என்று தெரிந்தது.
வாழ்த்துக்கள்..
நீங்களும் பார்க்கமலிருந்தால் சுவையுங்களேன்..








அழகாக  இதைத் தேடியெடுத்துப் பயன்படுத்திய பல்கலை மாணவருக்கு நன்றிகள்.


பல்கலைக்கழகப் பெரும் பொருளாளரின் உரை.. 
அந்தப் பெண் விரிவுரையாளரின் குரலில் தொனித்த தமிழ் சமூகம் மீதான ஏக்கமும்,எதிர்கால மாணவர்களுக்குக் கொடுத்த நம்பிக்கையும்,தன் மாணவர்களுக்கு இனி ஆற்றவேண்டிய கடமை பற்றி அவர் வலியுறுத்திய விதமும் பல்கலை மாணவர்கள் சரியான வழிகாட்டிகள் அமையப் பெற்றுள்ளார்கள் என்ற மகிழ்வைத் தந்தது.


முன்னர் தோன்றிய மூத்த குடி..


இந்த நாடகம் பற்றி எழுதவே வேண்டும் எனத் தான் இந்தப் பதிவு.


சமூக நாடகம் என்றால் இப்படித் தான் இருக்கவேண்டும் என்ற அடிப்படைகளைக் கொஞ்சம் மாற்றி புது யுக்திகள் மேடை நாடகங்களில் புகுத்தப்பட்டு அதனூடாக நாட்டு,சமூக நடப்புக்களையும்,சொல்லப்படவேண்டிய விடயங்களையும் வெளிப்படுத்தி வருவதை நான் கொழும்பு கல்லூரிகள் பலவற்றின் நாடகங்களிலும்,பல்கலைக்கழக நாடகங்களிலும் கடந்த பத்தாண்டுகளில் அதிகமாகவே அவதானித்து வந்திருக்கிறேன்.


நேரடியாக விஷயங்களைப் பொது மேடையில் அதுவும் இதுபோன்ற பல்கலை விழா மேடையில் சொல்வது எத்துணை ஆபத்தானது என்பது யாருக்கும் தெரிந்ததே.
அதையே நாசூக்காக,ஆனால் மனதில் உறைக்கும்படி சித்தரிப்பு மூலம் சொல்லியதே 'முன்னர் தோன்றிய மூத்த குடியின்' சிறப்பு. 


ஒரு நீதிமன்ற அரங்க அமைப்பு.. வக்கீல் ஒருவர் நீதிபதியின் முன்னால் ஒரு சமூகத்தின் வாழ்வியல் அவலங்கள் பற்றி சொல்கிறார்.
பின்னால் உள்ள திரையில் முதலில் இலங்கை வரைபடம், தொடர்ந்து மாறும் காட்சிகளாக காயமுற்று அவயவங்கள் இழந்த சிறுவர் முதல் பெரியோர் வரை,யுத்த வடுக்கள், இவற்றோடு இந்திய வரைபடம், சீனா,அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வரைபடங்களும் வந்து செல்கின்றன.
சமூகத்தின் அவலங்கள் பற்றி சொல்லும் அதே நேரம், அந்த சமூகத்தின் வாழ்வு முறையின் அடிப்படை குணாம்சங்களையும் விமர்சிப்போடு சொல்கிறார் வக்கீல்.


பின் சாட்சிகளை அழைக்கிறார்.
இருப்பிடம்,சொத்து அனைத்தையும் இழந்து பின் மகனொருத்தனை யுத்தத்தில் இழந்து இன்னொரு மகனைக் காணவில்லையென்று தேடும் பரிதாபத் தந்தை வந்து புலம்புகிறார்.


தொடர்ந்து கணவன் இருக்கிறானா இல்லையா என அறியாமல் கொழும்பிலே இரு குழந்தைகளோடு வாழ வழியில்லாமல் தவிக்கும் ஒரு இளம் பெண்.


உண்மைகளை சொன்னதால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்.


இரு கைகளையும் பறிகொடுத்து துயருறும் இளம் பெண்.


அற்புதமான உருக்கமான நடிப்பு.. தத்ரூபமென்றால் அப்படியொரு தத்ரூபம்.
அரங்கத்தில் அப்படியொரு உணர்ச்சியலை.. சிலர் கண்கலங்கியதையும் அவதானித்தேன்..
எனக்கு ஒரு விழாவில் அல்லாமல் ஒரு அகதிமுகாமிலோ,களத்திலோ நேரடியாக நிற்பது போல் இருந்தது.
(ஆனால் இவ்வளவு உணர்ச்சிமயமான காட்சியின் போதும் பின்னாலிருந்த சில பொறுப்பற்ற விசிலடிச்சான் குஞ்சுகள் மேடையில் நின்ற தம் சக மாணவிகளுக்கு விசிலடித்து தம் அபிமானத்தை வெளிப்படுத்தியது வெறுப்பைத் தந்தது)


இந்த சாட்சிகள் வந்து போகும் இடைவெளிகளில் தலைவர் வாழ்க என்ற இரைச்சலான கோஷங்களுக்கிடையில் குர்தா+வேட்டி அணிந்த ஒருவர் அவசரமாக வந்து மேடையிலிருந்த ஒரு குத்துவிளக்கேற்றி செல்கிறார்.
(அவர் கழுத்தில் துண்டு போட்டிருந்தால் அவ்வளவு தான்.. நாடகத்தையும் பிரசாரமாக்கி,மாணவரையும் சிக்கலில் தள்ளி இருக்கும்)


சாட்சிகள் முடிந்து நீதிபதி தீர்ப்பை வாசிக்க ஆரம்பிக்கிறார்.
இந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிவதாகவும்,அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று வாசித்துக்கொண்டே இருக்கையில், 'தலைவர்' அடாவடித் தனமாக உள்ளே வருகிறார்..


பின்னணியில் மிக சத்தமாக திருமணத்துக்கான மங்கள இசை முழங்குகிறது..
சபையோரை மிகப் பவ்வியமாக பார்த்து "வேறொன்றும் இல்ல.. இங்கே திருமணம் ஒன்று தான் நடக்குது.." என்று சிரித்துக் கொண்டே மேடையின் பக்க வாட்டில் டேய்,அடேய் என்று அதட்டிக் கொண்டே ஒரு ஆணையும் பெண்ணையும் பலவந்தமாகப் பிடித்து இழுத்து திருமணம் முடித்து வைக்கிறார்.


அடாவடிகளுக்கிடையில் "இங்கே திருமணம் தான் நடக்கிறது.. மங்கள காரியம்,அபிவிருத்தி தான் நடக்கிறது" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே திரையையும் பலவந்தமாக இழுத்து மூடுகிறார்.


எங்களுக்கு கொஞ்சம் பெருமூச்சும்,நிறையக் கோபமும் வருகிறது.


அத்தனை பேரின் நடிப்பு,வசன உச்சரிப்புக்கள்,உடல் பாவங்கள் அருமை. 


நகைச்சுவை நாடகம்..
ராவணன் என்று பெயர்.
சின்ன சின்ன நகைச்சுவைக் கோர்வைகளால் சிரிக்க வைத்தார்கள்.
அரண்மனை என்று நினைக்குமாறு ஒரு செட்.
ராஜா தேர்தலில் நிற்க ஆசைப்பட்டு தனக்கு ஆள் சேர்க்கிறார்.
ஆஸ்தான குருவாக ரஞ்சிதானந்தா..
நிதியமைச்சராக பிச்சைக்காரி.. நாடு நாடா சென்று கையேந்த உதவுமாம்.
ராஜதந்திரியாக காதலிக்கும் இளம் பெண். (காதலிக்கும் இளம்பெண்கள் தான் மிகச் சிறந்த ராஜதந்திரிகள் என்று காரணங்களோடு வசனம் வேறு)
பெட்டி மாற்றுவது - பணப் பெட்டி வாக்குப் பெட்டி என்று தேர்தலில் வெல்லும்(/வென்ற) முறை பற்றி ஒரு காரமான நக்கல்..


புத்திசாதுரியத்தொடு சமூக,அரசியல் நக்கல்களை நாம் சிரிக்கக்கூடியவாறு வழங்கிய இந்த நாடகத்தை இயக்கிய மாணவன் தான் கழுத்தில் LOGIC என்ற அட்டையுடன் மேடை முழுவதும் ஒவ்வொரு காட்சியிலும் திரிகிறார்.
கேட்டால் இந்த நாடகத்திலே யாரும் Logic இல்லை என்று சொல்லிவிடக் கூடாதாம்.


இதே போல இடையிடையே வரும் பாடல்களுக்கிடையில் Censor அட்டையோடு ஒருவர் திரிகிறார். 
சிரித்து ரசித்தேன்.


 கவிக்கோவின் தலைமையில் கவியரங்கம்..


நான்கு ஆண்களும் ஒரு பெண்ணுமாக அறுவர்.
வாருங்கள் வடம் பிடிப்போம் என்ற பொதுத் தலைப்பில், ஆறு உப தலைப்புக்கள்.




கவிக்கோ தனக்கு மண்டபத்துக்கு வந்தபின்னரே தலைப்பு தரப்பட்டதாக சொன்னார். முன்பே தந்திருந்தால் கவிக்கோவிடமிருந்து கலக்கல் கவிதை ஒன்று கிடைத்திருக்கும்.
ஆனால் பல்கலை மாணவ,மாணவியர் சபையோரின் கரகொஷங்களையும் கவிக்கோவின் பாராட்டுகளையும் அள்ளிப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அற்புதமாகக் கவியுரைத்தார்கள். 
தமிழ் கரைபுரண்டோடியது.. கவிநயத்துடன் தமிழரின் வாழ்வு அவலம், புலம்பெயர் பிரிவுகள்,யுத்த அழிவுகள்,சமூக சிக்கல்கள்,செம்மொழி சர்ச்சைகள்.. எந்தவொரு விடயத்தையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.


அந்தக் கவிவரிகளை இங்கே அடுக்கப் போனால் நீளம் போதாது.. எனக்கு நேரம் போதாது.
கவியரங்கம் என்ற பெயரில் அண்மைக்காலத்தில் தனிநபர் புகழ்பாடிக் கேட்ட பின்னர் இதுபோன்ற உணர்வும்,தமிழும், இடையிடையே நகைச்சுவையும் இணைந்த ஒரு அற்புதமான கவியரங்கைக் கேட்டது மன மகிழ்வாக இருந்தது.


பல பல்கலை மாணவ,மாணவியர் என் பதிவுகளையும் வாசிப்பது நான் அறிந்ததே. நேற்று மேலும் தெரிந்துகொண்டேன்.
உங்கள் அறுவரதும் கவிதைகளை எனக்கு மின்னஞ்சலினால் அனுப்பி வைத்தால் பூரிப்போடு பிரசுரிக்கிறேன். (உங்களுக்கு விருப்பமிருந்தால் &சொந்தமாக வலைத்தளங்கள் இல்லாவிட்டால்)  


கடைசியாகக் கவிதை வாசித்தவர் நேரத்தை அதிகமாக எடுத்ததும் வேகமாகத் தன் கருத்துக்கள் அத்தனையையும் சொல்லிவிடவேண்டும் என்று வேகமாகக் கவிதை வாசித்ததும் ஒரு குறை என்றால், ஒருவருக்கு காதலிக்க வாருங்கள் வடம்பிடிப்போம் என்று வரிகொடுத்து அவரை அதிகம் பாடவிடாமல் செய்ததும் ஒரு குறை தான்.


கவிக்கோ தயாராக வராத காரணத்தால் தமிழ் மொழியின் சிறப்புப் பற்றி தான் முன்னர் எழுதிய கவிதையொன்று வாசித்தார்.


எனினும் உரையாற்றியபோது வழமையாக இலங்கை வரும்போது அவர் உரையாற்றுவது போலவே இலங்கைத் தமிழையும், ஈழத் தமிழர் தமிழ் மொழியைப் பேணிக் காப்பதையும் பற்றி உணர்ச்சிபூர்வமாக சிலாகித்தார்.
வழமை போல கரகோஷங்கள்.


கவிக்கோவின் உரையில் சில சுவாரஸ்ய விடயங்கள்..


இந்தியாவிலிருந்து இங்கே உணவு வருகிறது.
ஆனால் இலங்கையிலிருந்து தான் எமக்கு உணர்வு வருகிறது.


இங்கே(இலங்கையில்) இனம் அழிகிறது 
அங்கே மொழி அழிகிறது.


அடுத்த உலகத் தமிழ் மாநாடு உங்கள் ஏற்பாட்டில் இங்கே நடைபெறும் என நம்புகிறேன்.


இந்த ஒட்டுமொத்த விழாவில் தெரிந்த குறை என நான் நினைத்தது ஒரு நடனம்..
ஒவ்வொரு பீடமும் தம்மால் முடிந்த நடனங்களைத் தந்தன.
அதில் ஒன்று ரஹ்மானின் செம்மொழிப் பாடலுக்குப் பரதத்தோடு ஆரம்பித்து தாஜ்மகால் சொட்ட சொட்ட பாடலுக்கு போய் தாளம் bit song க்கு எல்லாம் ஆடினார்கள்.
ரஹ்மான் பாடல்கள் தமிழ் சரி.. நடனம்?
  
இன்னுமிரு முக்கிய விடயம்.. 


மூத்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் வானொலிக் குயில் திருமதி.ராஜேஸ்வரி சண்முகம் அவர்களை பல்கலை தமிழ் சங்கம் கௌரவித்தமை.


முதல் தடவையாக கொழும்பு பல்கலைக் கழகத்தின் தமிழ் சங்கம் சமூகத்தின் பல்வேறு துறையிலும் உள்ள சிலரைக் கௌரவித்தார்கள்.
அதில் சிறந்த வலைப்பதிவருக்கான விருதும் வழங்கப்பட்டது சிறப்பு.
எனக்கு அந்த விருது கிடைத்தது பெரிய மகிழ்ச்சி. 


ஒவ்வொரு வருடமும் இந்த விருது எமது பதிவர்களுக்குக் கிடைக்க இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தந்துள்ளார்கள்.


ஒரு அங்கீககரிக்கப்பட்ட சமூகமான பல்கலை மாணவரிடமிருந்து வரும் விருதாக இந்த விருதை வரவேற்போம்.


விருதைப் பெற்ற பின் உரையாற்ற சொன்னபோது 
இலங்கைப் பதிவர்கள் அனைவருக்கும் கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதுவதாக எம் அனைவரது சார்பாகவும் நன்றிகளை உரைத்தேன்.
அத்துடன் யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கட்டற்ற மட்டற்ற சுதந்திரத்தை இந்த வலைப்பதிவுகள் பெருகி எமக்கு வழங்கியிருந்தாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்றிருக்கும் நிலையை ஆரோக்கியமாக நாம் அனைவரும் மாற்றவேண்டும் என்றும் குறிப்பிட்டேன்.


அந்த மாணவர்களின் அன்பு,அங்கீகாரம்,தமிழின் மீதான அக்கறைக்கு நன்றிகள்+வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள்.


முத்தமிழ் விழா பற்றி எழுதும் இந்தப் பதிவில் இன்னொரு முக்கிய தமிழ்ப் பெரியார் பற்றியும் நினைவுபடுத்த வேண்டும்.
இன்று முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம்,
யாழ் நூல் தந்த கிழக்கிலங்கையின் தவப்புதல்வரை பெருமையோடு தமிழ்பேசும் உலகம் சார்பாக நினைவுகூருவோம்.

36 comments:

கன்கொன் || Kangon said...

வாழ்த்துக்கள் அண்ணா....

நடைபெற்ற நிகழ்வுகள் சிறப்பாக இருந்திருக்கின்றன என்று தெரிகிறது.

// இங்கே(இலங்கையில்) இனம் அழிகிறது
அங்கே மொழி அழிகிறது. //
:(


// அத்துடன் யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கட்டற்ற மட்டற்ற சுதந்திரத்தை இந்த வலைப்பதிவுகள் பெருகி எமக்கு வழங்கியிருந்தாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்றிருக்கும் நிலையை ஆரோக்கியமாக நாம் அனைவரும் மாற்றவேண்டும் என்றும் குறிப்பிட்டேன். //

ம்...
விளங்கவேண்டுமே... :(

மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா... :)

கன்கொன் || Kangon said...

அந்தத் தமிழ்மொழ வாழ்த்துப்பாடல் முன்பைவிட செம்மொழிப்பாடல் வந்த பின்னர் தான் இன்னும் நிறையவே பிரபலமானது, அந்தப் பாடலின் அருமை புரிந்தது.
அதற்காக ரஹ்மானிற்கும், கெளதம் மேனனுக்கும், கலைஞருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

கன்கொன் || Kangon said...

// யாழ் நூல் தந்த கிழக்கிலங்கையின் தவப்புதல்வரை பெருமையோடு தமிழ்பேசும் உலகம் சார்பாக நினைவுகூருவோம். //

:)))

ஆமாம்.
சுவாமி விபுலானந்தரின் தமிழ்ப்பணிகள் போற்ற வேண்டியன....
நினைவில் நிறுத்திக் கொள்வோம்.

Bavan said...

வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா..;)))

Anonymous said...

" ஆறாத காயங்கள் ?????????"

அண்ணா inception படம் பற்றி எழுதுங்களே!!

Subankan said...

வாழ்த்துக்கள் அண்ணா....

:))

சி தயாளன் said...

கொழும்பு பல்கலைக்கழக தமிழ்சங்கத்தினருக்கு என் பாராட்டுக்கள்.

இது பற்றிய கருத்துப்பகிர்வினை தந்தமைக்கு என் நன்றிகளும். :-)))

anuthinan said...

வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா!!!

உங்கள் பதிவில் இருந்தே தெரிகிறது!!! நேற்றைய விழாவின் சிறப்புகள் பற்றி...!!


மீண்டும் வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்கள் அண்ணா....

Unknown said...
This comment has been removed by the author.
SShathiesh-சதீஷ். said...

//ஒவ்வொரு வருடமும் இந்த விருது எமது பதிவர்களுக்குக் கிடைக்க இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தந்துள்ளார்கள்.


ஒரு அங்கீககரிக்கப்பட்ட சமூகமான பல்கலை மாணவரிடமிருந்து வரும் விருதாக இந்த விருதை வரவேற்போம்.//

உண்மையில் மிகப்பெரிய அங்கீகாரம் பதிவர்களுக்கு கிடைத்துள்;ளது. இது எங்களை இன்னும் பொறுப்பை எழுதுங்கள் என்று தூண்டியிருப்பது மட்டுமன்றி எங்கள் கடமையையும் சுட்டிக் காட்டி இருக்கின்றது.

வாழ்த்துக்கள் அண்ணா. மீண்டும் ஒரு தடவை

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் லோஷன்

ஜெகதீபன் said...

நன்றி அண்ணா நிகழ்ச்சிக்கு நேரடியாக சென்ற உணர்வைத்தந்தது உங்கள் வர்ணனை.
விருதுக்கு வாழ்த்துக்கள்...!!!!

Begum said...

அருமையான பதிவு லோஷன். விழாவை நேரில் பார்த்து, ரசித்த திருப்தி.
உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். உங்களுக்கு அந்த விருது கிடைத்தது மிக மிகப் பொருத்தமே.

அன்புடன் ஜனூ.

தர்ஷன் said...

விருதுக்கு வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா
செம்மொழிப் பாடல் அத்தனை மோசமாகவா இருக்கிறது. ரொம்பக் காட்டமாக விமர்சித்திருக்கிறீர்கள்.

janaha said...

அண்ணா....

கொழும்பு பல்கலைக்கழக தமிழ் மாணவி மற்றும் தமிழ் சங்க உறுப்பினர் என்ற வகையில் எங்கள் முத்தமிழ் விழா குறித்த உங்கள் தரமான பதிவிற்கு முதற்க்கண் எங்கள் நன்றிகள்....


முத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றியமூத்த குடியும்" என்ற தலைப்பினூடான எமது நாடகத்தின் மீதான பதிவிற்கும், பாராட்டுதலிட்கும் மிக்க நன்றிகள்...

தொடர்ச்சியான பயணத்தினூடு இது போன்ற பல விருதுகளை சுவைக்க வாழ்த்துக்களுடன்........

வந்தியத்தேவன் said...

விருதுக்கு வாழ்த்துக்கள்.

செம்மொழிப் பாடலை விமர்சிக்கவேண்டிய வேளையில் ஏனோ நீங்கள் விமர்சிக்கவில்லை இதற்க்கு கண்டனங்கள்.

எதற்காக கருணாநிதியின் ஜால்ரா அப்துல்ரகுமானை அழைத்தார்கள். செம்மொழி மேடையில் கருணாநிதி தான் தமிழ் என்பார்கள். இங்கே வந்து நீங்கள் தான் தமிழை வளர்க்கின்றீர்கள் என ஒரு ஐஸ். இப்படியான நாணல்களை எல்லாம் இனிமேல் அழைக்ககூடாது.

உண்மையான தமிழ்மொழிப் பற்றாளர்களை அழைத்திருக்கலாம். இது கம்பன் கழகம் யாழ் நூலகம் எரித்தவர்களுக்கு உதவியவருக்கு பாராட்டு விழா எடுத்தது போல் இருக்கின்றது.

Karthick Chidambaram said...

விருதுக்கு வாழ்த்துக்கள் நண்பரே. :))

ஆதிரை said...

விருதுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.
குறிப்பிட்ட கவிதைகளை பெற்றுத் தாருங்கள்.

kuma36 said...

வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
வாழ்த்துக்கள் அண்ணா....//

நன்றி


// அத்துடன் யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கட்டற்ற மட்டற்ற சுதந்திரத்தை இந்த வலைப்பதிவுகள் பெருகி எமக்கு வழங்கியிருந்தாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்றிருக்கும் நிலையை ஆரோக்கியமாக நாம் அனைவரும் மாற்றவேண்டும் என்றும் குறிப்பிட்டேன். //

ம்...
விளங்கவேண்டுமே... :(//

விளங்கியிருக்கும்..திருந்தவேண்டும்.



கன்கொன் || Kangon said...
அந்தத் தமிழ்மொழ வாழ்த்துப்பாடல் முன்பைவிட செம்மொழிப்பாடல் வந்த பின்னர் தான் இன்னும் நிறையவே பிரபலமானது, அந்தப் பாடலின் அருமை புரிந்தது.
அதற்காக ரஹ்மானிற்கும், கெளதம் மேனனுக்கும், கலைஞருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.//

சரி சொன்னாப் போச்சு


==============================
Bavan said...
வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா..;)))//

நன்றிகள்
===============================

Subankan said...
வாழ்த்துக்கள் அண்ணா....

:))//

நன்றிகள் சிமைலி சுபாங்கன்

ARV Loshan said...

’டொன்’ லீ said...
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்சங்கத்தினருக்கு என் பாராட்டுக்கள்.

இது பற்றிய கருத்துப்பகிர்வினை தந்தமைக்கு என் நன்றிகளும். :-)))//

நன்றிகள் ட்விட்டர் & பஸ்ஸர் டொன் லீ.. நீண்ட நாட்களின் பின் பின்னூட்டத்துக்காவது பதிவராய் வந்துள்ளீர்கள்.

====================

Anuthinan S said...
வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா!!!/

நன்றிகள்


==============================
மாறன் said...
வாழ்த்துக்கள் அண்ணா....//

நன்றிகள்

ARV Loshan said...

SShathiesh-சதீஷ். said...

உண்மையில் மிகப்பெரிய அங்கீகாரம் பதிவர்களுக்கு கிடைத்துள்;ளது. இது எங்களை இன்னும் பொறுப்பை எழுதுங்கள் என்று தூண்டியிருப்பது மட்டுமன்றி எங்கள் கடமையையும் சுட்டிக் காட்டி இருக்கின்றது.//

எல்லோரும் அவதானிக்கிறார்கள் என்பதையும் நாம் உணரவேண்டும்.

வாழ்த்துக்கள் அண்ணா. மீண்டும் ஒரு தடவை//

நன்றி
=======================

யோ வொய்ஸ் (யோகா) said...
வாழ்த்துக்கள் லோஷன்//

நன்றி யோ

=======================

ஜெகதீபன் said...
நன்றி அண்ணா நிகழ்ச்சிக்கு நேரடியாக சென்ற உணர்வைத்தந்தது உங்கள் வர்ணனை.
விருதுக்கு வாழ்த்துக்கள்...!!!!//

நன்றிகள் சகோதரா

ARV Loshan said...

Begum said...
அருமையான பதிவு லோஷன். விழாவை நேரில் பார்த்து, ரசித்த திருப்தி.
உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். உங்களுக்கு அந்த விருது கிடைத்தது மிக மிகப் பொருத்தமே.//

நன்றி ஜனூ..

===================

தர்ஷன் said...
விருதுக்கு வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா//

நன்றிகள்.
செம்மொழிப் பாடல் அத்தனை மோசமாகவா இருக்கிறது. ரொம்பக் காட்டமாக விமர்சித்திருக்கிறீர்கள்.//

இல்லை என்கிறீர்களா?
மோசம் என்று சொல்லவில்லை.. இதைவிட நல்லா இருந்திருக்கலாம் என்கிறேன்

ARV Loshan said...

janaha said...
அண்ணா....

கொழும்பு பல்கலைக்கழக தமிழ் மாணவி மற்றும் தமிழ் சங்க உறுப்பினர் என்ற வகையில் எங்கள் முத்தமிழ் விழா குறித்த உங்கள் தரமான பதிவிற்கு முதற்க்கண் எங்கள் நன்றிகள்....//

நன்றி ஜனஹா.


முத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றியமூத்த குடியும்" என்ற தலைப்பினூடான எமது நாடகத்தின் மீதான பதிவிற்கும், பாராட்டுதலிட்கும் மிக்க நன்றிகள்...//

நன்றி நான் அதை மிக உணர்ச்சிபூர்வமாக ரசித்தேன். நீங்களும் நடித்த ஞாபகம் உங்கள் பெயரைப் பார்த்தவுடன்.விருதும் கிடைத்ததா?



தொடர்ச்சியான பயணத்தினூடு இது போன்ற பல விருதுகளை சுவைக்க வாழ்த்துக்களுடன்........//

நன்றி

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
விருதுக்கு வாழ்த்துக்கள்.//

நன்றி


செம்மொழிப் பாடலை விமர்சிக்கவேண்டிய வேளையில் ஏனோ நீங்கள் விமர்சிக்கவில்லை இதற்க்கு கண்டனங்கள்.//

அதற்கெல்லாம் உங்களை மாதிரி மூத்த,பெரியவர்கள் இருக்கிறீர்களே. அதனால் பின்னூட்டி எனது எதிர்ப்பை அப்போது தெரிவித்திருந்தேன் :)



எதற்காக கருணாநிதியின் ஜால்ரா அப்துல்ரகுமானை அழைத்தார்கள். செம்மொழி மேடையில் கருணாநிதி தான் தமிழ் என்பார்கள். இங்கே வந்து நீங்கள் தான் தமிழை வளர்க்கின்றீர்கள் என ஒரு ஐஸ். இப்படியான நாணல்களை எல்லாம் இனிமேல் அழைக்ககூடாது.//

அவரது கவிப்புலமை கருதி என நினைக்கிறேன்.ஆனால் மற்றவருடன் பார்க்கையில் கவிக்கோ காக்காய் பிடிப்பது குறைவே.

மாணவர்கள் அவருக்கு முன்னாலேயே செம்மொழி,கவியரங்கு,கலைஞர்,காக்கா என்பவற்றை ஒரு பிடி பிடித்தார்கள்

உண்மையான தமிழ்மொழிப் பற்றாளர்களை அழைத்திருக்கலாம்.//

ஒன்றிரண்டு பேரின் பெயர்களை முன் மொழியுங்களேன். இனி விழா நடத்துபவர்களுக்கு உதவியாக அமையும் :)



=======================

Karthick Chidambaram said...
விருதுக்கு வாழ்த்துக்கள் நண்பரே. :))//

நன்றி
================

ஆதிரை said...
விருதுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.//

நன்றி


குறிப்பிட்ட கவிதைகளை பெற்றுத் தாருங்கள்.//

காத்திருக்கிறேன்

ARV Loshan said...

கலை - இராகலை said...
வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா//

நன்றி கலை.நீண்ட நாட்களின் பின்..

Fathik said...

சிறந்த blogger விருதுக்காக லோசன் அண்ணாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்கம் நடத்திய அவ்விழாவிற்கு சென்றது எனது பாக்கியம் என்றே கருதுகின்றேன். மிக அற்புதமான நிகழ்ச்சிகள், மிக நேர்தியான கருப்பொருள் கொண்ட நாடகம், இப்படியான திறமையான மாணவர்களுக்கு ஓர் நல்ல களத்தினை ஊடகத்துடன் தொடர்புகளைக்கொண்ட லோசன் அண்ணா போன்றவர்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என வேண்டுகின்றேன்

மனோரஞ்சன் said...

வார்த்தைகளினூடே விழாவை பார்க்கும் வழிசெய்தமைக்கு நன்றிகள் மற்றும் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா!
cheers.......!

suganthan said...

அண்ணா வணக்கம்
வருகைக்கு நன்றி..வழமைபோல் தரமான விமர்சனம்.
எங்களை ஊக்குவிப்பதாக அமைந்தது..
நான் வாசித்த கவிதைகாண என் முகப்புத்தக இணைப்பு.விரும்பினால் இணைக்க http://www.facebook.com/profile.php?id=1486307373&v=app_2347471856#!/note.php?note_id=145494238794708&id=1486307373&ref=mf.

Komalan Erampamoorthy said...

வாழ்த்துக்கள் அண்ணா! ஆனால் என்னால் அப்துல் ரகுமானை மதிக்கமுடியவில்லை,காரணம் செம்மொழி மானாட்டு கவியரங்கத்தில் இவருடய கவிவரிகள்..... இறைவனிடம் கேட்டேன் தமிழின் முகவரி இறைவன் சொன்னான் மு.கருணானிதி என்று..... இவ்வாறு செல்கிறது....இவர் பார்வையில் கருணானிதி இல்லாவிட்டால் தமிழ் இல்லை என்பது..........
தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிய அறிவிப்பின்போது காணொளியாக வரவுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து,,,
என்னை பொறுத்தவரை ராம்தாஸ் {பா.ம.க} கருணானிதியை விட சிறந்தவர் தமிழ் மொழியில்..காரணம் இவருடைய் எண்ணக்கருவே இந்த தமிழ் மொழி பாடல் இசை,காட்சி வடிவமைப்பு................

செல்வராஜா மதுரகன் said...

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் பதிவுக்கும்,
நான்தான் அந்த நீண்ட கவிதை வாசித்த நபர். அதற்கு காரணம் அத்தனை விடயங்களையும் தவற விட விரும்பவில்லை அதனால் வேகமும் கூடி விட்டது. தற்போது பரீட்சைக்காலம் இன்னும் ஒரு வாரத்தில் எனது கவிதையை தட்டச்சு செய்து அனுப்பி வைக்கிறேன்.. அடுத்து போதுத்தளைப்பை தெரிவு செய்தது நான்தான் அனால் உப தலைப்புக்கள் ஒவ்வொருவராலும் தமக்குப் பிடித்த நோக்கில் தெரிவு செய்யப்பட்டது. எனவே காதல் செய்ய என்ற தலைப்பு அதை வாசித்த அகிலனாலேயே தெரிவு செய்யப்பட்டது.
அடுத்து ஜால்ரா என்று கூறிய நபருக்கு, அப்துல் ரஹ்மான் ஜால்ரா அடிப்பது கலைஞர் என்ற வகையில் அவருடைய அரசியல் நோக்கு கருதி அல்ல. மூத்தோரை புகழ்தல் எல்லா துறையிலும் உள்ளதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. வெறும் சினிமா பாடலாசிரியரை கூப்பிடாமல் உண்மையுள்ள கவிஞனை கூப்பிட்டது தான் இங்கே சிறப்பு.
அடுத்தது தமிழ்த்தாய் வாழ்த்து என்பது மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் நீராரும் கடலுடுத்த என்ற பாடல். பாரதி பாடியுள்ளது தமிழ் மொழி வாழ்த்தாகும்.

மதுரகன்

Susarithaa said...

வணக்கம்! கொழும்புப் பல்கலைக் கழக தமிழ் சங்க உறுப்பினர் மற்றும் முன் தோன்றிய மூத்த குடியின் நடிகையர் குழாமில் ஒருத்தி என்ற வகையில் மனம் கனிந்த நன்றிகள் அண்ணா! தரமான படைப்புகளுக்கு அழிவில்லை என்பதை உங்கள் பதிவின் மூலம் கண்டு கொண்டோம்! உங்களை போன்றவர்களின் பாராட்டுக்கள் தான் எம் போன்றவர்களிற்கு தூண்டுகோல்.
" விருதுக்கு வாழ்த்துக்கள்"

"உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்"

'அழகானதொரு முத்தமிழ் விழாவை தந்த எமது சங்கத்திற்கும் வாழ்த்துக்கள்"

Unknown said...

நிகழ்ச்சி பற்றிய பல்வேறு விமர்சனங்கள் வழங்கிய A .R V லோஷன் அவர்களுக்கு வணக்கம்
முத்தமிழ் விழாவில் நடந்த நடனம் பற்றி ஒரு பெரும் குறை கூறி இருந்தீர்கள் ....
நடனம் என்பது பல்வேறு பட்ட பிரிவினை உள்ளடக்கியது .
அழகிய மேடையில் ஆபரணம் பூட்டி ஆடுவதும் நடனமே........
ஆவி துறந்து சடலமாக போகையிலும் முன் நின்று ஆடுவதும் நடனமே ....
இது ஒரு தனி உதாரணமாகும்
அந்த வகையில் எங்கள் நடனம் CLASSICAL ,SEMI CLASSICAL ,FOKE என்பவற்றை கலந்ததாக காணப்படுகிறது.
உங்களின் கருத்துப்படி பாடலானது BIT SONG ஆகா இருக்கலாம் . ஆனால் எங்களின் நடனம் வெறும் கேளிக்கை கூத்தாக இருக்க வில்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறோம் அதோடு எங்கள் மாணவிகள் பல நாட்களாக பயிற்ச்சி செய்து ஆடிய நடனமானது தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றது என்பதை தமிழ் அறிந்த அனைவரும் அறிந்ததே.... தமிழ் அன்னையின் அணிகலனுக்கு இது ஒரு முத்தே ஆகும்......

Komalan Erampamoorthy said...

மதுரகன் அப்துல் ரஹுமானை பற்றி சென்னது நான்ந்தான்.[கோமளன்] பெரியோரை மதித்தல் என்பது வேறு வாளி வைப்பது என்பது வேறு நன்பா!!! காரணம்............கடலை கட்டினது நான் என்றோ அல்லது வேறு நபர் என்ரோ யாரும் உருமை கொண்டாட முடியாது,மேலும் பலர் உடய உழைப்பாள் உருவாண ஒன்றை ஒரு தனி நபர் மட்டும் உருமை கொண்டாட முடியாது.என்னுடய கோபத்துக்கு காரணம் திரை பாடல் எழுதாததற்காண காரணம் என்ன என்று கேட்ட போது இவர் சொன்னபதில் அம்மி பொலிய சிற்பி தேவை இல்லை என்று விளக்கம் சொன்னார்.இப்படி பட்ட இவர் ஏன் தேவை இல்லாமல் கருணானிதி என்ற தனி நபர் தான் தமிழ் மொழிக்காண அடயாளம் என்று எப்படி சொல்லமுடியும் இதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது நன்பா!!!!!

காரையம்சன் said...

வணக்கம்...
நான்தான் அந்த காதல் தலைப்பில் கவிதை சொன்னவன். எனது தலைப்பு ”வாருங்கள் வடம் பிடிப்போம் வாலிபத்தில் காதல் செய்ய...” இந்த தலைப்பை நான் தெரிவு செய்யததன் காரணம், ஒன்று பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஏதாவது சுவாரசியமாக சொல்ல வேண்டும் என்று நினைத்தது,மற்றொன்று சில கிழமைகளுக்கு முன்பு நடந்துமுடிந்த, கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட கலைவிழா நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கத்தில் (தரப்பட்ட தலைப்பு ”நாமிருக்கும் நாடு நமதென்று அறிந்தோமா...”) வழக்கமான போராட்டம், புலம்பெயர்வு பற்றிய கவிதை வாசித்தபடியால் மீண்டும் அதே விடயத்தை தொட நான் விரும்பியிருக்கவில்லை. அன்றயதினம் முத்தமிழ் விழாவில் (கவிக்கோ அவர்களின் வருகையினால்) வழமைக்கு மாறாக கொழும்பு வாழ் பொதுமக்களின் பிரசன்னம் அதிகமாக இருந்தமையாலும் ஏனய கவிஞர்கள் கல்வி, போராட்டம்,புலம்பெயர்வு, மொழி முதலிய விடயங்களில் கவிதை படைத்திருந்தமையாலும் வித்தியாசமான எதிர்பார்ப்புகளுடன் இருந்த மக்களிடையே திடீரென தோன்றி காதல் தலைப்பில் நக்கல் நையாண்டி கலந்த சுவையில் கவிதை சொல்ல முற்பட்டது எந்தளவு தூரத்திற்கு சரியென்பது தெரியவில்லை. கவியரங்கத்தில் இரண்டாவது கவிதை வாசிக்கப்படும்போதே நான் இதைப்பற்றி சிந்திக்க தொடங்கிவிட்டேன். கவியரங்கமுடிவில் நானும் அவ்வாறான தலைப்பை தெரிவு செய்திருக்கலாமோ என்று எண்ணத்தோன்றியது. ஒரு நல்ல வாய்ப்பை நழுவ வி்ட்டுவிட்டேனோ என்று எண்ணத்தோன்றியதும் உண்மைதான். இருந்தாலும் கவியரங்கம் முடித்து உடைமாற்றும் இடத்தில் என்னை சந்தித்த ஒருவர் ”இவ்வளவு விடயத்துக்குள்ளும் நீங்கள் சொன்ன காதலும் எடுபட்டு விட்டது ” என்று சொன்னது எனக்கு சற்று திருப்தியளித்தது. கவிதை குறுகியதாய் இருந்ததன் காரணம் அப்போதிருந்த பரீட்சை நெருக்கடிகள்.இன்னுமொரு முக்கியமான எனக்கு பெருமை தரும் விடயம் என்னவெனில் முத்தமிழ் வித்தகன் விபுலானந்தன் பிறந்த அதே மண்தான் எனது பிறப்பிடமும். கிழக்கிலங்கையிலுள்ள காரைதீவு.
விமர்சனங்களுக்கு நன்றிகள்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner