July 17, 2010

ஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..


இன்று ஆடிப் பிறப்பாம்..
காலையிலிருந்து வீட்டில் மனைவி கொடுத்த ரோதனை பெரிய கொடுமை.
நேரத்துக்கு குளிக்கணுமாம்..மாமிசம் சாப்பிடக் கூடாதாம்.. கூழ் படைச்சிட்டு தான் அலுவலகம் போகணுமாம்.. 
ஐயோ சாமி.. தாங்க முடியல.

இறந்தவர்களுக்குப் படைப்பதும் இன்றைய நாளின் முக்கியமான ஒரு சடங்காம்.

ஆனால் நாங்கல்லாம் யாரு..
காலையிலேயே ஒரு Half boiled egg சாப்பிட்டிட்டு தான் அடுத்தவேலை.
கணினியில் பத்தரை வரை இருந்திட்டுத் தான் குளிக்கவே போனேன்.

எனக்கென்றால் ஆடிப் பிறப்பென்றால் கூழ் மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் மனைவியின் மனசை ஏன் நோகடிப்பான் என்று குளிச்சிட்டு அலுவலகம் வரமுதல் படைத்திட்டு வரலாம் என்று சொன்னேன்.

நமது மாமனார்(மனைவியின் தந்தையார்) முன்பே காலமானவர் என்பதால் அவருக்கும் சேர்த்தே படைக்கவேண்டும் என்று அவரது படத்தையும் பூஜையறையில் வைத்தே படையலிட்டோம்.

அதற்குள் இப்போது தனது மழலையில் நிறையவே பேசுகிற என் புத்திர சிகாமணி ஒரு நீயா நானாவே நடத்தி முடித்தான்..

அந்த உரையாடல்...
"அப்பா தாத்தா எங்கே?"
"அவர் இறந்திட்டாரடா"
"ஆஹ். என்னப்பா?"
"தாத்தா அப்புச்சாமிட்ட போயிட்டார்"
"எங்கேப்பா? கோயில்?"
"ம்ம்" - வேறென்ன சொல்வது?
"புறா கோயில்?" - அவன் தன் மழலையில் புறாக் கோயில் என்று சொல்வது பம்பலப்பிட்டியில் உள்ள வஜிராப் பிள்ளையார் கோயில்.அங்கே புறாக்கள் அதிகமாக இருப்பதால் எப்போதாவது கோயில் போகும் வேளையில் மனைவிக்காக கும்பிட்டுவிட்டு நாங்கள் மகனோடு சேர்ந்து புறாக்களுக்கு பொரி,அரிசி,சோளம் போடுவது வழக்கம்.

நல்லகாலம் மனைவி படையலுக்காக கூழோடு வந்ததால் அந்த பேட்டி முடிந்தது. 

பொதுவாக வீட்டில் மகன் தன் இரண்டரை வயது மழலையில் எது கேட்டாலும் நாங்கள் முடியுமானவரை பதில் சொல்லி விளங்கப்படுத்துவது வழக்கம். சின்ன வயதிலேயே அவனைக் கேள்வி கேட்கவிடாமல் மடக்கி,அடக்கினால் அதுவே பிற்காலத்தில் அவர்களை அறிவு வளர்ச்சி குறைந்தவர்களாக மாற்றிவிடும்.
களைப்போடு வருகையில் தொல்லையாக இருந்தாலும் கூட இந்த ஒரு விடயத்தில் நான் மிகக் கவனம்.

இந்தப் படம் சும்மா கரண்டிக்காக .. இதை விட நல்லாவே சமைப்பா என் இல்லாள் ;)


கூழ் ஒரு பாத்திரத்தில் விட்டு அதற்குள் ஒரு கரண்டி வேறு.
"சாமி எடுத்துக் குடிப்பாரா?" என்று கேட்டேன். 
"ம்ம்.. அப்பாவும் தான்" என்றார் மனைவி.
"விவேக் ஒரு படத்தில் சொல்வார்.. ஞாபகம் இருக்கா? " என்றேன் குறும்பாக..

ஆடிக் கூழைப் பற்றி விவேக் என்ன சொன்னார் என்று யோசித்துக் கொண்டே மனைவி விளக்கேற்றினார்.என்னை ஊதுபத்தியைப் பற்றவைக்குமாறு கூறினார்.நெருப்பை ஏற்றி ஊதி அணைத்து ஊதுபத்தி ஸ்டாண்டில் வைக்க செல்கிற நேரம், 
"அந்த வாழைப்பழத்தில் குத்துங்கப்பா" என்றார்.

"அடி பாவி.. இதைப் பற்றியும் சொல்லியிருக்காரே விவேக்" என்று சொல்லிக் கொண்டே வாழைப்பழத்தில் குத்தினேன்.

அடுத்ததாக சாமிகளுக்கு தனியாக ஒரு கிண்ணத்தில் நீர்.மாமனாரின் படத்துக்கு முன்னால்  தனியான ஒரு குவளையில் நீர். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

வணங்கி முடித்து அறைக்கு வெளியே வந்தவுடன் அவசரமாகக் கதவை மூடினார் மனைவி.
ஏன் என்று பார்வையால் பார்க்க, படைத்த பின் அவர்கள் சாப்பிட இப்படித்தான் கதவை மூடிவிட வேண்டுமாம் என்று தங்கள் வீட்டில் முன்பு சொல்வார்களாம் என்றார்.

அதற்கு மேல் தாங்க முடியவில்லை. 
பயங்கரமாக சிரித்துக் கொண்டே,அந்த விவேக் டயலொக்கை அவிழ்த்து விட்டேன் "ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்த முடியாது"

ஆனால் ஒன்று நண்பர்ஸ்.. 
கூழ் குடிக்கக் கிடைத்தது.(நாங்க எவ்வளவு தான் நக்கல் பண்ணாலும் நம்ம வயிற்றுக்கு வஞ்சனை செய்ய மாட்டா என் பதிவிரதை)  

அலுவலகத்துக்கும் கொஞ்சம் கொண்டுவந்தேன்.

இரவு வீட்டுக்குப் போனவுடன் பூஜையறைக்குப் போய்ப் பார்க்கவேண்டும் சாமியும் மாமாவும் எவ்வளவு கூழ் குடிச்சு முடிச்சிருக்காங்கன்னு.. ;)


இந்தப் பதிவுடன் நேரடியாக சம்பந்தமில்லாமல் ஒரு கார்ட்டூன்..
நன்றி துக்ளக்.. 


20 comments:

கன்கொன் || Kangon said...

உங்களுக்கு இரவு உணவு கிடைக்க எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். :P

கன்கொன் || Kangon said...

// நேரத்துக்கு' குளிக்கணுமாம்..மாமிசம் சாப்பிடக் கூடாதாம்.. கூழ் படைச்சிட்டு தான் அலுவலகம் போகணுமாம்.. //

ஆங்...
'நேரத்துக்கு' என்ற சொல் உண்மையில் பயன்படுத்தப்பட்டதா என்று அறிய விரும்புகிறேன்.


// காலையிலேயே ஒரு Half boiled egg சாப்பிட்டிட்டு தான் அடுத்தவேலை. //

உவ்வக்.... :(
முட்டையே நாறுமே, அரைவாசி அவிச்சது எப்பிடி இருக்கும்? :-o


// "புறா கோயில்?" //

அய்ய்ய்ய்...
அங்கயுமா?
இங்கு அக்காவின் 2 மகள்மாரும் அதை புறாக் கோயில் என்று தான் அழைப்பார்கள். :)


// மனைவிக்காக கும்பிட்டுவிட்டு //

லோஷன் அண்ணாவுக்கு கடவுள் நம்பிக்கை குறைவு குறைவு குறைவு....
நம்புங்கப்பா... :P


// சின்ன வயதிலேயே அவனைக் கேள்வி கேட்கவிடாமல் மடக்கி,அடக்கினால் அதுவே பிற்காலத்தில் அவர்களை அறிவு வளர்ச்சி குறைந்தவர்களாக மாற்றிவிடும். //

உண்மை.
எதுக்கும் அப்புசாமி, ஆச்சிசாமி விசயத்தில் கவனம். :D


// இந்தப் படம் சும்மா கரண்டிக்காக .. இதை விட நல்லாவே சமைப்பா என் இல்லாள் ;) //

ஆங்....
இரவு சாப்பாட்டிற்கு பிரச்சினை வராது.
அரசியலைக் கண்டு வியக்கிறேன். ;)


// "அடி பாவி.. இதைப் பற்றியும் சொல்லியிருக்காரே விவேக்" //

சாப்பிடுற பழத்தில ஏன் குத்துவான் எண்டுறதா? :-o


// மாமனாரின் படத்துக்கு முன்னாள் தனியான ஒரு குவளையில் நீர். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன் //

கிர்ர்ர்ர்...
ஏன் இப்பிடி உணவிற்கு ஆப்பு வைத்துக் கொள்கிறீர்கள் அண்ணா? ;)


//படைத்த பின் அவர்கள் சாப்பிட இப்படித்தான் கதவை மூடிவிட வேண்டுமாம் என்று தங்கள் வீட்டில் முன்பு சொல்வார்களாம் என்றார். //

:-o :-o :-o


// இரவு வீட்டுக்குப் போனவுடன் பூஜையறைக்குப் போய்ப் பார்க்கவேண்டும் சாமியும் மாமாவும் எவ்வளவு கூழ் குடிச்சு முடிச்சிருக்காங்கன்னு.. //

ஆங்...
இரவு சாப்பாடு கிடைக்கிறதா என்றம் சொல்லவும்.
எனக்கு நம்பிக்கையில்லை....


:)))

Vathees Varunan said...

மனைவி சொன்னதையெல்லாம் கிளிப்பிள்ளைபோல அப்படியே செஞ்சுபோட்டு பெரிய இவரு மாதிரி கதையெல்லோ விரூறிங்க அண்ணே? இதுக்குள்ள விவேக்கை வேற ஞாபகப்படுத்துறாரு யப்பா தாங்கமுடியலைடா

Vathees Varunan said...

:))))))))

SShathiesh-சதீஷ். said...

அண்ணே இரவு வீட்டுக்கு தானே போறிங்க. அந்த அகப்பை உங்களுக்கு எதிரான ஆயுதம் ஆனால் ஆஹா.....

Subankan said...

:))))))))

anuthinan said...

அண்ணே இரவுக்கு கூழ் கிடைக்குதோ!! கூழ் அகப்பை கிடைக்குதோ!!!!

எது நடந்ததோ! அது நன்றாகவே நடந்து உள்ளது!

எது நடக்க உள்ளதோ ! அதுவும் நன்றாகவே நடக்கும்!!

மரியாதையாக பின்னுட்டத்தில் வந்து இனி நடக்க இருக்கும் கதையை சொல்லலி விட்டு போகவும் அண்ணா !!!!!

யோ வொய்ஸ் (யோகா) said...

அண்ணியிடம் இன்று விசேட கவனிப்பு இருக்கிறது..

திங்கட்கிழமை விடியல் இருக்குமா?

balavasakan said...

உங்க வீரவசனங்கள மட்டும் எடுத்து விடுங்க அதுக்கு பிறகு அகப்பையால வேண்டுறத சொல்லமாட்டீங்களே..??

Karthick Chidambaram said...

என்றோ நான் எழுதிய கவிதை ...
கல்லை கண்டால் கடவுள் என்பர்
பொருளை கண்டால் பெருமாள் என்பர்
அன்னம் கண்டால் ஆண்டவர் என்பர்
கடைசியில் அவரே வந்தால் இந்தா சிலுவைதான் !

பெரியார் வந்தால் மட்டும் அல்ல கடவுளே வந்தால் திருந்தமாட்டாங்க!

Kaviyarangan said...

பொதுவாக வீட்டில் மகன் தன் இரண்டரை வயது மழலையில் எது கேட்டாலும் நாங்கள் முடியுமானவரை பதில் சொல்லி விளங்கப்படுத்துவது வழக்கம். சின்ன வயதிலேயே அவனைக் கேள்வி கேட்கவிடாமல் மடக்கி,அடக்கினால் அதுவே பிற்காலத்தில் அவர்களை அறிவு வளர்ச்சி குறைந்தவர்களாக மாற்றிவிடும்.
களைப்போடு வருகையில் தொல்லையாக இருந்தாலும் கூட இந்த ஒரு விடயத்தில் நான் மிகக் கவனம்.

---
வாசிக்கும் போது தோன்றியது,
இதை (The Secret to Raising Smart Kids) இதை தங்கள் மகனிற்காக தங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று (நேரம் கிடைக்கும் போது கட்டாயம் வாசித்து வையுங்கள்).
Terence Tao (Terry Tao) வும் இதை வாசிக்க பரிந்துரைக்கிறார் - அவரிடமிருந்து இது வருவது அதிபொருத்தமானது.

Begum said...

ஹா........ஹா......ஹா.....
படித்தேன்....சிரித்தேன்......ரசித்தேன்.
உங்க மனைவி ரொம்ப சாதுங்க.......லோஷன்.

அன்புடன் ஜனூ.

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
உங்களுக்கு இரவு உணவு கிடைக்க எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். :P //

நன்றி.. ஆனால் கிடைத்தது?
ஆனால்.. //எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்//???

ம்ம்ம்ம் மீண்டும் பம்பலப்பிட்டிப் பிள்ளையாரா?
நடக்கட்டும்.. ;)

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
// நேரத்துக்கு' குளிக்கணுமாம்..மாமிசம் சாப்பிடக் கூடாதாம்.. கூழ் படைச்சிட்டு தான் அலுவலகம் போகணுமாம்.. //

ஆங்...
'நேரத்துக்கு' என்ற சொல் உண்மையில் பயன்படுத்தப்பட்டதா என்று அறிய விரும்புகிறேன்.//

சொல் பயன்படுத்தப்பட்டாலும்.. பயனற்ற சொல் என்பதை சொல்லிவைக்கிறேன் :)


// காலையிலேயே ஒரு Half boiled egg சாப்பிட்டிட்டு தான் அடுத்தவேலை. //

உவ்வக்.... :(
முட்டையே நாறுமே, அரைவாசி அவிச்சது எப்பிடி இருக்கும்? :-o //

சாப்பிட்டுப் பார்த்தால் தெரியும்..நல்லா இருக்கும்.. யானைக்கு தெரியுமா ஹால்ப் போயில் வாசனை ;)

பி.கு- யானை - தாவர பட்சணி ;)


// "புறா கோயில்?" //

அய்ய்ய்ய்...
அங்கயுமா?
இங்கு அக்காவின் 2 மகள்மாரும் அதை புறாக் கோயில் என்று தான் அழைப்பார்கள். :)//

குழந்தைகளின் மொழி ஒன்றே??


// மனைவிக்காக கும்பிட்டுவிட்டு //

லோஷன் அண்ணாவுக்கு கடவுள் நம்பிக்கை குறைவு குறைவு குறைவு....
நம்புங்கப்பா... :ப//

ஆ.. அது!!!!!


// சின்ன வயதிலேயே அவனைக் கேள்வி கேட்கவிடாமல் மடக்கி,அடக்கினால் அதுவே பிற்காலத்தில் அவர்களை அறிவு வளர்ச்சி குறைந்தவர்களாக மாற்றிவிடும். //

உண்மை.
எதுக்கும் அப்புசாமி, ஆச்சிசாமி விசயத்தில் கவனம். :D //
சாமி சரணம் :)


// இந்தப் படம் சும்மா கரண்டிக்காக .. இதை விட நல்லாவே சமைப்பா என் இல்லாள் ;) //

ஆங்....
இரவு சாப்பாட்டிற்கு பிரச்சினை வராது.
அரசியலைக் கண்டு வியக்கிறேன். ;)//

நன்றி தம்பி.. கற்றுக்கொள். உபயோகப்படும் ;)





// மாமனாரின் படத்துக்கு முன்னாள் தனியான ஒரு குவளையில் நீர். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன் //

கிர்ர்ர்ர்...
ஏன் இப்பிடி உணவிற்கு ஆப்பு வைத்துக் கொள்கிறீர்கள் அண்ணா? ;)//

ஹீ ஹீ.. பக்கத்திலேயே இரண்டு மூன்று சாப்பாட்டுக் கடைகள் இருக்கும் தைரியம் தான்




// இரவு வீட்டுக்குப் போனவுடன் பூஜையறைக்குப் போய்ப் பார்க்கவேண்டும் சாமியும் மாமாவும் எவ்வளவு கூழ் குடிச்சு முடிச்சிருக்காங்கன்னு.. //

ஆங்...
இரவு சாப்பாடு கிடைக்கிறதா என்றம் சொல்லவும்.
எனக்கு நம்பிக்கையில்லை....//

சத்தியமாக் கிடைத்தது.. சாப்பாடு தான் ;)

ஆனால் ஒன்று கூழ் கொஞ்சமும் குறையவில்லை.

அவங்க ரெண்டு பெரும் வேறெங்கோ போய் புல்லா ஒரு கட்டுக் கட்டிட்டாங்க போல ;)

ARV Loshan said...

வதீஸ்-Vathees said...
மனைவி சொன்னதையெல்லாம் கிளிப்பிள்ளைபோல அப்படியே செஞ்சுபோட்டு பெரிய இவரு மாதிரி கதையெல்லோ விரூறிங்க அண்ணே? இதுக்குள்ள விவேக்கை வேற ஞாபகப்படுத்துறாரு யப்பா தாங்கமுடியலைடா//

இதெல்லாம் எம் வாழ்க்கையில் சகஜம் அப்பன்.. இங்கே லொஜிக் எல்லாம் பார்க்கப்படாது..

ஒரு ஐந்து வருடத்தின் பின் இதை மீண்டும் வாசித்துப் பாருங்கள் புரியும் :)


================

SShathiesh-சதீஷ். said...
அண்ணே இரவு வீட்டுக்கு தானே போறிங்க. அந்த அகப்பை உங்களுக்கு எதிரான ஆயுதம் ஆனால் ஆஹா.....//

என்ன ஒரு நல்ல எண்ணமடா..

வாழ்க நீ..

==========

Subankan said...
:))))))))//

வந்திட்டாரு சிமைலி சுபாங்கன் :)

ARV Loshan said...

Anuthinan S said...
அண்ணே இரவுக்கு கூழ் கிடைக்குதோ!! கூழ் அகப்பை கிடைக்குதோ!!!!

எது நடந்ததோ! அது நன்றாகவே நடந்து உள்ளது!

எது நடக்க உள்ளதோ ! அதுவும் நன்றாகவே நடக்கும்!!

மரியாதையாக பின்னுட்டத்தில் வந்து இனி நடக்க இருக்கும் கதையை சொல்லலி விட்டு போகவும் அண்ணா !!!!!//

எல்லாம் சுபமே. :)
அகப்பையுடன் கூழ் கிடைத்தது. அதாவது அகப்பையால் எடுத்து குடித்தேன் என்று சொன்னேன். :)

===============================

யோ வொய்ஸ் (யோகா) said...
அண்ணியிடம் இன்று விசேட கவனிப்பு இருக்கிறது..

திங்கட்கிழமை விடியல் இருக்குமா?//

வந்தேனே.. :)
பின் விளைவுகள் எதுவும் இருக்கல.. மெய்யாலுமே தான் :)

ARV Loshan said...

Karthick Chidambaram said...
என்றோ நான் எழுதிய கவிதை ...
கல்லை கண்டால் கடவுள் என்பர்
பொருளை கண்டால் பெருமாள் என்பர்
அன்னம் கண்டால் ஆண்டவர் என்பர்
கடைசியில் அவரே வந்தால் இந்தா சிலுவைதான் !//

அருமையான கவிதை கார்த்திக். :)



பெரியார் வந்தால் மட்டும் அல்ல கடவுளே வந்தால் திருந்தமாட்டாங்க!//

வருவார் என்கிறீங்க?

ஹா ஹா.. கடவுள் காக்கட்டும் உங்களையும் உங்கள் நம்பிக்கையையும்

ARV Loshan said...

Balavasakan said...
உங்க வீரவசனங்கள மட்டும் எடுத்து விடுங்க அதுக்கு பிறகு அகப்பையால வேண்டுறத சொல்லமாட்டீங்களே..??//

வாங்கினாத் தானே சொல்றதுக்கு? நாங்க யாரு? (மீண்டும் வீர வசனம்)



=====================================
Kaviyarangan said...
களைப்போடு வருகையில் தொல்லையாக இருந்தாலும் கூட இந்த ஒரு விடயத்தில் நான் மிகக் கவனம்.
---
வாசிக்கும் போது தோன்றியது,
இதை (The Secret to Raising Smart Kids) இதை தங்கள் மகனிற்காக தங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று (நேரம் கிடைக்கும் போது கட்டாயம் வாசித்து வையுங்கள்).
Terence Tao (Terry Tao) வும் இதை வாசிக்க பரிந்துரைக்கிறார் - அவரிடமிருந்து இது வருவது அதிபொருத்தமானது.//

நன்றி கவியரங்கன்.. பயனுள்ள பகிர்வு

ARV Loshan said...

Begum said...
ஹா........ஹா......ஹா.....
படித்தேன்....சிரித்தேன்......ரசித்தேன்.
உங்க மனைவி ரொம்ப சாதுங்க.......லோஷன்.

அன்புடன் ஜனூ.//

நன்றி ஜனூ..
என்னது சாதுவா? ஆமாமா.. :)

அவரிடமும் காட்டுகிறேன் இதனை :)

கண்ணன் said...

உங்களுக்கு பரவாயில்லை கூழ் என்றாலும் கிடைத்தது இங்கை அதுவும் இல்லை , ///இறந்தவர்களுக்குப் படைப்பதும் இன்றைய நாளின் முக்கியமான ஒரு சடங்காம்.////, அது ஆடி அமாவாசைக்கு என்று சொல்லிக் கொண்டும் பலர் உள்ளனர்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner