இந்தியப் பிரதமராகிறார் ரணில் ???

ARV Loshan
4
இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் மகிந்த ராஜபக்ச அரசின் நான்காவது வரவு-செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப் படுகிறது.ஜனாதிபதியே நிதி அமைச்சராகவும் இருப்பதனால் விமர்சனங்கள் எழுவது ரொம்பவே குறைவு. இன்றும் அவரே வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து இந்தப் பதிவை நான் எழுதுகையில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேசையில் அடிக்கடி தட்டி தங்கள் விசுவாசத்தையும் ,தாங்கள் தூங்கவில்லை என்பதையும் காட்டிக் கொண்டுள்ளார்கள்.

இடையே தமிழில் வேறு பேசி எங்களைப் புளுகமடைய வைத்தார் ஜனாதிபதி. அதற்குள் தேநீர் பான இடைவேளை 15 நிமிடம் போதுமா அல்லது கூட வேணுமா என்று பள்ளிக்கூட ஆசிரியர்கள் கேட்பது போல கேள்வி வேறு... ;)

ஆனால் அநேகமான இலங்கையருக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தின் மேல் பெரிதாக நாட்டமில்லை..

காரணம் பொருள்கள் பலவற்றின் விலைகள் குறையப் போவதில்லை.. எப்படியும் சில பொருள்களின் விலைகள் கூடத் தான் போகின்றன.. so கவலைப் பட்டுத் தான் என்ன ..

யுத்தத்துக்கான செலவு எப்படியும் கூடத் தான் போகிறது.. கடந்த வருடத்தை விட இம்முறை மேலும் பல மடங்கு அதிகரிக்கும்.. (இதற்குள் வன்னியில் அகப்பட்டுள்ள 200,000 மக்களை வெகு விரைவில் தமது இராணுவம் மீட்டு விடும் என்று உறுதி வேறு அளித்துள்ளார்)

இதற்கிடையில் நேற்று முன் தினம் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது பங்குக்கு நாட்டின் அபிவிருத்தியை மாற்றியமைக்கக் கூடிய வகையிலான வரவு செலவு திட்ட யோசனை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

2009ஆம் நிதி ஆண்டுக்காக அரசாங்கம் வரவு செலவு திட்ட யோசனை ஒன்றை எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சி ஊடகங்கள் மத்தியில் வெளியிட்டுள்ள இந்த வரவு செலவு திட்ட யோசனையூடாக நாட்டின் அபிவிருத்தியை துரிதமாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்ற ஆச்சரியத்தை இலங்கை மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் நிதிநிலை ஆய்வாளர்களுக்கேல்லாம் வியப்பை ஏற்படுத்தும் மாற்று யோசனைகளை இவை..

கொஞ்சம் நீங்களும் தான் பாருங்களேன்....

விசேடமாக அரச சேவையில் உள்ளவர்களுக்கு 7500 ரூபாவையே அல்லது 20 வீதத்தாலோ சம்பள உயர்வை அதிகரிக்க முடியும்

மேலும், ஓய்வூதிய கொடுப்பனவு 3500 ரூபாவால் அதிகரிக்க முடியும் என யோசனை முன்வைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சி, சமூர்த்தி குடும்பங்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 5000 ரூபாவால் அதிகரிக்க முடியும் என அதில் குறிப்பிட்டுள்ளது.

20 வீதமாக உள்ள பெறுமதி சேர் வரியை ரத்து செய்து பாவனையாளர்களுக்காக 10 வீத புதிய வரி ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும்

முப்படையினரின் சம்பளத்தை ஆக குறைந்தது 40 ஆயிரம் ரூபாவிற்கும், பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் சம்பளம் 32 ஆயிரம் ரூபா வரையிலும் வழங்க முடியும்

பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 85 ரூபாவிற்கும் டிசல் லீட்டர் ஒன்றின் விலை 75 ரூபாவிற்கும் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 59 ரூபாவிற்கும் வழங்க முடியும்

சிறியளவு மற்றும் மத்திய தரத்திலுள்ள வியாபார நடவடிக்கைகளுக்கு 10 வீத வட்டி சலுகை உடன் கடன்களை வழங்கி அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தலா 3 தொழிற்சாலைகளையோ அல்லது நிறுவனங்களையோ அமைக்க முடியும்

இரவு 8 மணிக்குப்பின்னர் அரசின் அனுசரணையுடன் பஸ் சேவை ஒன்றை ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கும் ஐக்கிய தேசிய கட்சி, 18 மாத காலத்திற்குள் 10 லட்சம் சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் அழைத்து வர முடியும்

400 கிராம் பால்மாவை 190 ரூபாவிற்கு வழங்க முடியும்

ஒரு கிலோ கிராம் பருப்பை 125 ரூபாவிற்கு பாவனையாளர்களுக்கு விநியோகிக்க முடியும்

பஸ், வேன், மோட்டார் சைக்கிள், உளவு இயந்திரம் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் அனைத்து வரிகளையும் ரத்து செய்ய முடியும்

இப்படியே 28 விஷயங்கள் அந்த மாற்று யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது..

பார்க்கப் போனால் யுத்தம்,இலங்கைத் தமிழருக்கான தீர்வுகளை விட மற்ற எல்லா விடயத்திற்கும் ஐ.தே. க விடமும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமும் உள்ளது போலத் தான் தெரிகிறது..

இதையெல்லாம் கவனித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்,இவ்வளவு திறமையான ஆளை இந்தியாவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கருதி, அன்னை சோனியாவிடமும் பேசி இந்தியப் பிரதமராக்க முடிவெடுத்திருப்பதாகக் கேள்வி.. இந்தியாவின் நலனுக்காக தனது பிரதமர் பதவியைக் கூட விட்டுக் கொடுக்கத் தயார் என்று மன்மோகன் தளு தளுக்க தெரிவித்தார்.. ரணில் அரை மனதோடு இத்தனை ஒத்துக் கொண்டாலும் தேர்தலில் நிற்க சொல்லி எல்லாம் தன்னை கேட்கக் கூடாது என்று நிபந்தனை போட்டுள்ளாராம்.(ரணிலின் தலைமையில் அவரது கட்சி இதுவரை 18 தேர்தல்களில் தோற்றுள்ளது ;))

கென்யத் தந்தைக்குப் பிறந்த ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி ஆகலாம் என்றால் என் நம்ம ரணிலினால் முடியாது? பக்கத்து நாடு தானே.. இப்பவே மகிந்தவுக்கு உதவுபவர்கள் நம் ரணிலை ஏற்றுக் கொள்ளமாட்டார்களா?

இன்னமும் நம்ம ஜனாதிபதி (நிதி அமைச்சரும் அவரே) தனது நீண்ட பட்ஜெட் அறிக்கையை கரகோஷங்களுக்கு மத்தியில் வாசித்துக் கொண்டிருக்கிறார்.. 

கடைசி நேர இணைப்பு .. 

மகிந்த வாசித்துக் கொண்டு செல்லும் பட்ஜெட் படி, ரணில் இன்னும் ஒரு பத்து வருடத்துக்கு இலங்கையின் ஜனாதிபதியாகக் கனவு கூட காண முடியாது.. இந்தியாவின் பிரதமராக முயற்சி செய்து பார்க்கட்டும்..

காரணங்கள்..

டீசல் 30 ரூபாயால் விலைக் குறைவு..
பெட்ரோல் 15 ரூபாயால் விலைக் குறைப்பு..
மண்ணெய் 20 ரூபாயால் விலைக் குறைப்பு..

வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு மட்டும் அதிக வரி விதிப்பு..

வறிய மக்களுக்கும் பாதுகாப்பு படையினரின் குடும்பங்களுக்கும்,விவசாயிகளுக்கும் பல சலுகைகள்..

இதைவிட அப்பாவி சிங்களவரின் வாக்குகளைப் பெற வேறு என்ன வேண்டும்?

Post a Comment

4Comments

Please Select Embedded Mode To show the Comment System.*