கடவுள் பக்தி இல்லாதோருக்கும் கூட அந்த தேர்பவனிக் காட்சியின் அழகு மனதில் ரசனையைத் தரும்..
சின்ன வயதில் ஆலயத் தேர் உற்சவங்கள் எனக்கு உற்சாகம் தருவன. வழிபடப் போவதை விட வேடிக்கை பார்க்கப் போவதும்,அப்பாவை.அம்மாவை நச்சரித்து வாங்கும் விளையாட்டுப் பொருட்களுக்காகவும்..
அப்பா எங்களைத் தவறாமல் அழைத்து செல்லும் சில தேர் உற்சவங்கள், யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் தேர், மருதடி விநாயகர் தேர், இணுவில் ஆலயங்கள் மூன்றின் தேர்கள்(சிவகாமி அம்மன்,கந்தசுவாமி,மடத்துவாசல் பிள்ளையார்).
அப்போது கொஞ்சமாவாது பக்தி இருந்ததால் கும்பிடுவதற்காகவும் போவதுண்டு. ஆனால் அத்தனை சனக் கூட்டத்தின் மத்தியில் பக்திமயமாக ரத உற்சவங்களை நான் எப்போதுமே பார்த்ததில்லை..ரதத்தின் அழகை,வடம் பிடித்த அழகை,அரோகராக் கோஷங்களின் தொனியையும்,தேர்ச் சக்கரங்களுக்கு முட்டுக் கொடுத்து அழகாய்த் திருப்பும் அழகையும் ரசிப்பதுண்டு.
கொஞ்சம் வளர்ந்து கொழும்பு வந்தபிறகு கொழும்பு ஆலயங்களின் தேர்களுக்கு அப்பா,அம்மா அழைக்கும் போது எப்படியாவது எஸ்கேப்பாகக் காரணங்கள் கண்டுபிடித்து நானும்,தம்பிமாரும் தப்பிவிடுவதுண்டு.
அருகிலேயே இருந்த மயூரா அம்மன் தேருக்கு மட்டும் ஒன்றோ இரண்டு தடவை போன ஞாபகம்.
யாழ்ப்பாணத்தில் ஆலயத்தின் அகன்ற வீதிகளில் வலம் வந்த பிரம்மாண்ட தேர்களைப் பார்த்த எமக்கு நகர வீதிகளில் போக்குவரத்து பஸ்கள்,கார்களுக்கிடையில் இயந்திரமயமாக நகரும் இந்த சிறு தேர்கள் பிடிக்கவில்லை.
கொஞ்சம் வயசும் மனசும் பக்குவப்பட தேர் உற்சவங்கள் என்றாலே மனதில் ஒருவித வெறுப்பும் வேறு..
பின்னே ..
வீதிப் போக்குவரத்துக்களை நிறுத்தி,நேர விரயத்தை ஏற்படுத்தி.. தேவையற்ற மேலதிக செலவுகள் என்று பார்க்கும்போதே இது தேவை தானா என்று மனதில் சலிப்பும் எரிச்சலும் ஏற்படும்..
இது தனியே இந்துக் கோயில்களின் தேர் உற்சவங்களுக்கு மட்டுமல்ல.. விகாரைகளின் பெரஹெராக்கள்,கிறிஸ்தவ ஊர்வலங்களுக்கும் தான்..
அண்மையில் நடந்த ஆடிவேல் விழா ரதபவனி,கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி தேர்,இன்று வெள்ளவத்தைப் பகுதியைத் திணறடித்த மயூராபதி அம்மன் தேர் என்று இவற்றைப் பார்த்த பிறகு மனதிலே தோன்றிய சில விஷயங்கள் தான் இவை..
பகல் நேரங்களிலே,வேலை நேரங்களிலே வீதிகளை மணிக்கணக்காக மறித்து இத்தனை ஆடம்பர ஊர்வலங்கள் தேவையா?
கடவுள் இப்படிக் கேட்டாரா?
கண் முன்னே தெரியாத கடவுளுக்காக எத்தனை அப்பாவிகளின் நேரத்துடன் விளையாடுகிறீர்கள்?
அரசியல்வாதிகள்,பிரமுகர்கள் செல்வதற்காக பாதைகள் மூடப்படும் நேரம்(இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது) முணுமுணுத்து சபிக்கும் உங்களைப் போலத் தானே இந்த தேர்கள்,ஊர்வலங்கள் வீதியில் செல்கையிலும் மற்றவர்கள் வசைபாடுவார்கள்?
பகல் நேரங்களை விட்டு அதிகம் வாகனப்போக்குவரத்து இல்லாத இரவு நேரங்களில் இந்தத் தேர்களை உலாவரச் செய்யலாமே..
யாருக்கும் தொல்லையும் இல்லை.நிறைய பக்தர்களும் வருவார்களே..
கடவுள் தேர்த் திருவிழா தான் கேட்டிருந்தாலும் இந்த நேரம் தான் நடத்தவேண்டும் என்று கேட்கவில்லையே..
சுபநேரம் அப்பிடி இப்படி சொல்வோருக்கு- மலையகப் பகுதிகளின் பல இடங்களில் குளிரிலும் இரவுகளில் தேர்த் திருவிழாக்கள் நடக்கிறது.
தலைநகரில் கலாசார அடையாளம் காட்டுகிறோம் என்போருக்கு - இது மட்டுமல்ல.. இன்னும் பல வழிகள் இருக்கின்றன.. அவற்றிலே உங்கள் கலாசார வெளிப்பாடுகள்,பக்தி வெளிப்பாடுகளைக் காட்டுங்கள்.
அவசர வேலைகள்,கடமைகள்,ஏன் ஆபத்துக் கட்டங்களில் வைத்தியசாலை செல்வோரைத் தொல்லைப் படுத்தாதீர்கள்.
இன்று வெள்ளவத்தையில் மயூராபதி அம்மன் திருவிழாக்கோலம் பூண்டு வீதிவலம் வந்தபோது பாதைகள் திருப்பிவிடப்பட்டு,வழமையாக நான் பத்து நிமிடங்களில் கடக்கும் தூரத்தை அரை மணி நேரம் சென்றும் கடக்க முடியாமல் கடுப்புடன் காத்திருந்தவேளையில் அருகே என் போலவே நின்றிருந்த வாகனங்களில் இருந்தோர் திட்டிய திட்டுக்கள்(அதில் ஒரு வாகனத்தில் ஒரு வயோதிபரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்கிறார்கள் - நாங்கள் கொஞ்சப் பேர் பாதையை விலக்கி,வாகனங்களை ஒதுக்கி வழியேற்படுத்திக் கொடுத்தோம்) பக்தர்களுக்கு தான் என்றால் பக்தர்களைக் காத்து அருள் புரியும் அம்மனுக்கும் சாரும் தானே?
எல்லாம் பணம் செய்யும் வேலை.. வசூலுக்குத் தான் பகல் வேளை ,பிரதான வீதித் தேர் உற்சவம் என்றார் ஆலய சபையொன்றில் இருக்கும் நம்ம நண்பர் ஒருத்தர்.
சுவாமியைக் காட்டி வியாபாரிகள்,பெரிய வர்த்தகர்களிடம் காணிக்கை பெறும் முயற்சியாம் இது..
கடவுளே..
ஒரு பக்கம் போலி சாமியார்கள்,போலி பகவான்கள் சமயத்தின் பெயர்களை நாறடித்து இளையவர்களை சமயத்திலிருந்து தூர விரட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படியான ஆடம்பரங்கள்,அலங்கார ஊர்வலங்கள் சாமானியர்களை சமயங்களின் மீதும் சாமிகள் மீதும் இன்னும் தூரப்படுத்தும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.
நாளுக்கொரு புத்தர் சிலைகள் ஒவ்வொரு மூலையில் முளைப்பது போலவே, சின்ன சின்ன சிலைகள் வைத்துள்ள கோவில்கள் எல்லாம் அனுசரனையாளர்களோடு பெரிசாகிக் கொண்டிருக்கின்றன.
நாளை ஒரே நாளில் ஐந்து கோவில்களின் தேர்கள் ஓடலாம்..
மக்கள் எப்பாடு பட்டால் என்ன?
இதைத் தட்டிக் கொண்டிருக்க விமான நிலையம் சென்று கொண்டிருக்கும் என் நண்பர் குகன் அனுப்பிய sms "விமான நிலையம் செல்லும் பாதையில் போக்குவரத்து நெரிசல்"
என்ன காரணம் என்று கேட்டு அனுப்பினேன்..
"எதோ ஒரு புத்த விகாரையின் பெரஹெராவாம்"
அரோகரா... சாரி.. அனே தெய்யனே..
பி.கு - இந்தப் பதிவில் இரு படங்களை (மயூராபதி அம்மன் தேர்) பதிவர் மாயாவின் தளத்திலிருந்து பெற்றேன்
26 comments:
நச் என்று இருக்கு அண்ணே... அதே அதே நானும் உங்க பக்கம்
பக்தி வெளிப்பாடுகளா இவை ஆண்டவன் கேட்டதுகளா???
கடவுளைப் படைத்தவன் மனிதன் என்பது இப்பவாவாது வெளங்கலியே .............
அரோகரா...
நிறைய இடங்களில் இங்கும் உங்களைப் போலவே இருக்கிறேன். ;)
(கிறிக்கற்றில் ஒத்துப் போவது போல)
// சின்ன வயதில் ஆலயத் தேர் உற்சவங்கள் எனக்கு உற்சாகம் தருவன. வழிபடப் போவதை விட வேடிக்கை பார்க்கப் போவதும்,அப்பாவை.அம்மாவை நச்சரித்து வாங்கும் விளையாட்டுப் பொருட்களுக்காகவும்.. //
// ஆனால் அத்தனை சனக் கூட்டத்தின் மத்தியில் பக்திமயமாக ரத உற்சவங்களை நான் எப்போதுமே பார்த்ததில்லை..ரதத்தின் அழகை,வடம் பிடித்த அழகை,அரோகராக் கோஷங்களின் தொனியையும்,தேர்ச் சக்கரங்களுக்கு முட்டுக் கொடுத்து அழகாய்த் திருப்பும் அழகையும் ரசிப்பதுண்டு. //
// கொஞ்சம் வயசும் மனசும் பக்குவப்பட தேர் உற்சவங்கள் என்றாலே மனதில் ஒருவித வெறுப்பும் வேறு.. //
ம்... :(
பார்த்தேன் இன்று வெள்ளவத்தை படும் பாட்டை. :(
என்று திருந்தப் போகிறோமோ?
இதை ஒரு விகாரை வெள்ளவத்தையில் செய்திருந்தால் இனவாதம், அடக்குமுறை என்றிருப்போம் உடனே, எங்கள் சார்ந்த சமயத்தைச் சார்ந்தது என்பதால் அமைதி காக்கிறோம். :(
நள்ளிரவு 12 மணிக்கு நடத்துங்கள் ஐயா.
நானும் வந்து வேடிக்கை பாக்கிறன். :(
நல்ல பதிவு, தேவையான பதிவு.
மிகவும் அருமை........
உங்கள் பதிவுகளை http://tamil.kijj.in/ என்னும் தலத்தில் போடுங்கள்
எனது நண்பனொருவன் சென்ற வருடம் விமானத்தை தவற விட காரணம் இவ்வாறான தேர்வலத்தினால் ஏற்பட்ட வாகன நெரிசலால் விமான நிலையத்திற்கு நேரத்திற்கு செல்லவியலாமல் போனதாகும்... இப்போதெல்லாம் தேரை கண்டால் அவனுக்கு பயங்கர கோபம் வருகிறது.
கண்டி பெரஹெரா தொடங்கிவிட்டது, இனி கண்டியில் எங்களுக்கு போக்குவரத்து வழமைபோல் ரொம்ப கடினமாகவிருக்க போகிறது
சுபநேரம் அப்பிடி இப்படி சொல்வோருக்கு- மலையகப் பகுதிகளின் பல இடங்களில் குளிரிலும் இரவுகளில் தேர்த் திருவிழாக்கள் நடக்கிறது//
ஏன் மலையகம் , சுன்னாகம் ஸ்ரீ கதிரை மலை சிவன்( - ஆடி மகோற்சவம் -( எங்கள் பரம்பரை உரித்து கோவில் -படங்கள் - முக வலையில் இன்னும் சிறிது நேரத்தில் பாருங்கள்.) இல் கூட இரவில் தான் இழுப்பார்கள் . நீங்கள் சொல்லுவதும் ஒரு நியாயம் தான்
Hi Loshan,
Exactly true wht u hv said here, the same I felt when I was caught in the traffic and the crowed today morning, actually this should be avoided as the world and people grow.
Nila.
உண்மையிலே நல்லதொரு பதிவு...நானும் ஒரு நாத்தீகன். எனக்கு இந்த சமயங்களில் வெறுப்பு ஏற்பட்டதற்கு பல காரணங்களில் இதுவும் ஒன்று. எனக்கும் இவ்வாறு சமுதாய கோபங்கள் ஏற்படுவதுண்டு. மதங்களின் விழாக்கள் என்ற பெயரால் ஏற்படும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. அத்துடன் பாதையில் போவோர் வருவோருக்கு கற்பூரம் கொடுப்பது போன்ற திணிப்புக்களும் இவற்றுடன் இடம்பெறுகின்றது. இவர்கள் திருந்தமாட்டார்கள்.
உண்மை தான். அகதிமுகாமில் நம் உறவுகள் படும் இன்னல்களுக்கு மத்தியில் இந்த ஆடம்பரங்கள் தேவை தானா? நம்மவரை திருத்தவே முடியாது...எல்லாவற்றிற்கும் விடிவு எப்போதோ...?
here u r writing this but in ur radio broadccasting this event directly....
if u r really a gentle man when u r announcing u pretend as a devotee as most of the radio fans r devotee, and in the bog u write as against this religious view as on the net this is hot topic.
and u married relegiously....dont forget.
latter i will post all these evident in my blog probabaly in 2 days time
கொழும்பில் இப்போது இது ஒரு விளம்பரமாகிவிட்டது. சந்திக்கு சந்தி முடுக்குக்கு முடுக்கு கோயில்களும் திருவிழாக்களும். தமிழின அழிப்பை அட்டகாசமாகச் செய்தவர்களுக்கு முதல் மரியாதையும், பொன்னாடையும். தமிழனின் மனம் புண்படுவதைக் கவலைப்படாத தேவஸ்தான வியாபர முதலாளிகள். முழுநாளும விரதமிருந்து பால்குடம் சுமந்து வந்த பெண்ணடியார்களை நிறுத்தி வைத்து கொலைவெறியர்கள் வரும் வரை முதல் தங்கப் பால்குடம் காத்து நிற்கும் அதிர்ச்சிகளும் தமிழினம் எங்கே போய்கொண்டிருக்கின்றது. இம் முறை பால்குட பவனியில் கலந்து கொண்டவர்கள் 3000 தாண்டி விட்டது. யார் குறியது இங்கே தமிழன் துன்பப்படுகின்றான் என்று? யாரை யார் ஏமாற்றுகின்றார்கள். கடவுளா அராஜக அரசியலா? அல்லது வெட்கம் கெட்ட தேவஸ்தான முதலாளிகளா?
அண்ணே உங்கள் பதிவை நான் பூரணமாக ஆமோதிக்கிறேன்.
ஆனாலும்,இது ஏனைய தொழில்களை விட நல்ல வருமானம் தரும் தொழில் ஆச்சே பிறகு எப்படி நீங்கள்,நாங்கள் சொல்லுவது அவர்கள் காதுகளுக்கு கேட்கும்???
ஒரு நல்ல பதிவு அண்ணா. மாத்தளை தேர் பார்த்திருக்கிறேன். அதற்காக சென்றதில்லை .. அந்த தேரை நம்பி பிழைப்பு நடத்தும் கடைகளும் , வியாபாரிகளும் ஏராளமானோர் உண்டு..
அருமையான பதிவு அவசியமான பதிவும் கூட மாத்தளை தேர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே முதல் நாள் காலையில் துவங்கினால் இரவுமுழுதும் இழுத்து அடுத்தநாள் மீண்டும் கோயில் சென்றடைய அடுத்த நாள் மாலையாகி விடும். இதுவல்லாமல் கொடியேற்றம் துவங்கிய நாளில் இருந்து பள்ளிப் பிள்ளைகள் மட்டம் போடுவதும் நடக்கும். மிகச் சின்ன வயதில் நண்பர்களுடன் சுற்றவும் பதின்மங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் தேரை எதிர்பார்த்தவன் இம்முறை இங்கேயே இருந்தும் தேரை எட்டியும் பார்க்கவில்லை.
காலாகாலமா நடந்திட்டு வர்ற விஷயம் நேற்று தான் உங்க கண்ணுல பட்டுச்சா!... நாத்திகனாக உங்கள் பார்வை ஓகே. ஆத்திகனாக பிழை.
தேர் இழுப்பதன் உண்மையான நோக்கம் நான் அறிந்தவரையில் வீடுகளில் முடங்கியிருக்கும், கோயில்களுக்கு வர வசதியற்ற முதியோர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கும் கடவுள் தரிசனம் கிடைக்கவேண்டும் என்பதாகும்.....என்னை பொறுத்தவரை தேர் அவசியம்...அது எங்கள் மதத்தின் பிரசாரமாகவும் கொள்ள முடியும் ஆனால் உண்மையான நோக்கம் மீறப்படுவது எனக்கும் வருத்தம் அளிக்கிறது....5 தேர்கள் அவசியமற்றது.....அனால் இப்போது கோயில்கள் தேர்களின் மூலம் தான் பிரபலம் அடைகின்றன...ஒரு கோயிலின் மதிப்பு அதன் தேரிலும் அந்த தேரில் கலந்துகொள்ளும் பரவைக்காவடிகளிலுமே மதிப்பீடு செய்யப்படுகின்றன...நம்ம சனம் சேர்த்து வச்சிருக்கிற நகைகளை போட்டுக்கொண்டு உலா வரவும் பந்தா காட்டவும் ஒரு வாய்ப்பாவது கிடைக்க வேண்டாமோ....இரவு நேரம் போட்டுகொண்டு வந்தா யாருக்கு தெரிய போகுது.....அழகான பொண்ணுங்க இரவுல எப்புடி தெரிவாங்க.....நீங்க ஒரேடியா இப்பிடி எதிர்த்தா பாவம் விடலைப்பசங்க........
உங்கள் கவனத்திற்காக இன்னொரு விஷயம்... அதே மயூராபதி கோவிலில இன்றைக்கு இரவும் ஒரு தேர் இருக்கு......பம்பலபிட்டில இருந்து கிளம்பி மயூரா கோயிலுக்கு போய் சேர எப்படியும் அதிகாலை 3 மணியாவது ஆகும்.....!
இது ஏனைய வெளிநாடுகளிலும் நடக்கின்றது. அண்மையில் ஈலிங் அம்மன் தேர் வெகு விமரிசையாக நடந்தது.
ஆரம்ப காலத்தில் மயூரா அம்மன் தேர் மாலையில் தான் நடந்தது என நினைக்கின்றேன். அண்ணே நம்ம ராசாவின் ராணி கூட கோயிலுக்கு போயிருந்தார், இது அரச செல்வாக்கில் நடக்கும் நிகழ்வு வீணாக பிரச்சனைக்குப் போகாதீர்கள்.
Hi loshan,Iam your class mate and friend too,yesterday morning while iam going to pettah market from wellawatte, police stoped me at check point near savoy cinema ,after checking my id one police men said can u drop me at bamba police station and got in to my car,while iam driving he asked me why do u people worship god in harsh way by putting needles in your body and ladies rolling in the street.guess what i dont have any answer????????
தமிழர்களின் அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்துகொண்டே போகிறது லோஷன்
மிச்சம் இருப்பதையும் இழந்துவிட்டு புலம்புவதை விட இவற்றை பொறுத்துக்கொள்வதே மேலானது என்று நான் நினைக்கிறேன்.
தமிழர்களின் அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்துகொண்டே போகிறது லோஷன்
மிச்சம் இருப்பதையும் இழந்துவிட்டு புலம்புவதை விட இவற்றை பொறுத்துக்கொள்வதே மேலானது என்று நான் நினைக்கிறேன்.
அன்பிற்கினிய லோஷன் அண்ணா..,
நாடுகளின் பெயர்கள்தான் வேறு..,வேறு...,
நடக்கும் நரித்தந்திம்,நயவஞ்சகம் எல்லாம்
ஒன்றுதான்..
நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன் ச.ரமேஷ்
அண்ணா சனிக்கிழமை நானும் மாட்டினேன்; வெள்ளவத்தை இல் அந்த நெரிசலில். என்னா கொடும சார்.........
அன்பின் நண்பருக்கு...
நான் தமிழிலே மருத்துவத் தகவல்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக ஒரு தளத்தை உருவாக்கும் நோக்கோடு... என்ற தளத்திலே எழுதி வருகின்றேன்.
அத்தோடு மற்றவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பதிலும் பிளாக் வழியாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் முனைகின்றேன்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் ஒரு பொழுதிலே சற்று என் தளத்தைப் பார்த்து அது மற்றவர்களுக்கும் பயனளிக்கும் என்று நீங்கள் நினைத்தால் இந்த பிளாக் பற்றி உங்கள் தளத்திலும் சிறு அறிமுகம் கொடுத்தால் அந்தத் தகவல்கள் இன்னும் நிறையப் பேரைச் சேர உதவியாக இருக்கும்.
நன்றி ...............
thumiz
அன்பின் நண்பருக்கு...
நான் தமிழிலே மருத்துவத் தகவல்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக ஒரு தளத்தை உருவாக்கும் நோக்கோடு... என்ற தளத்திலே எழுதி வருகின்றேன்.
அத்தோடு மற்றவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பதிலும் பிளாக் வழியாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் முனைகின்றேன்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் ஒரு பொழுதிலே சற்று என் தளத்தைப் பார்த்து அது மற்றவர்களுக்கும் பயனளிக்கும் என்று நீங்கள் நினைத்தால் இந்த பிளாக் பற்றி உங்கள் தளத்திலும் சிறு அறிமுகம் கொடுத்தால் அந்தத் தகவல்கள் இன்னும் நிறையப் பேரைச் சேர உதவியாக இருக்கும்.
நன்றி ...............
thumiz
Very Goods Blogs
அண்ணே,ஒரு கிரிக்கெட் பதிவு ஒண்டு போடலாமே நேற்று நடைபெற்ற இந்திய இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி மற்றும் அதில் "விளையாடிய"சங்கா,ரண்டிவ் பற்றியும்!!
ஒரு கூட்டம் உழைப்புக்காகத் தேர் இழுக்க, எங்கட பன்னாடைகளும் கலாசாரம், விழுமியங்களை மறந்து எவ்வளவு அல்லோலகல்லபாடுகள்.
தேர் போகுதா, பெரகரா போகுதா என வித்தியாசப்படுத்த முடியாத அளவுக்கு நடனங்களும், ஆர்ப்பாட்டங்களும்.
தேர் இழுப்பதையே வன்மையாகக் கண்டிக்கும் நான், கலாசாரங்கள் பணத்துக்காக விலைபோவதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
Post a Comment