காசாவில் தொடரும் சோகம்: பசியால் துடிக்கும் மக்கள், உணவுத் தேடலில் அதிகரிக்கும் மரணங்கள்!
காசா நகரம்: வடக்கு காசா பகுதியில், ஒரு காலத்தில் வீடுகளாக இருந்த குண்டு வீசப்பட்ட பகுதிகளில், பசியால் வாடும் பாலஸ்தீனியர்கள் கூட்டம் கூட்டமாக உணவு தேடி அலைகின்றனர். மாவுப் பையை முதலில் பிடிக்கும் நம்பிக்கையில், அவர்கள் மாலை நேரத்திலேயே நடக்கத் தொடங்குகின்றனர். அடுத்த சில மணிநேரங்களில் அல்லது அன்று முழுவதும் மாவு எற்றிய லொறிகள் வருமா என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால், அது தவறவிட முடியாத ஒரு வாய்ப்பு என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அண்மைய நிலவரம் மற்றும் உயிரிழப்புகள்:
காசா நகரத்தின் உள்ளூர் சந்தையில் உணவுப் பொருட்கள் கிட்டத்தட்ட இல்லை. காசாவின் தெற்கில் உள்ள பண்ணைகளில் இருந்து வரும் சிறிய அளவிலான காய்கறிகள் கூட மிக அதிக விலையில் விற்கப்படுகின்றன. இரண்டு தக்காளிப் பழங்களின் விலை 8 டாலர் வரை செல்கிறது. இது பெரும்பாலானோரால் வாங்க முடியாத நிலை. மக்கள் இங்கு, "பசியால் செத்து மடிகிறோம் அல்லது உணவு தேடி கொல்லப்படுகிறோம்" என்று வேதனையுடன் கூறுகிறார்கள்.
சமீபத்திய தகவல்களின்படி, மனிதாபிமான உதவி வழங்கும் தளங்களில் ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மே 26 ஆம் திகதி முதல் உணவு தேடிய நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல், ஜூன் 15 ஆம் திகதி மட்டும் 59 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பலர் உணவு பெற முயற்சித்தவர்கள். உணவு விநியோக மையங்களுக்கு அருகில் நடந்த தாக்குதல்களில் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் அண்மையில் வடக்கு காசாவிற்கு குறைந்த அளவிலான மாவை அனுமதிக்கிறது. ஆனால், தெளிவான விநியோக முறை இல்லாததால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் லாரிகளில் இருந்து நேரடியாகப் பொருள்களைப் பெற முயற்சிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர். இது அவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. காசா மக்கள் பட்டினியாலும், உணவு தேடும் அபாயத்தாலும் தினமும் மடிந்து வருகின்றனர்.
- காசாவிலிருந்து அல் ஜசீராவின் நிருபர் மவோத் அல் கலோட்டின் செய்திக் குறிப்பை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது