ஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்

ARV Loshan
26

நேற்று ஞாயிற்றுக்கிழமை, முழுநாள் வீட்டில் இருப்பதாக முடிவுசெய்த உடனேயே போட்ட திட்டங்களில் ஒன்று சன் டிவியில் காட்டுவதாக இருந்த ஆயிரத்தில் ஒருவன் இசை வெளியீட்டு விழா பார்ப்பது.
இந்தத் திரைப்படம் பலபேராலும் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு பிரமாண்டப்படைப்பு. இதற்குப் பல காரணங்கள்... முக்கியமாக இயக்குனர் செல்வராகவன் தனது முன்னாள் தோஸ்த் யுவனுடன் பிரிந்த பிறகு வர இருக்கும் திரைப்படம்... அது போல மிகப் பெரிய வெற்றி பெற்ற பருத்திவீரனுக்குப் பிறகு கார்த்திக்கின் முதல் படம்...
MGR திரைப்படத் தலைப்பு வேறு ஒரு பக்கம் பிரம்மாண்டம் இன்னொரு பக்கம் பரபரப்பு.. (வழமையாக MGR படப் பெயர்களை இளைய தளபதி தானுங்கணா எடுப்பாரு.. இதை செல்வா கார்த்திக்கு எடுத்ததால கடுப்பாயிருப்பாரே)
ஆனால் என்னைப் பொறுத்தவரை ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கமே இந்தப் படத்தைப் பற்றிய ஆர்வத்தையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
பல பதிவர்களும், விமர்சகர்களும் ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் பற்றி பாராட்டி, புகழ்ந்து எழுதியதையெல்லாம் வாசித்திருப்பீர்கள்...
G.V.பிரகாஷின் master piece என்றும் வைரமுத்துவின் ஆழமான வரிகள், காத்திரமான வரிகள் என்றும் அனைவருமே புகழ்ந்துதள்ளி சிலாகித்துள்ள பாடல்களில் பெம்மானேயும், தாய் நின்ற மண்ணேயும் எப்போது கேட்டாலும் என் மனம் பாடல் வரிகளோடு சேர்ந்து அழும்.
இதில் வருகின்ற ஜல்சா, ஜாலி பாடல்களை எழுதி இருப்பவர் செல்வராகவனே தான்.. மூன்று முக்கியமான முத்தான பாடல்கள் தான் வைரமுத்து எழுதியவை
இது பற்றி சில பதிவுலக நண்பர்கள் எழுதிய பதிவுகள் என்னைவிட அதிகமாக, அழகாக சொல்லியிருக்கும்.
இந்த வரிகளுக்காகவே செல்வா – யுவனைக் கழற்றிவிட்டதும் G.V.பிரகாஷோடு சேர்ந்ததும் நல்லது என்று நினைக்கின்ற ஆயிரத்தில் நானும் ஒருவன்.
எனினும் பாடல்களுக்கு ஆணிவேராக அமைந்த வைரமுத்து நேற்று சன் டிவியில் காட்டப்பட்ட இசை வெளியீட்டில் காணப்படவேயில்லை. அவர் தந்த ஒரு சிறு கருத்து மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. ஏதாவது உள்வீட்டு சிக்கலா?
வைரமுத்து சொல்லிய ஒரு விஷயம் "இந்தப் படமும் களமும் சோழர் காலம் செல்வதால் பழைய கல்வெட்டுக்கள்,பண்டைத் தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் ஒரு மாணவனாக மாறிப்போனேன். இதுபற்றி செல்வாவுக்கு சொல்லவில்லை.. வெற்றி விழாவின்போது சொல்லுவேன்".
நம்பிக்கை பாருங்கள்.. முத்துக்குமார் செல்வா-யுவனுடன் அமைத்த வெற்றிக் கூட்டணியை வைரமுத்து-செல்வா-G.V முந்தவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
G.V.பிரகாஷீக்கோ தலை விறைத்துப் போகுமளவுக்குப் பாராட்டு! வெயிலுக்குப் பிறகு பாராட்டப்பட வேண்டியளவு முதல் தடவையாக செய்திருக்கிறார் G.V.
உருக வைக்கும் தாய் நின்ற மண்ணே, பெம்மானே...
ஆடவைக்கும் ஓ! ஈசா, உன் மேல ஆசைதான்...
ஆண்களை மயக்கும் மாலைவேளையில்
இரண்டு பின்னணி இசைகள்..
என்று கலவையாகக் கலக்கியிருக்கிறார் இசைப்புயலின் இளம்புயல். எனினும் ஈசனையும், கோவிந்தனையும் Oh yeah baby... என்று clubbing அழைத்திருப்பது கொடுமையென்றே தோன்றுகிறது.
படத்தின் ஒரு சில காட்சிகள் / நிழற்படங்கள் காட்டப்பட்டன.
கார்த்திக், ரீமா சென், ஆன்ட்ரியா ஆகியோர் தோன்றும் அந்தக் காட்சிகள் பல ஆங்கிலப் படங்கள் சிலவற்றை எனக்கு ஞாபகப்படுத்தின.
Pirates of the Carribean , Indiana Jones, மற்றும் Mummy Returns போன்ற இன்னும் பல புதையல் தேடும் ஆங்கிலத்திரைப்படங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் தான் அதிகம்.
நம்ம செல்வராகவன் ஏற்கனவே கமலின் குணாவை சுட்டு காதல் கொண்டேனையும், பல ஆங்கிலத்திரைப்படங்களின் கலவையாக 7G Rainbow Colony ஐயும் கொடுத்திருந்தவர் என்பதையும் யாரும் மறுக்கமாட்டார்கள்.
புதுப்பேட்டை கூட பல மெக்சிக்கன் திரைப்படங்களின் தழுவலே! ஆங்கிலப்பட/ சர்வதேசப்பட அறிவு அதிகம் உள்ளவர்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் அது என்ன படம் என்று.
இதனாலேயே நான் எப்போதும் செல்வராகவனை நல்ல படைப்பாளி(Creator) என்று நினைத்ததில்லை, அவர் நல்லதொரு இயக்குனர் மட்டுமே.
அதிலும் - பார்த்தீபன் தான் பேசும் போது அடிக்கடி இது English படம் தான் என்று அடித்துச் சொன்னதும் எங்கேயோ எதுவோ இடிக்கிறது.
இந்தப் படம் 2009இல் ஆரம்பித்து 7ம் நூற்றாண்டு வரை செல்லும் கதை என்று சொல்கிறார்கள்... சோழநாட்டு – பாண்டிய சரித்திரங்களைப் பற்றியும் வைரமுத்து பாடல்களில் பேசுவதால் ( இவற்றில் பல வரிகள் எம் நாட்டு மக்கள் நிலை பற்றியும் உருகியிருந்தன... அல்லது உருகியது போலிருந்தது ) நிறையவே எதிர்பார்த்துள்ளேன்...
பார்த்தீபன் என்ற புதுமைப்பித்தரும் ஒரு வித்தியாசமான பாத்திரம் ஏற்றுள்ளதனால் (இவர் தான் சங்ககால / சோழர்கால பிரதான பாத்திரமோ ) உண்மையிலேயே வித்தியாசமான படம் தானோ என்று ஆர்வத்துடன் இருக்கிறேன்.
பேசியவர்களில் பார்த்தீபன் வந்தவுடனே மேடை கலகலத்தது. திறந்துவிட்ட சட்டையுடன் ( Button opened shirt ) வந்தவர் 'வழமையாக டப்பிங் முடித்த பிறகு சட்டையே செய்யமாட்டேன்.. இப்போது பட்டனே செய்யமாட்டேன்' என்று கடித்தவர் பின் ஆயிரத்தில் ஒருவனின் தமிழ் டப்பிங் உரிமையைத் தான் செல்வராகவனிடம் கேட்டதாக படத்தின் பீட்டர் தனத்தை நக்கலாக வாரினார்.
இப்போதெல்லாம் கதாநாயகிகள் தமிழில் பேசுவதே பெரும்பாடாய் இருக்கும்போது, அழகான ஆண்ட்ரியா அழகாக இருப்பதோடு, அழகாகப் பாடவும் செய்கிறார்.
கவர்ச்சியாக இல்லாமல், கண்ணை உறுத்தாமல் அவர் பாடும் அழகே தனி.
இன்னும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.. நடிகையாகவோ, கதாநாயகி ஆகவோ.. பச்சைக்கிளி முத்துச்சரம் படம் பார்த்ததுமே யோசித்தேன்.. ஏன் இவருக்கு இன்னமும் சரியான வாய்ப்புக்கள் அமையவில்லையோ தெரியவில்லை..
ரீமா சென் பாட மாட்டாங்களா? அவங்க பாடலேன்னா என்ன நேற்றுக் காட்டிய சாம்பிள் போதும் படத்துல அவங்க ஏன் இருக்காங்க என்று சொல்ல.. ;)
தனுஷும் அவர் மனைவியும் வந்து ஆடிப் பாடி.. (பாடி என்பதை விட, கத்தி என்பது கொஞ்சம் கூடப் பொருத்தம் என்று நினைக்கிறேன்) கலகலப்பூட்டினார்கள்.
கார்த்திக், நித்யஸ்ரீ, விஜய் யேசுதாஸ் எல்லோரும் பாடியபோதும், இசை நேரடியாக வழங்கப்படவில்லை என்பதும் cdக்கு மேல் பாடகர்கள் பல நேரம் வாயசைத்தும்
சில நேரம் பாடியும் இருந்தார்கள் என்பது உறுத்திய ஒரு விஷயம்.
தனுஷ் குழுவினரும், அண்ட்ரியாவும் தவிர என்னைப் பொறுத்தவரை வேறு எந்தப் பாடலுமே cdஇல் கேட்ட தாக்கத்தை கொஞ்சமாவது மனதில் ஏற்படுத்தவில்லை.
இதிலும் தாய் தின்ற மண்ணே பாடலுக்கு * பூர்ணாவின் .. (திருத்தியதுக்கு நன்றி அனானி) பரத நாட்டியம் வேறு.
கொலை செய்யும் அளவு வெறி வந்தது..
பின்னே.. ஐட்டம் பாடலுக்கு ஆடும் ஆடை போன்ற ஒன்றோடு வந்து இந்த அற்புத பாடலுக்கு ஆடினால்?
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ! மன்னன் ஆளுவதோ!
இந்த வரிகளுக்கு சிரித்துக் கொண்டே ஸ்ரேயா காட்டிய பாவங்களைப் பார்த்த நேரம் தொலைக்காட்சிப் பெட்டியைப் போட்டுடைக்கும் வெறி வந்தது.(என்னுடைய சொந்த டிவி என்பதால் தப்பித்தது)
இதையே தான் திரைப்படத்திலும் செல்வா செய்யப் போகிறாரா?
செல்வா, மற்றப் பாடல்களை உங்கள் வழமையான மஜா பாடல்களாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..தயவு செய்து ஈழத்து உணர்வுகளும் கலந்துள்ள இந்தப் பாடலில் சிருங்கார ரசம் வேண்டாம்.
இப்படியான பொருட்செலவுள்ள திரைப்படங்களுக்கு யாராவது ஒரு தாராள மனம் படைத்த தயாரிப்பாளர் வைக்கவேண்டுமே, இதற்கு ஒரு புதிய தயாரிப்பாளர் கிடைத்திருக்கிறார்.
பிறகேன்ன செல்வா கொட்டி முழக்கப் போகிறார்.
செல்வராகவன் படம் என்பது மேலோங்கி பாடல்கள் தரும் உணர்வுகள் எழுந்து நிற்கிற படமாக இப்போதைக்கு ஆயிரத்தில் ஒருவன் தென்படுகிறது..
பாடல்கள் உச்சக் கட்டத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் படமும் வெளியிடப்பட்டால் வரவேற்பு எக்கச்சக்கம் நிச்சயம்.
இப்படியான நல்ல முயற்சிகள் நான் ரொம்பக் காலமாய் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன்(கல்கி), மருதநாயகம் போன்றவற்றுக்கு உயிர்ப்பு கொடுக்காதா என்றொரு நப்பாசை தான்..
பி.கு - படத் தலைப்புக்கு பொருத்தமாக தான் அந்த 1000 போட்டுக் கொண்டேன். எனக்கு இருப்பது இத்தனை எதிர்பார்ப்புக்கள் தானுங்கோவ்..

Post a Comment

26Comments

Please Select Embedded Mode To show the Comment System.*