January 05, 2018

#SAvIND - அச்சமூட்டும் வேகம் எதிர் அசத்தல் துடுப்பாட்டம்!!! - தென் ஆபிரிக்கப் புயலை எதிர்கொள்ளுமா கோலியின் 'புதிய' இந்தியா


(Freedom Trophy - நெல்சன் மண்டேலா - மகாத்மா காந்தி ஆகிய இருவருக்கும் அர்ப்பணிக்கப்படும் இந்தக் கிண்ணத்தை மீட்கும் அணித் தலைவருக்கான சிறைவைக்கப்பட்டிருப்பதைப் போல சித்தரிக்கப்பட்டுள்ள வடிவம் என்னைக் கவர்ந்துள்ளது)

தென் ஆபிரிக்கா தனக்கு சாதகமாக புற்கள் மேவிக்கிடக்கும் ஆடுகளத்தைத் தயார் செய்து, நாணய சுழற்சியிலும் வென்று துடுப்பாட்டத்துக்கு சாதகமான முதல் இரு நாட்கள் துடுப்பெடுத்தாட முனைந்திருக்க, இந்தியப் பந்துவீச்சாளர்கள் இந்த எண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி முதல் நாளிலேயே 286 ஓட்டங்களுக்கு சுருட்டி எடுப்பார்கள் என்று யார் எதிர்பார்த்தார்?

நம்புவீர்களோ இல்லையோ, நான் கொஞ்சமாவது நினைத்தேன்... இந்தியாவிடமும் இப்போது உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைகளைத் தடுமாற வைக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆரோக்கியமான அணித்தெரிவு சிக்கலை ஏற்படுத்தக்கூடியளவுக்கு சிறப்பான பெறுபேறுகளைக் காட்டும் ஐந்து பேர் இருக்கிறார்கள்.

பல தடவை இவ்வாறு சொந்த செலவில் சூனியம் வைத்த கதைகள் பலவான் அணிகளுக்கே நடந்திருக்கின்றன.
அண்மைய உதாரணம் புனேயில் இந்தியா சுழல் பந்துக்கு சாதகமான ஆடுகளம் செய்து வைக்க, பெரிதாக அறியப்படாத, ஓ கீப் யாருமே எதிர்பாராத வகையில் 12 விக்கெட்டுக்களை எடுத்து மூன்று நாட்களில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தோல்வியைப் பரிசளித்த கதை.

ஆனால் 286 என்பதையே ஒரு பெரிய, சவால்மிக்க ஓட்ட எண்ணிக்கையாக மாற்றிக்காட்ட தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களால் முடியும். முடியுமா என்று நான் இட்ட ட்வீட்டுக்கு சில நிமிடங்களிலேயே மூன்று விக்கெட்டுக்களைப் பறித்து பதிலளித்துள்ளார்கள்.
தென் ஆபிரிக்காவுக்கு டீ வில்லியர்ஸ் - டூ ப்ளேசி இணைப்பைப் போல, பின் வந்த தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சாளரும் விக்கெட் காப்பாளரும் சேர்த்துக் கொடுத்த ஓட்டங்கள் போல சேர்க்காவிட்டால் தென் ஆபிரிக்கா நான்கு நாட்களுக்குள் போட்டியை முடிக்கும்.

நாளை காலை வேளை தென் ஆபிரிக்காவின் வேகப்பந்துவீச்சை இந்தியா சமாளிக்கும் வகையில் தான் இந்தப் போட்டி செல்லும் பாதை உள்ளது.
ரஹானே இல்லாத வெறுமையும், சகாவை இப்படியான ஆடுகளத்தில் ஆறாம் இலக்கத்தில் ஆடவைக்கும் தவறான முடிவும் நாளை தென் ஆபிரிக்காவின் நான்கு முனை வேகத்திலேயே தங்கியிருக்கிறது.

28/3 என்று இந்தியா இப்போதிருக்கும் நிலையைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகம் இருந்தாலும் புஜாரா இந்தியாவின் தூணாக இருப்பார் என்பதும், ரோஹித்தின் அண்மைய பெறுபேறுகளும்  இந்தியாவுக்கு உற்சாகம் தரலாம்.

இந்தியாவின் துடுப்பாட்ட வரிசையின் பலம் பற்றி சிலாகித்தும்  - பொதுவாகவே இன்று கோலி, விஜய் ஆகியோர் ஆட்டமிழந்த விதமாகவே இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் வெளிநாடுகளில் சொதப்பினாலும் கூட- அண்மைக்காலமாக முன்னேற்றம் கண்டு வரும் கோலியின் தலைமையிலான இந்தியாவின் மேலுள்ள நம்பிக்கையால் - தென் ஆபிரிக்காவின் அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சு பற்றி வியந்தும் - இந்த இரண்டு காரணிகளும் மோதும் தொடராக இது அமையும் என்று குறிப்பிட்டு இன்று Sports Tamil க்கு எழுதிய கட்டுரையில் சில மேலதிக சேர்க்கைகளோடு இந்த இடுகை..

இந்தியா vs தென் ஆபிரிக்கா - அச்சமூட்டும் வேகம் எதிர் அசத்தல் துடுப்பாட்டம் 


இன்று தென் ஆபிரிக்காவில் ஆரம்பிக்கும் கிரிக்கெட் தொடரானது உலகின் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களினதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு தொடராக அமையப்போகிறது. கிரிக்கெட்டின் பழம்பெரும் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் முடிவுறும் நேரத்தில் தென் ஆபிரிக்க - இந்தியத் தொடர் ஆரம்பிப்பது கிரிக்கெட்டின் குதூகலம் இல்லாமல் வேறென்ன?


கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக சொந்த நாட்டிலும், இந்தியாவை ஒத்த கால நிலை, களத்தன்மைகளைக் கொண்ட இலங்கையிலும் பெரியளவில் சவால்களை எதிர்கொள்ளாமல் இலகுவாக வெற்றிகளைக் குவித்து டெஸ்ட் தரப்படுத்தல்களில் முதலாம் இடத்திலுள்ள இந்திய அணி அண்மைக்காலத்தில் தனது முதலாவது பெரும் சவாலை சந்திக்கப்போகிறது.

டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகளின் மோதல் இது.
எனினும் 3-0 என்று தென் ஆபிரிக்காவிடம் இம்முறை தோற்றாலும் முதலிடம் பறிபோகாது எனும் அளவுக்கு கடந்த சில மாதகாலத் தொடர்ச்சியான வெற்றிகள்.
அதிலும் 9 டெஸ்ட் தொடர்களைத் தொடர்ச்சியாக வென்று சாதனையை சமப்படுத்தியுள்ளது. ஆனால் சாதனையை முறியடிக்கும் 10வது தொடர் வெற்றி நிச்சயம் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதி.

தென் ஆபிரிக்காவுக்கோ கடைசியாக 2015ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்தியாவில் வைத்துக் கண்ட 3-0 என்ற (4 டெஸ்ட்களில்) தோல்விக்கு வேகப்பந்து ஆடுகளங்களில் வைத்துப் பழி தீர்க்கும் எண்ணமுள்ளது. 

இதுவரைக்கும் தென் ஆபிரிக்காவிலே  எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் வெல்லாத இந்திய அணிக்கு இது ஒரு மிகப் பெரும் சோதனை தான்.
உலகின் மிகச் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வரிசை என்று சொல்லக்கூடியளவுக்கு இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் கடந்த 2017இல் மாறி மாறி ஓட்டங்களை மலையாகக் குவித்திருந்தார்கள். அவுஸ்திரேலிய, இங்கிலாந்து, நியூ சீலாந்து பந்துவீச்சாளர்களையும் சந்தித்திருந்தார்கள். ஆனால் அவை அனைத்தும் இந்திய ஆடுகளங்களில்..
ஒன்றில் தட்டையான துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள். இல்லையேல் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள்.

இன்று முதல் இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை சந்திக்கவிருப்பதோ உலகின் எந்தவொரு துடுப்பாட்ட வரிசையும் அச்சுறுத்தும் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சு வரிசை.
மற்ற அணிகள் எல்லாம் அதிகபட்சம் 2 அல்லது 3 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துத் தடுமாறிக்கொண்டிருக்க தென் ஆபிரிக்கா மிக உறுதியான 5 உயர்தரமான வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு (ஸ்டெயின், மோர்னி மோர்க்கல், பிலாண்டர், றபாடா, க்றிஸ் மொரிஸ்), மேலதிகமாக மிதவேகப்பந்தை வீசும் பெலகாவாயோவும் இருக்கிறார்-  யாரைத் தெரிவு செய்வது, யாரை விடுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறது.
உலகின் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினையே ஓய்வு அளித்து மற்றையவர்களைப் பயன்படுத்தலாமா என்று சிந்திக்கிறார்கள் என்றால் எத்தகைய பலம் அது?

அதுவும் இன்று கேப்டவுனில் ஆரம்பித்துள்ள டெஸ்ட் போட்டி முதல் அத்தனை ஆடுகளமுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான எகிறும் ஆடுகளங்களை விரும்புகிறார்கள் என்று சொன்னால் அவர்களது நோக்கம் எத்தகையது என்று புரிந்துகொள்ளலாம்.

இதுவரை காலமும் இவ்விரு அணிகளின் டெஸ்ட் மோதல்களில் 
விளையாடியவை - 33
தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி - 13
இந்தியாவுக்கு வெற்றி - 10
சமநிலை - 10

ஆனால் தென் ஆபிரிக்காவில்,
17 டெஸ்ட் போட்டிகளில்,
தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி - 8
இந்தியாவுக்கு வெற்றி - 2
சமநிலை - 7

இந்த நிலையை இப்போதிருக்கும் வெற்றிக்காக ஆவேசத்துடன் விளையாடக்கூடிய தனது இளைய அணியின் மூலம் அடையும் விருப்போடு இருக்கிறார் விராட் கோலி.

அதற்கு ஏற்றதாக இந்தியாவின் பலம்வாய்ந்த அசத்தல் துடுப்பாட்ட வரிசை இருக்கிறது. தென் ஆபிரிக்காவின் ஆடுகளங்களிலும்  ஈடுகொடுத்து ஆடக்கூடிய நுட்பங்கள் கொண்ட துடுப்பாட்ட வீரர்கள் இருக்கிறார்கள்.
முக்கியமாக கடந்த வருடத்தில் 1000 ஓட்டங்களுக்கு மேலே குவித்த புஜாராவும் கோலியும்.
இதிலே மூன்றாம் இலக்கத்தில் ஆடும் புஜாரா உலகின் மிக நம்பகமான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர். டெஸ்ட் போட்டிகளுக்கு என்றே வார்க்கப்பட்டவர் போல. கடந்த வருடத்தில் 4 சத்தங்களுடன் 1140 ஓட்டங்களைக் குவித்திருந்த புஜாராவின் ஓட்டக்குவிப்பும் நின்று நிலைப்பும் இந்தியாவுக்கு மிக அவசியமாகிறது.
அதேபோல உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் முன்னின்று ஓட்டக்குவிப்பிலும் வழிநடத்தி 5 சதங்களைப் பெற்ற (இவற்றில் இரண்டு இரட்டை சத்தங்கள்) கோலி இங்கிலாந்தில் தடுமாறியதைப் போல இல்லாமல் நேர்த்தியாக, துணிச்சலாக ஆடினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரும் பலமாக அமையும்.

முரளி விஜய் இன்னொரு முக்கியமான வீரர். வெளிநாட்டு மண்ணில் தடுமாறும் இந்திய வீரர்களுக்கு மத்தியில் விஜய் மிக நேர்த்தியாக ஆடக்கூடிய வீரர். ரஹாநேயும் அவ்வாறு இருந்தாலும் இலங்கை அணியோடு தொடர்ச்சியாகத் தடுமாறியிருப்பது அவரது formபற்றிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் தான் கிடைத்த டெஸ்ட் வாய்ப்புக்களில் தன்னை நிரூபித்தவரும் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் சிறப்பான ஓட்டக்குவிப்பில் இருக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தவான், ராகுல் ஆகிய இருவருமே தம்மை நிரூபித்தவர்கள். எனினும் தவானே இந்தியாவின் தெரிவாக அமைய அவரது அனுபவமும் அதிரடியும் காரணமாக அமையும்.
இந்தியா மேலதிகமாக ஒரு வேகத்தையும் சேர்த்துக்கொள்ள பாண்டியாவின் சகலதுறைத் திறமை பயன்படுள்ளது.

எதிர்பார்த்ததைப் போல ஒருநாள் போட்டிகளில் கலக்கிய பும்ராவுக்கு அறிமுகத்தை வழங்கி மூன்று வேகப்பந்து வீச்சாளரோடு களம் கண்டிருக்கிறது. 
பும்ரா எதிர்பார்த்தளவுக்கும் குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் காட்டிய திறமையளவுக்கு சிறப்பாக செய்யாவிடினும் அவரது முதல் விக்கெட் ஏபி டீ வில்லியர்ஸ்.
எனும் அனுபவம் வாய்ந்த இஷாந்த் ஷர்மாவை இன்று தெரிவு செய்திருக்கலாமோ என்று கோலி இனி எண்ணலாம்.
ஜடேஜா உடல்நலக்குறைவு அஷ்வினை மட்டும் தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

தென் ஆபிரிக்கா மிக நீண்ட காலத்துக்குப் பிறகு உபாதை சிக்கல்கள் எதுவும் இல்லாமல் தன்னுடைய மிகச்சிறந்த அணியோடு இறங்கியுள்ளது.
துடுப்பாட்டத் தெரிவுகளில் பெரிய சிக்கல் இல்லாவிட்டாலும் சிறப்பாக ஆடிவந்த பவுமாவை இன்று விட்டுவிட்டு ஆடவேண்டிய நிர்ப்பந்தம்.
எனினும் அம்லா, டீன் எல்கர் (கடந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தவர்) மீண்டும் டெஸ்ட் அணிக்குள் வந்துள்ள உபாதை கடந்த டீ வில்லியர்ஸ், அணித் தலைவர் டூ ப்ளேசிஸ் ஆகியோரோடும் உலகத் தரம் வாய்ந்தததாகத் தெரிகிறது.

எனினும் ஐந்து முழு நேரப் பந்துவீச்சாளரைத் தெரிவு செய்திருப்பதால் ஒரு துடுப்பாட்ட வீரர் குறைவாக விளையாடும் அபாயம்.
டீ கொக்கும் ஒரு சிறப்பான துடுப்பாட்ட வீரரே. எனினும் அவருக்குப் பிறகு பிலாண்டர் வருவது துடுப்பாட்டம் பலவீனமானதாகவே தெரிகிறது.
ஆனாலும் முக்கியமான மூன்று வீரர்களும் 12 ஓட்டங்களுக்கு ஆடுகளம் விட்டு அகன்றும் கூட சமாளித்த திறமை மெச்சக்கூடியது.

ஆயினும் தென் ஆபிரிக்கா தன்னுடைய வேகப்பந்துவீச்சாளரில் வைத்துள்ள நம்பிக்கை அது.

இதனால் தான் இந்தத் தொடர் தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளரின் அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சுக்கும் இந்தியாவின் ஓட்டக்குவிப்பில் ஈடுபடும் அசத்தல் துடுப்பாட்ட வீரருக்கும் இடையிலான மோதல் தொடராகக் கருதப்படுகிறது.

இதுவரை கலக்கும் இந்திய வேகப்பந்துவீச்சாளரை உலகின் நம்பகமான துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட தென் ஆபிரிக்கத் துடுப்பாட்ட வரிசை சமாளிக்குமா என்பதே தொடரின் முதலாவது கேள்வி. 
புவனேஷ்வர் குமாருக்கு 4 விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொடுக்க உதவிய ஆடுகளம் நாளை தென் ஆபிரிக்காவின் புயல்களுக்கு என்னென்ன சாதகத்தை வழங்குமோ?

இதுவரை ஸ்டெயின், பிலாண்டர், மோர்க்கல் ஆகியோர் தலா ஒன்று..
இன்னும் புதிய புயல் காகிஸோ றபாடாவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை இவரது நாளாக அமையலாம். அப்படி அமைந்தால் இந்தப் போட்டி நான்கு நாட்களில் முடிந்து போகலாம்.
அண்மையில் தான் சிம்பாப்வேயுடன் இரண்டே நாளில் ஒரு டெஸ்ட் போட்டியைத் தென் ஆபிரிக்கா முடித்திருந்தது.




1 comment:

Yarlpavanan said...

அருமையான கண்ணோட்டம்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner