October 05, 2012

இறுதிப் போட்டியில் 'மஹேல'வின் இலங்கை - #ICCWT20


இலங்கை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.



தனக்கான வாய்ப்பை உலகின் தலைசிறந்த Twenty 20 அணிகளில் ஒன்றான பாகிஸ்தானை அதன் வழியிலேயே வீழ்த்தி இலங்கை அணி தன் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

தொடர  முதல் அரையிறுதிகள் ஆரம்பிக்க முதல் தமிழ் மிரருக்காக எழுதிய Super 8 சுற்றைப் பற்றிய அலசல் & அரையிறுதிக்கான அறிமுகத்தை வாசித்துவிடுங்கள் (இதுவரை வாசிக்காவிட்டால்)


அரையிறுதிகள் அழைக்கின்றன: ICC உலக Twenty 20



சொந்த மண் ஆடுகளங்கள், ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவுப் பலம் இவற்றைத் தாண்டியும் எந்த சூழ்நிலையையும் தன் வசப்படுத்தக் கூடிய பந்துவீச்சாளர்களும் அவர்களை சரியாக வேளை அறிந்து பயன்படுத்தக்கூடிய மிகச் சிறந்த தலைவர் ஆகிய காரணிகளும் இலங்கையின் இந்த இறுதிப் போட்டி நோக்கிய வெற்றிப் பயணத்துக்கான முக்கிய காரணிகளாகும்.

குறிப்பாக நேற்றைய அரையிறுதி.... சிக்கலான, ஓட்டங்கள் குவிப்பதில் சிரமம் தருகின்ற ஒரு ஆடுகளத்தில் சராசரி ஓட்ட எண்ணிக்கை ஒன்றைப் பெற்ற பிறகு அதை ஒரு பயங்கரமான (அதிரடி, நம்ப முடியாத, ஆச்சரியப்படுத்தும் என்று எவ்வகையாகவும் எடுக்கலாம்) துடுப்பாட்ட வரிசைக்கு எதிராகக் காப்பாற்றி அபாரமான வெற்றியீட்டியது உண்மையில் உலகின் மிகச் சிறந்த ஒரு Twenty 20 வெற்றி.

தலைமைத்துவத்தின் பொறுப்பும் அதன் பக்குவமும் மஹேல மூலமாக நேற்றைய தினம் மிகச் சிறந்த முறையில் வெளிப்பட்டதாகக் கருதுகிறேன். பந்துவீச்சாளர்களைக் கையாண்ட விதம் மட்டுமல்லாமல், உரிய களத்தடுப்பு வியூகம், ஒவ்வொரு எதிரணி வீரரையும் தனித்தனியாக மனதில் கொண்டு அமைக்கப்பட்ட தாக்குதல் முறைகள், அதற்கெல்லாம் மேலாக (இங்கிலாந்துடன்)வெற்றிபெற்ற போட்டியில் இருந்து இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்திய ஒரு பந்துவீச்சாளரை வெளியேற்றி இதுவரை ஐந்தே ஐந்து T20 போட்டிகளை மட்டும் விளையாடிய ஒரு சுழல் பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டுவருவதென்பது எல்லாத் தலைவர்களும் துணிச்சலாக செய்யும் ஒரு விடயமல்ல..

ஆனால் ரங்கன ஹேரத் பாகிஸ்தானின் துடுப்பாட்ட முதுகெலும்பை உடைத்துப்போட்டு தன்னுடைய மிகச் சிறந்த T20 பந்துவீச்சுப் பெறுதியை எடுத்த பின்னர் பெருமையில்லாமல் "நாங்கள்" பாகிஸ்தான் இடது கைப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறுவதையும் ஹேரத் பாகிஸ்தானுக்கு எதிராகச் சிறப்பாகப் பெறுபேறுகளைக் காட்டியுள்ளதையும் அவதானித்துள்ளோம்.

இதனால் தான் ஹேரத்தை இறக்கினோம் என்று அமைதியாக சொன்னது எத்தனை பேருக்கு வரக்கூடிய ஒரு விடயம்?

அணிக்கு அதிரடிக்கு என்று இருக்கிற ஒரு துடுப்பாட்ட வீரர் ஓட்டங்களைப் பெறத் தடுமாறித் துழாவும் நேரம் (இந்தியாவுக்கு சேவாக்கும், மேற்கிந்தியத்தீவுகளுக்கு கெய்லும் தடுமாறி இருந்தால் என்ன நடக்கும் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்) மாற்றுத் திட்டம் என்னவென்று மற்ற அணித்தலைவர்கள் மண்டையைப் பிய்த்திருப்பார்கள்..
ஆனால் மஹேல தானே அந்த ஓட்டவேகத்தை அதிகரிக்கும் பொறுப்பை எடுத்து வழமையாக ஒரு நேர்த்தியான டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக அவர் ஆடாத துடுப்பாட்டப் பிரயோகங்களை எல்லாம் விளையாடி (டெல்லி டெயார்டெவில்சுக்கு இனி வரும் சம்பியன்ஸ் லீக்கில் சேவாக்கும் இல்லாத நிலையில் இவை நிறையவே தேவைப்படும்) ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

நேற்றைய அரையிறுதியை இலங்கையின் பக்கம் மாற்றியதில் மஹேலவின் இந்த 42 க்குப் பெரிய பங்கு இருக்கிறது. பாகிஸ்தானின் தலைவர் ஹபீசும் சரியாக இதேயளவு ஓட்டங்களைப் பெற்றதும் சுவாரஸ்யம்.
மஹேல , ரங்கன ஹேரத் ஆகியோரைத் தவிர்த்து இலங்கையின் நேற்றைய மற்றும் இரு கதாநாயகர்கள் அஞ்சேலோ மத்தியூஸ் & திசர பெரேரா.. மத்தியூசின் ஒரே ஓவரில் வீழ்த்தப்பட்ட இரு விக்கெட்டுகளும், திசர இறுதி ஓவரில் குவித்த ஓட்டங்களும் இலங்கைக்கு பெருமளவில் உதவியிருந்தன. மத்தியூசின் இன்னொரு விக்கெட் மாலிங்கவின் பிடி தவறலால் இல்லாமல் போனது.

டில்ஷான் தன் துடுப்பாட்டத்தில் சறுக்கியிருந்தாலும் அபாரமான களத்தடுப்பின் மூலம் குறைந்தபட்சம் பத்து ஓட்டங்களையாவது காப்பாற்றிக் கொடுத்திருந்தார்.
மாலிங்க களத்தடுப்பில் விட்ட சறுக்கல்களைக் கட்டுப்பாடான பந்துவீச்சுமூலம் ஈடுகட்டிக் கொண்டார்.
சங்காவின் விக்கெட் காப்பு, குறிப்பாக ஹபீசை ஸ்டம்ப் செய்து ஆட்டமிழக்கச் செய்தது அபாரம்.

பாகிஸ்தான் தனது பந்துவீச்சாளர்கள் மூலம் உருவாக்கிய வெற்றிக்கான சாதகம் அனைத்தையும் தடுப்பாட்ட வீரர்களின் தடுமாற்றம் மூலமாக இழந்தது.
சொஹய்ல் தன்வீர், ராஸா ஹசன், உமர் குல் ஆகியோர் நேற்றுப் பந்துவீசியபோது இலங்கை வீரர்களுக்கு ஓட்ட வறட்சியும் தடுமாற்றமும் தாராளம்.
ஆனால் வழமையாக இலங்கை தடுமாறும் சயீத் அஜ்மல், ஷஹிட் அப்ரிடி ஆகியோரை இலங்கை ஆரம்பம் முதல் குறிவைத்துத் தாக்கியது முக்கியமான ஒரு வியூகமாகும்.

பாகிஸ்தானிய அணியின் துடுப்பாட்டம் நேற்று இலங்கையின் பந்துவீச்சு மாற்றங்கள், ஆடுகளத்தின்  மாறுபட்ட தன்மை ஆகியவற்றை சரியாக உணர்ந்துகொள்ளாமல் சரிந்தபோது, ஹபீஸ்,உமர் அக்மல் ஆகிய இருவரைத் தவிர ஏனைய அனைவருமே அவசரமாக, சிந்திக்காது, அல்லது பந்துவீச்சின் மர்மங்களை அவிழ்க்க முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டார்கள்.


அதிலும் ஷஹிட் அப்ரிடி , இப்போதெல்லாம் இவர் பூம் பூம் அல்ல.. வெறும் பூச்சாண்டி ஆகிவிட்டார்.
நேற்றைய தினத்தோடு இந்த உலக T20 யில் இரண்டாவது தடவையாக தான் சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டம் ஏதும் பெறாமல் ஆட்டமிழந்தார். (Golden Duck)
இது T20 போட்டிகளில் அப்ரிடி பெற்றுள்ள ஆறாவது பூச்சியம். லூக் ரைட் & டுமினி ஆகியோரும் இதேயளவு பூச்சியங்களைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்கள்.
ஆனால் அப்ரிடி பெற்ற ஆறுமே முதல் பந்து பூச்சியங்கள். Golden ducks.

டெஸ்ட், ஒருநாள், T20 இம்மூன்று வகைப் போட்டிகளிலும் சேர்த்து அப்ரிடி பெற்ற 40வது பூச்சியம் இது.
முழுமையான பூச்சிய விபரங்கள் இந்த சுட்டியில்..

http://stats.espncricinfo.com/ci/content/records/284057.html


பாகிஸ்தானிய அணி தோற்று நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கடுமையான விமர்சனங்கள் அணியின் சிரேஷ்ட வீரர் தொடர்பிலும், குறிப்பாக அப்ரிடி தொடர்பிலும் எழுப்பப்பட்ட நிலையில் ஹபீஸ் கோபப்படாமல் பதில் அளித்ததும், எந்தக் குறைகளும் சொல்லாமல் தோல்வியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதும் அவர் மீது மதிப்பை உயர்த்தி இருக்கின்றன.


தோனி தோற்கும்போதெல்லாம் காரணங்கள் சொல்லிச் சொல்லி , இப்போது இந்திய ரசிகர்களும் அவ்வாறே மாறிவிட்டார்கள் என்பது கடுப்பாக்குகிறது.
இந்திய அணி, ரசிகர்கள் இதர விஷயங்கள் பற்றி பிறிதொரு நாள் ஆராயலாம்..

மஹேல பற்றிப் பேசும்போது இன்னொரு முக்கிய விடயம் எங்களுக்கு அண்மைக்காலத்தில் ஞாபகம் வரும்.. பந்துவீச அதிக பேரம் எடுத்துக்கொண்டதும், தடைப் பயம் காரணமாக தலைமைப் பதவியை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மாற்றியதும். நேற்றும் இவ்வாறு நடக்கலாம் என்று சங்கா மீண்டும் தலைவராக இறங்கலாம் என்று ஊர்ஜிதமாகாத ஆனால் எதிர்பார்க்கப்பட்ட செய்திகள் உலவின.

ஆனால் மஹேல தான் தலைவராகக் களம் இறங்கினார்.
நாணய சுழற்சிக்காகவேனும் மீண்டும் சந்காவை இறக்கியிருக்கும் வாய்ப்பு இருந்தாலும்.

இலங்கை தலைவரை மாற்றிய விதம் விதிமுறைகளை மீறாத செயலாக இருந்தாலும் 'சூழ்ச்சி' , Spirit of cricket என்னாவது போன்ற கேள்விகளும் விமர்சனங்களும் மஹேலவை சங்கடப்படுத்தி இருக்கக் கூடும்.
நேற்று தான் ஒரு முக்கிய போட்டியில் தன் அணிக்குத் தலைமை தாங்கவேண்டும் என்றே துணிச்சலாக இறங்கியதாகப் பின்னர் மஹேல தெரிவித்தார்.

இலங்கை தலைவரைக் காப்பாற்ற சங்காவை பிரதி(ஈட்டுத்) தலைவராகப் பயன்படுத்தியது சரியா தவறா என விவாதிப்பவர்கள் தம்பி கன்கோனின் கீழே உள்ள ஆங்கில இடுகையையும் வாசிப்பது நல்லது.


How Mahela and Co. caught ICC off-guard!



இலங்கை அணி அண்மைக்காலமாகத் தொடர்ந்து பெற்று வரும் T20 வெற்றிகளும் தென் ஆபிரிக்காவின் மூன்று தொடர்ச்சியான தோல்விகளும் இலங்கையை சர்வதேச கிரிக்கெட் பேரவையின்  T20 தரப்படுத்தலில் முதலாம் இடத்துக்கு இட்டுச் சென்றுள்ளன.

நேற்றைய அரையிறுதிக்குப் பிறகு அணிகளின் நிலைகள்...
http://www.espncricinfo.com/rankings/content/current/page/211271.html

நேற்றைய போட்டியில் இலங்கை அணி வென்று அரையிறுதி நுழைந்திருப்பதானது இலங்கையின் இருவருக்கு தந்திருக்கும் இழப்பு பெரியது.

ஒருவர் ரஞ்சன் மடுகல்ல, அடுத்தவர் குமார் தர்மசேன.
இருவரும் முறையே போட்டித் தீர்ப்பாளராகவும் நடுவராகவும் இறுதிப் போட்டியில் கடமையாற்ற இருந்தார்கள்.
ஆனால் இலங்கை இறுதிப் போட்டியில் விளையாடுவதால் அந்த வாய்ப்பு போச்சு..

அதே போல இன்று இடம் பெறும் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றால், நேற்றைய போட்டியே சைமன் டௌபிளின் இறுதிப் போட்டியாகும். அவர் இத்தொடரின் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்தது எல்லோரும் அறிந்ததே.

நேற்றைய வெற்றியானது இலங்கை பாகிஸ்தானுக்கு எதிராகப் பெற்ற இரண்டாவது உலக T20 வெற்றியாகும்.
அத்துடன் இலங்கையின் இரண்டாவது உலக T20  கிண்ண இறுதிப் போட்டி வாய்ப்புக் கிட்டியுள்ளது. 2009 இல் இங்கிலாந்தில், இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடமே இலங்கை தோற்றிருந்தது.
இனி எந்த அணி இலங்கையை சந்தித்தாலும் இம்முறை கிண்ணம் வெல்லப் போவது இதுவரை உலக T20 கிண்ணத்தை வெல்லாத அணி என்பது மட்டும் உறுதி.

ஆனால் மகளிர் உலகக் கிண்ணமானது ஏற்கெனவே வென்றுள்ள அணிகளும் மகளிர் கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணிகளுமான ஆஸ்திரேலிய(நடப்பு சாம்பியன்கள்), இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலே தான் தீர்மானிக்கப்பட இருக்கிறது.


இன்று விளையாடப்பட இருக்கும் இரண்டாவது அரையிறுதியில் மோதவுள்ள இரு அணிகளும் இதுவரை சந்தித்துள்ள எட்டு T20 போட்டிகளில் ஐந்தில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
உலக T20 போட்டிகளில்  இரண்டில் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் மேற்கிந்தியத் தீவுகளும் வென்றுள்ளன.
இன்றைய போட்டி கெயில், வொட்சனுக்கிடையிலான போட்டியா, சாமுவேல்ஸ், ஹஸிக்கு இடையிலான போட்டியா அல்லது சுனில் நரேன் - சேவியர் டோஹெர்ட்டிக்கு இடையிலான போட்டியா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

இவ்வளவு நாளும் பதுக்கி வைத்திருந்த டேவிட் ஹசியையும் ஆஸ்திரேலியா களம் இறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


முடிக்க முதல், தோற்றால் தோல்வியை நாகரிகமாக ஏற்றுக்கொள்ளும் பண்பு எல்லோருக்கும் இருப்பதில்லை..
சப்பைக்கட்டும், சவடாலும் இருக்கும் மதிப்பையும் குறைத்துவிடும்..
இந்திய அணியின் வெளியேற்றத்தில் எத்தனை ரசிகருக்கு மனவுடைவோ அதே போல அதேயளவு ரசிகர்கள் கொண்டாடியும் மகிழ்ந்தனர்.
இதற்கான காரணங்களில் ஒன்று இது...

இப்படியான கோமாளித் தனங்களால் இன்னும் இன்னும் இந்திய ரசிகர்களை சீண்டுவது தொடரப் போகிறது.

ஒரு அணிக்கு ரசிகராக இருப்பது தவறு அல்ல. ஆனால் அந்த அணியை மட்டுமே கொண்டாடி மகிழும் மனப்பாங்கும், விமர்சனங்களையும் தோல்விகளையும், உண்மையான தரவுகள் & கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளாத மனப்பாங்கே தவறானது.
சிறந்த, வெற்றி பெற்ற அணிகளை வாழ்த்துவதும் கூட உண்மையான ரசிகர்களின் பக்குவம் தான்.




11 comments:

சீனு said...

ஆனால், ஆஸி 121-க்கு விளையாடவில்லை என்று அறுதியிட்டு சொல்ல முடியுமா? :)

K.s.s.Rajh said...

//// குறிப்பாக அப்ரிடி தொடர்பிலும் எழுப்பப்பட்ட நிலையில் ஹபீஸ் கோபப்படாமல் பதில் அளித்ததும், எந்தக் குறைகளும் சொல்லாமல் தோல்வியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதும் அவர் மீது மதிப்பை உயர்த்தி இருக்கின்றன.////

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் பாகிஸ்தான் அணியை வழிநடத்தும் திறமை இவரிடம் இருக்கின்றது.

கடந்த சில ஆண்டுகளில் வழமையாக பாகிஸ்தான் அணித்தலைவர்கள் இம்சமாம் தொடங்கி அப்ரிடி,மாலிக்,யுனிஸ்கான்,ஏன் மிஸ்பா கூட விரைவில் உணர்ச்சி வசப்படும் தன்மை உடையவர்கள் ஆனால் ஹபீஸ் நிதானம் பொறுமை இவரை நிச்சயம் சிறந்த அணித்தலைவராக மாற்றும்

K.s.s.Rajh said...

//// குறிப்பாக அப்ரிடி தொடர்பிலும் எழுப்பப்பட்ட நிலையில் ஹபீஸ் கோபப்படாமல் பதில் அளித்ததும், எந்தக் குறைகளும் சொல்லாமல் தோல்வியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதும் அவர் மீது மதிப்பை உயர்த்தி இருக்கின்றன.////

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் பாகிஸ்தான் அணியை வழிநடத்தும் திறமை இவரிடம் இருக்கின்றது.

கடந்த சில ஆண்டுகளில் வழமையாக பாகிஸ்தான் அணித்தலைவர்கள் இம்சமாம் தொடங்கி அப்ரிடி,மாலிக்,யுனிஸ்கான்,ஏன் மிஸ்பா கூட விரைவில் உணர்ச்சி வசப்படும் தன்மை உடையவர்கள் ஆனால் ஹபீஸ் நிதானம் பொறுமை இவரை நிச்சயம் சிறந்த அணித்தலைவராக மாற்றும்

K.s.s.Rajh said...

////
சீனு said...
ஆனால், ஆஸி 121-க்கு விளையாடவில்லை என்று அறுதியிட்டு சொல்ல முடியுமா? :////

ஏன் உங்களுக்கு இப்படியான டவுட் வருது.அந்த 121 ஓட்டங்களை பெறவே அவுஸ்ரேலிலா எவ்வளவு தடுமாறியது அதுவும் மைக் ஹசியின் விக்கெட் விழுந்திருந்தால் அவுஸ்ரேலியாவின் நிலை அதோ கதிதான்.பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசியிருந்தனர்.

நேற்றய மேற்கிந்திய தீவுகளுடனான அரையிறுதி போட்டியை பாருங்கள் இந்த தொடரில் அவுஸ்ரேலியாவின் பலம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரகள் தான் அவர்கள் இருவரும் விரைவாக ஆட்டம் இழந்த போட்டிகளில் அவுஸ்ரேலியா தோற்றுள்ளது.

தோனி மாதிரி சப்பை காரணங்கள் சொல்லாம போங்க பாஸ்

திண்டுக்கல் தனபாலன் said...

/// சிறந்த, வெற்றி பெற்ற அணிகளை வாழ்த்துவதும் கூட உண்மையான ரசிகர்களின் பக்குவம் தான். ///

உண்மை... ரசிகனாக இருக்க வேண்டும்... வெறியனாக இருந்தால் இப்படித் தான்... இதனால் உண்மையான நட்புகள் கூட பிரிகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...!

கடவுள் said...

//டில்ஷான் தன் துடுப்பாட்டத்தில் சறுக்கியிருந்தாலும் அபாரமான களத்தடுப்பின் மூலம் குறைந்தபட்சம் பத்து ஓட்டங்களையாவது காப்பாற்றிக் கொடுத்திருந்தார்.

டில்ஷான் வேகமாக ஓட்டங்கள் குவிக்காவிட்டாலும் ஓரளவுக்கு ஓட்டங்களை எடுத்திருந்தார்...

//நேற்றைய போட்டியில் இலங்கை அணி வென்று அரையிறுதி நுழைந்திருப்பதானது இலங்கையின் இருவருக்கு தந்திருக்கும் இழப்பு பெரியது.

அரை ஒன்று கூடுதல் என்று நினைக்கிறேன்........

Nirosh said...

//இந்திய அணி, ரசிகர்கள் இதர விஷயங்கள் பற்றி பிறிதொரு நாள் ஆராயலாம்..// ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

பதிவு வழமை போல கலக்கல் அண்ணோய்:)

"ராஜா" said...

நீங்கள் என்னேதான் சொன்னாலும் இந்த உலககோப்பையில் மூன்று அணிகளால் பகிர பிரயத்தனமாக வெளியேற்றப்பட்ட அணி இந்தியாதான் ... அதுவும் ஆஸ்திரேலியா இந்தியாவை வெளியேற்றியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டி ஆடியது ... பாகிஸ்தானுடன் வீம்புக்காக மிகப்பெரிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்ற காரணம் இதுதான் ஆனால் ஆஸ்திரேலியாவின் இந்த செயலால் இப்பொழுது அதிகமாக பலனடைந்து இருப்பது இலங்கைதான் .... அதன் மண்ணில் அதை வீழ்த்தும் பலம் கொண்ட ஒரே அணியை அது கடைசிவரை சந்திக்காமலே சென்று விட்டது ..

in this tournament the team which rockz to the core is india only... but unfortunately their mistake against australians throw tem away... remember sl also perform very poor against SA... but it still on race... tis is caaled fate...

Anonymous said...

சிறப்பான அலசல்கள்..

Madhan said...

Sajeevan Thirumaran:- அண்ணா, இந்திய ரசிகர்களை நீங்கள் சினந்து கொள்வதாலோ அல்லது அவர்களை வெறுப்பேற்றுவதாக நீங்கள் நினைத்துக் கொள்வதிலோ எந்த வித நியாய்மும் இல்லை...காரணம் அவர்கள் இந்தளவு தூரம் நடந்து கொள்கிறார்கள் என்றால் அத‌ற்கு உங்களைப் போன்ற இலங்கை ரசிகர்கள் தான் முக்கால் வாசிக் காரணம்... நீங்கள் எல்லோரும் இலங்கை அணி வெற்றி பெற வேன்டும் என்பதை விட இந்தியா தோற்க வேண்டும் என்ற ஒரு மன நிலையில் இருப்பதற்கு கடந்த 5 வருடங்களாக இந்திய அணி இலங்கையை வெளுத்து வாங்கி வருவதைத் தான் காரணமாக எண்ணத் தோன்றுகின்றது... நான் ஒரு இந்திய ரசிகனாக ஒரு விடயத்தை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் நாங்கள் குறிப்பிட்ட ஒரு அணி தோற்றால் தான் இந்தியா அடுத்த சுற்றுக்கோ அல்லது இறுதிப் போட்டிக்கோ வர முடியும் என்ற ஒரு நிலை இருக்கும் பட்சத்தில் மாத்திரம் தான் அந்த குறித்த அணி தோற்க வேண்டும் என்று விரும்புவோம்... ஆனால் நீங்கள் இலங்கை அணிக்கும் அந்த போட்டிக்கும் சம்பந்தமே இல்லாத போட்டிகளில் கூட இந்தியா தோற்க வேண்டும் என்று வெறி பிடித்து அலைகிறீர்கள்..அதற்கு பல உதாரணங்களில் ஒன்று இம்முறை சுப்பர் 8 சுற்றில் நடந்த இந்திய தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டி ..எனது அனுபவத்தில் பல விடயங்கள் இவ்வாறு நடந்திருக்கின்றது...உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன்... நான் எனது பல்கலைக்கழகத்தில் எனது விடுதி சிற்றுண்டிச்சாலையில் 2011 ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அங்கிருந்தவர்களில் 95% ஆனவர்கள் இலங்கை ரசிகர்கள்...ஆனால் அன்று அவர்கள் முழுமையான பாகிஸ்தான் ரசிகர்களாக மாறியிருந்தார்கள்....பாகிஸ்தான் ரசிகர்கள் கூட அந்தள‌வுக்கு பாகிஸ்தானுக்கு support பண்ணியிருக்க மாட்டார்கள்....இதற்கு உண்மையான காரணம் இந்திய அணியை இறுதிப் போட்டியில் இலங்கை அணியால் விழுத்த முடியாது என்று அவர்கள் நிணைத்தது தான். இம்முறை சுப்பர் 8 சுற்றில் நடந்த இந்திய தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு மொக்கை support பண்ணியதற்கும் இதுதான் காரணம் ...இது உண்மையில் கோழைத்தனம் என்பதைத் தவிர வேறு எவ்வாறு கூறுவது???... இது போன்ற சம்பவங்கள் தான் ஒவ்வொரு இந்திய ரசிகனுக்கும் ஆக்ரோஷத்தை தூண்ட உள்ளார்ந்த காரணம்... விராட் கோஹ்லியை வன் சொல் வீரர் என்று கூறுகின்றீர்களே உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் விராட் கோஹ்லியை ஆட்டமிழக்கச் செய்த டில்ஷான் கோஹ்லியை நோக்கி அழுது அழுது "fuck fuck" என்று கூறியதை நீங்கள் ஒருவரும் பார்க்கவில்லையா? பார்க்காவிட்டால் youtube இல் சென்று பார்த்து விட்டு மற்றவர்களைப் பற்றி கதைக்க வாருங்கள்...
Thank you Very much Sajee

Vithyarajan said...

Madhan hats off to you! இததான் நானும் லோஷன் அண்ணாவுக்கு சொல்றேன் புரிஞ்சிக்க மாட்டேங்குறார். நானும் இந்த தடவ T20 Semi க்கு மறுநாள் நடந்த கதை ஒன்றை சொல்றேன். எங்க department canteen ல ரெண்டு வயதான சிங்களவர்கள் எனக்கு முன்னால் சாப்பிடுகொண்டிருந்த போது கூறியது.

நபர் 1: அது எப்படி இந்தியா நேற்று வெளியேறியது
நபர் 2: எனக்கும் சரியா சொல்ல தெரியல..ஆனா ஏதோ ரன் ரேட் பிரச்சனையாம்

நபர்1: எது எப்படியோ இந்தியா வெளியில போனதே போதும்
நபர் 2: எப்ப பாரு அவங்க கிட்டே தோற்கிறோம்..(கெட்டவார்தையில்(P..) தமிழனை திட்டி)எங்க போனாலும் இவங்க தொல்லை..

என்னை அவர்களுக்கு தமிழ் என்று தெரியாது. தெரிந்திருந்தால் சொல்லமாட்டார்கள். ஆனால் உள்ளுணர்வு அப்படியானது.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner